ஈழை நோய்
மூச்சுத்திணரல் நோய் / From Wikipedia, the free encyclopedia
ஈழை நோய் அல்லது ஈளை அல்லது மூச்சுத்தடை நோய் (Asthma, ஆஸ்துமா) என்பது நுரையீரலில் ஏற்படும் நீடித்த/நாட்பட்ட (chronic) அழற்சியினால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய (recurrent) மூச்சு எடுத்தலில்/விடுதலில் சிரமத்தைக் கொடுக்கும் மூச்சுத்திணறல்/மூச்சிரைப்பு நிலை ஆகும். இதற்கு முக்கியக் காரணம் சுவாசக் குழாய்களின் உட்படலத்தில் ஏற்படும் வீக்கத்தால் காற்று உட்சென்று வெளியேறும் பாதையில் ஒடுக்கமேற்பட்டு காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் வீழ்ச்சியாகும். சுவாசக் குழாய்களைச் சுற்றியிருக்கும் தசைகளில் ஏற்படும் மீளும் தன்மை கொண்ட (reversible) சுருக்கம் மற்றும் இறுக்கம் போன்றவையும், நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் புண்பட்ட நிலை, வீக்கம் என்பனவும் அசெளகரியமான நிலையை ஏற்படுத்தும். இதன் தீவிரத்தன்மையும் (severity) நிகழ்வுகளுக்கிடையிலான இடைவெளியும் (frequency) மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இந்த நோய் எல்லா வயதினரிலும் காணப்படுவதாயினும் பொதுவாக குழந்தைகளிலேயே ஆரம்பிக்கும்[1]. இந்த நோயின் முக்கியமான அறிகுறிகளாக இழுப்பு, இருமல், நெஞ்சு இறுக்கம், விரைவான குறுகிய மூச்சு என்பன அமைகின்றன. மீண்டும் மீண்டும் இந்த நோயின் பாதிப்புக்கு உட்படுபவர்களுக்கு தூக்கமின்மை, பகலில் களைப்பு போன்றவை இருப்பதால், அவர்களால் தமது நாளார்ந்த செயல்களைச் சரிவரச் செய்ய முடியாத நிலை காணப்படும்.
ஈழை நோய் | |
---|---|
peak flow meter | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | pulmonology, நோயெதிர்ப்பியல் |
ஐ.சி.டி.-10 | J45. |
ஐ.சி.டி.-9 | 493 |
ம.இ.மெ.ம | 600807 |
நோய்களின் தரவுத்தளம் | 1006 |
மெரிசின்பிளசு | 000141 |
ஈமெடிசின் | med/177 emerg/43 |
பேசியண்ட் ஐ.இ | ஈழை நோய் |
ம.பா.த | C08.127.108 |
இந்த ஈழை நோயானது தொய்வு, இழுப்பு, முட்டு, சுவாச முட்டு, இழைப்பு நோய், மூச்சுத் தடை நோய், மூச்சுப் பிடிப்பு நோய் என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் கொடுத்துள்ள 2011 ஆம் ஆண்டு மே மாத அறிக்கையின்படி, உலகில் 235 மில்லியன் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது[2]</ref>. ஏனைய நீடித்த/நாட்பட்ட நோய்களுடன் ஒப்பிடுகையில் இறப்பு வீதம் குறைவாக இருப்பினும், 2005 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 255000 மக்கள் இந்நோயால் இறந்திருப்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது[3][4]. குழந்தைகளில் வரும் நாட்பட்ட நோய்களில் மிக அதிகளவில் இருப்பதும் இந்நோயே என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது[2]. அத்துடன் இந்நோயுள்ளவர்களில் 80% மானவர்கள் குறைவான, அல்லது குறைவான-நடுத்தரமான வருமானம் கொண்ட நாடுகளில் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது[2].
ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகையில் 7 சதவீத மக்களை ஆஸ்துமா பாதித்துள்ளது.[5][6] பிரித்தானிய மக்களில் 6.5 சதவீத மக்களும் உலகளவில் மொத்தம் 300 மில்லியன் மக்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.[7]அமெரிக்காவில், ஒரு வருடத்தில் 4000 மக்கள் இறப்பதற்கு இந்த ஈழைநோய் காரணமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் உலகில் 100 மில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்படக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது[3]
இந் நோய் தீவிரமடையும் நிலையில் அவசரச் சிகிச்சையாக குறுகிய காலத்திலேயே செயல்புரியும் பீட்டா-2 இயக்கிகள் சுவாசத்தோடு உள்ளிழுக்கப்படும். ஈழைநோயைத் தூண்டும் காரணிகளான ஒவ்வாமை ஊக்கிகள் அல்லது அதிவேகமாக வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலமாக ஈழைநோய்ப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். அவசியமேற்பட்டால் கார்டிகோஸ்டீராய்டுகள் (corticosteroids) மற்றும் நீண்ட நேரம்வரை செயல்புரியும் பீட்டா-2 இயக்கிகள் போன்றவை சுவாசத்தின் வழியாக உள்ளிழுக்கப்படுதல் போன்ற மருந்துச் சிகிச்சையின் மூலமாகவும் ஈழைநோயின் பாதிப்பைத் தடுக்கலாம்.[8][9] லூக்காட்ரியன் (Leukotriene) எதிர் மருந்து, கார்டிகோஸ்டீராய்டுகளை விட ஆற்றல் குறைவானது. ஆனால் இதைப் பயன்படுத்துவதினால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. மெப்போலிஸுமாப் (mepolizumab) மற்றும் ஓமாலிஸுமாப் (omalizumab) போன்ற ஒற்றையணு பிறபொருளெதிரி மருந்துகள், சில நேரங்களில் ஆற்றல் வாய்ந்தவையாக உள்ளன. நோய் வரப்போகின்றது என்பதை முதலே தெரிந்துகொண்டு தகுந்த நேரத்தில் தகுந்த சிகிச்சையை எடுப்பது இந்நோயில் மிகவும் பலனளிப்பதாய் உள்ளது.
நாட்பட்டுத் தடைச்செய்யும் நுரையீரலுக்குரிய நோய் மற்றும் நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றைப் போல் அல்லாமல் ஈழைநோயின் அழற்சி மீளக்கூடியதாக இருக்கும். காற்றேற்ற விரிவு போல் இல்லாமல் ஈழைநோயானது மூச்சுக்குழாய்களைப் பாதிப்பதே அல்லாமல் மூச்சுச் சிற்றறைகளைப் பாதிப்பதில்லை. ஈழைநோயானது காற்றுவழிகளில் ஏற்படும் ஒரு பொதுவான நாட்பட்ட கோளாறாகும் என்று தேசிய இதயம் நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனம் வரையறுக்கிறது. மாறுபடும் நிலை, மற்றும் திரும்பத் திரும்ப ஏற்படும் அறிகுறிகள், காற்றோட்ட அடைப்பு, மூச்சுக்குழாய்ச் சிரை ஹைப்பர்ரெஸ்பான்சிவ்னஸ் (hyperresponsiveness) (பிராங்கஇசிவு) மற்றும் ஒரு அழற்சியாக கருதப்படுகிறது.[10]
வளர்ந்த நாடுகளில் இருக்கும் பொதுமக்கள் ஈழைநோய்த் தாக்கநிலையின் மேல் தங்கள் கவனத்தைத் தற்போது திருப்பியுள்ளனர். நகர்ப்புறக் குழந்தைகளில் நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் இந்த நோயினால் பாதிக்கப்படுவதே இந்நோய் அதிவேகமாகப் பரவுவதற்கான காரணமாகக் கருதப்படுகிறது.[11]