From Wikipedia, the free encyclopedia
சத்துருக்கொண்டான் படுகொலை (Sathurukondan massacre) 1990 செப்டம்பர் 9 அன்று இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் பகுதியில் தங்கியிருந்த 184 இலங்கைத் தமிழ் அகதிகள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும்.[1][2][3][4][5] இது தொடர்பாக இலங்கை அரசு இரு விசாரணைக் குழுக்களை அமைத்தும், எவரும் கைது செய்யப்படவில்லை.
சத்துருக்கொண்டான் படுகொலைகள் | |
---|---|
இடம் | மட்டக்களப்பு, இலங்கை |
ஆள்கூறுகள் | 7°42′58″N 81°42′0″E |
நாள் | செப்டம்பர் 9, 1990 (+6 கி.இ.நே) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | இலங்கைத் தமிழ் பொதுமக்கள் |
தாக்குதல் வகை | வெட்டி, எரியூட்டப்படல் |
ஆயுதம் | வாள்கள், கத்திகள் |
இறப்பு(கள்) | 184 |
காயமடைந்தோர் | 1 |
தாக்கியோர் | இலங்கைத் தரைப்படை |
இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும் அவரது 3 மாதக்குழந்தையும் படையினரால் "மண்ணா" கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.[3] அத்தோடு 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர்.[3]
சத்துருக்கொண்டான் கிராமம் மட்டக்களப்பு நகருக்கு அருகே அமைந்துள்ளது. 1990 செப்டம்பர் 9 மாலை 5:30 மணியளவில், சீருடை அணிந்த இராணுவத்தினரும், மற்றும் சில ஆண்களும் கிராமத்தினுள் நுழைந்து கிராம மக்கள் அனைவரையும் வீதியில் கூடுமாறு பணித்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணைகள் முடிந்த பின்னர் அவர்கள அனைவரும் விடுவிக்கப்படுவர் என அவர்கள் உறுதியளிக்கப்பட்டனர்.
இத்தாக்குதலில் உயிர் தப்பியதாகக் கருதப்படும் ஒரேயொருவர் கந்தசாமி கிருஷ்ணகுமார் (அகவை 21). இவர் பின்னர் கொடுத்த சாட்சியத்தில்:
ஐம்பது கொமாண்டோக்கள் தம்மில் 150 பேரை சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்குக் கொண்டு சென்றனர். தாம் அங்கு செல்லும் போது மாலை 7.00 அல்லது 8.00 மணியிருக்கலாம். இவர்களில் இருந்து பிரிக்கப்பட்ட நான்கு பேர் கத்திகளாலும், வாள்களாலும் தாக்கப்பட்டு முகாமிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டனர். மீதமிருந்த அனைவரும் டயர்களுடன் சேர்த்து எரிக்கப்பட்டனர்.[1]
காயமடைந்த கிருஷ்ணகுமார் இருட்டில் மறைந்து ஒருவாறு தப்பி வெளியேறினார். மொத்தம் 184 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.[1][3][6]
இலங்கை அரசாங்கத்தினால், இப்படுகொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தவென இரு விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஓய்வுபெற்ற நீதிபதி கே. பாலகிட்ணர் இவ்விசாரணைகளை நடத்தவென அக்காலத்தில் ஆட்சியிலிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார். நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் சனாதிபதியை வேண்டிக்கொண்டார். இதுவரை இவ்வாறான சட்ட நடவடிக்கைகளோ, காவல்துறை விசாரணைகளோ மேற்கொள்ளப்பட்டதாக தகவலெதுவும் இல்லை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.