இராயப்பு யோசேப்பு
From Wikipedia, the free encyclopedia
வண இராயப்பு யோசப்பு (Rayappu Joseph, 16 ஏப்ரல் 1940[1] - 1 ஏப்ரல் 2021) இலங்கையின் மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரும் ஆவார்.[2][3][4][5]
அதி வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப்பு | |
---|---|
மன்னார் ஆயர் | |
சபை | கத்தோலிக்க திருச்சபை |
மறைமாநிலம் | கொழும்பு |
மறைமாவட்டம் | மன்னார் |
ஆட்சி துவக்கம் | சூலை 6, 1992 |
ஆட்சி முடிவு | சனவரி 14, 2016 |
முன்னிருந்தவர் | தோமசு சௌந்தரநாயகம் |
பின்வந்தவர் | கிங்ஸ்லி சுவாம்பிள்ளை (பரிபாலகர்) |
பிற தகவல்கள் | |
பிறப்பு | (1940-04-16)ஏப்ரல் 16, 1940 நெடுந்தீவு, இலங்கை |
இறப்பு | ஏப்ரல் 1, 2021(2021-04-01) (அகவை 80) யாழ்ப்பாணம், இலங்கை |
குடியுரிமை | இலங்கைத் தமிழர் |
இல்லம் | மன்னார் |
படித்த இடம் | பரப்புரைக் கல்லூரி, உரோம் |
இராயப்பு ஜோசப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[6][7] இவரது தந்தை ஒரு சுதேச வைத்தியர். தனது ஆரம்பக் கல்வியை நெடுந்தீவிலும் முருங்கனிலும் ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் பயின்றார். உயர்கல்வியை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் பயின்றார்.[8][9] யாழ்ப்பாணத்தில் தேசிய செமினறியில் இணைந்து சமயக் கல்வியைத் தொடர்ந்தார். 27வது அகவையில் குரு பட்டமும் பெற்றார். யோசப்பு திருச்சபைச் சட்டத்தில் முனைவர் பட்டத்தை உர்பானியானா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[7]
1967 இல் குருவானவராக தனது பணியை ஆரம்பித்தவர் 1971 இல் முருங்கன் உதவி பாதிரியாராக (pastor) ஆனார். 1984 ஆம் ஆண்டில் ரோமில் உள்ள பரப்புரைக் கல்லூரியில் திருமறைச் சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 1992 சூலையில் மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 1992 அக்டோபரில் திருநிலைப்படுத்தப்பார்.[6][7] 2015 நடுப்பகுதியில் சுகவீனமுற்ற இராயப்பு தனது ஆயர் பதவியைத் துறந்தார். இவரது பதவித் துறப்பை திருச்சபை சட்ட எண் 401 பகுதி 1க்கு அமைவாக, திருத்தந்தை பிரான்சிசு 2016 சனவரி 14 இல் ஏற்றுக் கொண்டார். மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமிக்கப்படும் வரை திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மன்னார் மறைமாவட்டத்தின் அப்போத்தலிக்க பரிபாலகராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார்.[5][10]
இராயப்பு யோசப்பு ஈழப்போரின் போது இலங்கை அரசு, மற்றும் இலங்கைப் படையினரின் பங்களிப்புக் குறித்தும், நாட்டின் மனித உரிமை மீறல் குறித்தும் பெரிதும் விமரிசனம் செய்து வந்தார்.[11][12] இதன் மூலம் அவருக்கு அரச ஆதரவாளர்களின் அசுறுத்தல்களை எதிர்நோக்கவேண்டி வேண்டியிருந்தது.[13]