பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை
From Wikipedia, the free encyclopedia
பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை (ஆங்கிலம்: International Thermonuclear Experimental Reactor (ITER)) ஆங்கிலத்தில் ஈடெர் என்று உச்சரிக்கப்படுகிறது. இக்கட்டுரையிலும் பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை என்ற பதத்திற்குப் பதிலாக ஈடெர் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. ஈடெர் என்பது ஆய்வும் பொறியியலும் கலந்த ஒரு பன்னாட்டுத் திட்டமாகும். இது தற்போது உலகின் மிகவும் பெரிய மிகவும் முன்னேறிய ஆய்வு டோகாமாக் அணுக்கரு இணைவு உலையை நிறுவி வருகிறது. இது ஐரோப்பாவில் ஃப்ரான்சின் தெற்குப் பகுதியிலுள்ள கேடெராச்செ என்ற இடத்தில் கட்டப்பட்டு வருகிறது.[1] ஈடெரின் டோகாமாக் ஆனது இயற்பியலின் ஒரு பிரிவான பிளாஸ்மா இயற்பியலில் இருந்து மாறி அணுக்கரு இணைவு மூலம் மின்னாற்றல் உற்பத்தி செய்யும் உலைகளை அமைக்கும். இத்திட்டத்தின் உறுப்பினர்களாக ஐரோப்பிய ஒன்றியம், சப்பான், சீனம், அமெரிக்கா, தென் கொரியா, இந்தியா, உருசியா ஆகிய நாடுகள் உள்ளன. திட்ட வழங்குனரான ஐரோப்பிய ஒன்றியம் ஆனது மொத்த செலவில் 45%ஐ ஏற்றுக் கொள்ளும். மற்ற உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் 9% என்ற அளவில் செலவை ஏற்றுக் கொள்ளும்.[2][3][4] இந்த அணுக்கரு இணைவு உலையானது 50 மெகா வாட் (MW) திறனை உள்ளீடாகப் பெற்று 500 மெகா வாட் திறனையோ உள்ளீடை விட 10 மடங்கு திறனையோ வெளியீடாகத் தரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.[5] இந்த உலையின் கட்டுமானம் 2008ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் முதல் ஆய்வு 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.[6] இது செயல்படத் தொடங்கினால் அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி ஆற்றல் உற்பத்தி செய்யும் முதல் உலையாக இருக்கும்.