உடும்பன்குளம் படுகொலைகள், 1986
From Wikipedia, the free encyclopedia
உடும்பன்குளம் படுகொலைகள் அல்லது அக்கரைப்பற்று படுகொலைகள் 1986 பெப்ரவரி 19 இல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நகருக்கு அருகாமையில் உள்ள உடும்பன்குளம் என்ற சிறு வேளாண்மைக் கிராமத்தில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் ஏறத்தாழ 80 இலங்கைத் தமிழ் வேளாண்மை மக்கள் இலங்கை படைத்துறையினர், ஊர்காவல்படையினர் எனச் சந்தேகிக்கப்படுவோரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[1][2]
உடும்பன்குளம் படுகொலைகள் | |
---|---|
இடம் | உடும்பன்குளம், அக்கரைப்பற்று, இலங்கை |
ஆள்கூறுகள் | 7°13′N 81°51′E |
நாள் | பெப்ரவரி 19, 1986 (+6 கிஇநே) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | இலங்கைத் தமிழ் மக்கள் |
தாக்குதல் வகை | துப்பாக்கிச் சூடு |
ஆயுதம் | துப்பாக்கிகள் |
இறப்பு(கள்) | 80 |
தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் | இலங்கை படைத்துறை, ஊர்காவல்படை |
இப்படுகொலைகள் பெப்ரவரி 19 இடம்பெற்றிருந்தாலும், இது பற்றிய தகவல்கள் சில நாட்களுக்குப் பின்னர் இக்கிராமத்திற்கு சென்றிருந்த உள்ளூர் சமூக ஆர்வலர்கள் மூலம் தெரிய வந்தது. இவர்களின் கூற்றுப் படி, நெல் வயல்களில் வேளாண்மையில் (சூடடிப்பில்) ஈடுபட்டிருந்தோர் மீது திடீரென அங்கு வந்த இலங்கை மற்றும் முஸ்லிம் ஊர்காவல்படையினர் வானை நோக்கிச் சுட ஆரம்பித்தனர், பெண்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அங்கிருந்த ஆண்களின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு தரையில் அமர விடப்பட்டனர். இவர்கள் பின்னர் நெல் வயல்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் உடல்கள் அங்கிருந்த வைக்கோல் குவியல்களுடன் போடப்பட்டு எரிக்கப்பட்டன. வயலில் பல துப்பாக்கிச் சன்னங்கள் கண்டெடுக்கப்பட்டன.[2][3]
இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60[4] முதல் 103[5] வரை எனத் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.