மதுரை
மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
மதுரை (ஆங்கிலம்: Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இது மதுரை மாவட்டத்தின் தலைநகர் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில், இதுவும் ஒன்று. இது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், அடுத்த, நகர்புற பரப்பளவு அடிப்படையில், மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். மக்கள்தொகை அடிப்படையில், இந்நகரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும்.[4][5] பதினைந்து லட்சம் மேல் மக்கட்தொகை கொண்ட மாநகரம். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம், இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
மதுரை | |
---|---|
மாநகராட்சி[1] | |
ஆள்கூறுகள்: 9.925200°N 78.119800°E / 9.925200; 78.119800 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
பகுதி | பாண்டிய நாடு |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | மதுரை மாநகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
• சட்டமன்ற உறுப்பினர் | பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி) பி. மூர்த்தி (மதுரை கிழக்கு) ஜி. தளபதி (மதுரை வடக்கு) எம். பூமிநாதன் (மதுரை தெற்கு) செல்லூர் கே. ராஜூ (மதுரை மேற்கு) |
• மாநகர முதல்வர் | காலியிடம் |
• மாவட்ட ஆட்சியர் | மா. சௌ. சங்கீதா, இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மாநகராட்சி[2] | 147.97 km2 (57.13 sq mi) |
• Metro | 317.45 km2 (122.57 sq mi) |
ஏற்றம் | 158 m (518 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மாநகராட்சி[3] | 10,17,865 |
• தரவரிசை | 3 |
• அடர்த்தி | 6,425/km2 (16,640/sq mi) |
• பெருநகர் | 14,65,625 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 625 xxx |
தொலைபேசி குறியீடு | 0452 |
வாகனப் பதிவு | TN-58 (தெற்கு), TN-59 (வடக்கு) and TN-64(மத்தி) |
சென்னையிலிருந்து தொலைவு | 461 கி.மீ (287 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 131 கி.மீ (86 மைல்) |
சேலத்திலிருந்து தொலைவு | 235 கி.மீ (146 மைல்) |
கோவையிலிருந்து தொலைவு | 212 கி.மீ (132 மைல்) |
நெல்லையிலிருந்து தொலைவு | 163 கி.மீ (101 மைல்) |
இணையதளம் | madurai corporation |
இந்தியத் துணைக்கண்டத்தில், தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று.[6] பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை, தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 2-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.[7]
மௌரியப் பேரரசின் அமைச்சர் கௌடில்யர் (பொ.ஊ.மு. 370 – பொ.ஊ.மு. 283), கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ் (பொ.ஊ.மு. 350 – பொ.ஊ.மு. 290) ஆகியோரின் குறிப்புக்களில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. மரபுச் சின்னமாகப் பார்க்கப்படும் மதுரை நகரம், பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.
நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. நகரில், ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சித்திரைத் திருவிழா என்று பொதுவாக அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து இலட்சம் பேராற் கண்டுகளிக்கப்படும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான அவனியாபுரம் பகுதியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவல், நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள், பெயர் பெற்ற நிகழ்வுகளாகும்.
மதுரை, தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், இரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன.[8] தகவல் தொழில்நுட்பத் துறையில், இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு, உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. மதுரை மருத்துவக்கல்லூரி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரி,[9] மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற அரசு கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன.[10] நகர நிர்வாகம், 1971-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது. இது சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய மாநகராட்சி ஆகும். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையும் இங்கு உள்ளது. இது இந்தியாவில், மாநிலத் தலைநகரங்களுக்கு வெளியில் உள்ள நீதிமன்றங்களில் ஒன்றாகும். மதுரையில், பன்னாட்டுச் சேவைகளை வழங்கும் வானூர்தி நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவின் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தெரிவு செய்யப்பட்டது.[11]
மதுரை 147.99 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தகவலின்படி, மதுரை நகரில் 1,017,865 பேர் வசிக்கின்றனர்.[12]