ஆர்க்கிமிடீசின் வளைக்கவராயம்
From Wikipedia, the free encyclopedia
ஆர்க்கிமிடீசின் வளைக்கவராயம் (trammel of Archimedes) என்பது நீள்வட்டத்தை பிறப்பிக்கும் ஒரு இயங்கமைவாகும்.[1] வளைக்கவராயத்தில் இரு செங்குத்துத் தடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட நாடாக்கள் உள்ளன. அவற்றுடன் ஒரு கட்டையானது சுழல்மையங்களைக்கொண்டு கட்டையின் இரண்டு நிலையான இடங்களில் இணைக்கப்பட்டுள்ளது.
நாடாக்கள் அவற்றி தடங்களில் முன்னும் பின்னும் நகரும்போது கட்டையின் மீதுள்ள அனைத்துப் புள்ளிகளும் நீள்வட்டப் பாதையில் நகர்கின்றன. கட்டையின் இயக்கமானது நீள்வட்ட நகர்வு எனப்படுகிறது. இந் நீள்வட்டத்தின் அரை அச்சு நீளங்கள் a, b இரண்டும் கட்டையின் மீதுள்ள புள்ளியிலிருந்து இரு சுழல் மையங்களுக்குள்ள தூரங்களாக இருக்கும்.
சுழல் மையங்கள் உருவாக்கும் நேர்கோடுகள், நீள்வட்டத்தின் சிறப்புவகையாக இருக்கும். இதில், ஒரு அச்சின் நீளம் சுழல்மையங்களுக்கு இடைப்பட்ட தூரத்தைப்போல இருமடங்கும், மற்றொரு அச்சின் நீளம் பூச்சியமாகவும் இருக்கும்.
சுழல்மையங்களுக்கிடைப்பட்ட நடுப்புள்ளியானது அமைப்பின் செங்குத்துத் தடங்கள் சந்திக்கும் புள்ளியை மையமாகக் கொண்ட வட்டப்பாதையில் நகரும். இந்த வட்டமும் நீள்வட்டத்தின் சிறப்புவகையாகவே அமையும். இந்த சிறப்பு நீள்வட்டத்தில் இரு அச்சுகளும் சமநீளமுள்ளவையாக இருக்கும். வட்டப்பாதையின் விட்டம் சுழல்மையங்களுக்கு இடைப்பட்ட தூரமாக இருக்கும். நகர்வின் திசையானது வளைக்கவராயத்தின் சுழல்வின் திசைக்கு எதிரானதாக இருக்கும்.
ஆர்க்கிமிடீசின் வளைக்கவராயத்தின் மரவடிவங்கள், "நீள்வட்டவரைவி" எனப்படும் நீள்வட்டங்கள் வரைவதற்கும் வெட்டி எடுப்பதற்குமான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் விளையாட்டுக் கருவிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.