தமிழரசுக்கட்சியின் திருமலை மாநாடு
From Wikipedia, the free encyclopedia
1956 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரிகோணமலை நகரில் நடத்தப்பட்ட சமஷ்டிக்கட்சி (தமிழரசுக் கட்சி) யின் முக்கியத்துவம் மிக்க மாநாடொன்றே திருமலை மாநாடு என்ற பெயரால் குறிப்பிட்டழைக்கப்படுகிறது.
1956ம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கையின் அரசாங்கத்தால் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டதனை தொடர்ந்து இம்மாநாடு திரிகோணமலையில் நடத்தப்பட்டது.
திருமலை மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
"தீங்கிழைப்பதாக அமைந்துள்ள இன்றைய ஒற்றையாட்சி முறை அகற்றப்பட்டு, தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் ஒன்று அல்லது மேற்பட்ட பிரிவுகளைக் கொண்டதும் - நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதும் - வெளியார் தலையீட்டிலிருந்து இலங்கையை பாதுகாப்பதை உறுதி செய்வதும் - சுயநிர்ணய உரிமையும் தன்னாதிக்கமும் உள்ளதும் பகுத்தறிவுக்கேற்றதுமான - இணையாட்சி முறையில் ஜனநாயக யாப்புமுறைக்குட்பட்டஒன்று அல்லது மேற்பட்ட மொழிவழி அரசுகளை உருவாக்கவேண்டும்"
சமஷ்டிக்கட்சி தனது அரசியல் நோக்கங்களிலிருந்து கீழிறங்கி நிற்கும் தளம்பல் நிலையை இத்தீர்மானம் பிரதிபலிப்பதாக திருமலை மாநாட்டின் தீர்மானம் மீதான எதிர் நிலை விமர்சனம் ஒன்று முன்வைக்கப்படுகின்றது. ச்மஷ்டிக்கட்சியின் ஆரம்பிப்பு உரையின்போது இலங்கையில் ஒரு சிங்கள மாகாணமும் தமிழ் மாகாணமும் அமைந்து மத்திய அரசு ஒன்று ஏற்பட வேண்டும் என்ற கருத்து , கோரிக்கையாக வலுவாக முன்வைக்கப்பட்டது. ஆனால் திருமலை தீர்மானத்திலோ, அக்கோரிக்கையிலிருந்து கீழிறங்கி ஒன்று அல்லது மேற்பட்ட பிரிவுகளைக் கொண்டதும் என்ற வார்த்தையை பிரயோகித்திருப்பது குறித்தே இவ்விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது