பிரான்சிஸ்கோ கோயா
From Wikipedia, the free encyclopedia
பிரான்சிசுகோ யோசு டி கோயா ஒய் லூசியெண்டசு சுருக்கமாக பிரான்சிசுகோ கோயா (Francisco Goya,) என்றழைக்கப்படுகிறார். மார்ச் 30, 1746 - ஏப்ரல் 16, 1828 வரையிலான காலத்தில் இவர் எசுபானியாவின் கலை இலக்கிய அறிவுசார் இலக்கியத்தின் ஓவியராகவும், அச்சு மூலம் ஓவியத்தை உருவாக்கும் அச்சோவியராகவும் இருந்தார். இவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த மிக முக்கியமான எசுப்பானியக் கலைஞராகக் கருதப்படுகிறார், மேலும், வாழ்க்கை முழுவதும் ஒரு வர்ணனையாளராகவும் வரலாற்றாளராகவும் நீண்ட காலத்திற்கு இருந்தார். தனது வாழ்நாளில் மிகப்பல வெற்றிகளைப் பெற்ற கோயா பழைய தலைமுறை ஓவியர்களில் கடைசியானவராகக் கருதப்பட்ட அதே வேளை நவீன ஓவியர் தலைமுறையின் முன்னோடிகளுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவருடைய ஓவியங்களில் காணப்பட்ட மறைமுக, தற்சார்புத் தன்மை (subjective) கொண்ட கூறுகளும், நிறப்பூச்சுக்களை இவர் துணிவுடன் கையாண்ட விதமும் இவருக்குப் பின்வந்த தலைமுறை ஓவியர்களுக்கு எடுத்துக் காட்டுகளாக அமைந்தன. அவர் நவீன காலத்தின் மிகச்சிறந்த உருவப்படம் வரைபவர்களில் ஒருவராகவும் இருந்தார் [1].
பிரான்சிஸ்கோ கோயா Francisco Goya | |
---|---|
கோயா தன்னைத்தானே வரைந்தது. | |
தேசியம் | ஸ்பானியர் |
அறியப்படுவது | ஓவியம், அச்சாக்கம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | La maja desnuda, 1800 La maja vestida, 1803 The Second of May 1808, 1814 |
1746 ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள அரகோன் பகுதியில் உள்ள பியூவண்டெடொடோசு நகராட்சியில் ஒரு சிறிய குடும்பத்தில் கோயா பிறந்தார். அவர் யோசு லுசான் ஒய் மார்டினெசிடன் 14 வயதில் இருந்து ஓவியம் வரையக் கற்றுக் கொண்டார். பின்னர் அன்டன் ரபேல் மெங்சுவிடன் பயில்வதற்காக மாட்ரிட்டிற்கு சென்றார். 1773 இல் யோசபா பேயுவை கோயா மணந்தார்; இருவரது வாழ்விலும் கிட்டத்தட்ட தொடர்ச்சியான கருத்தரிப்புகள் மற்றும் கருச்சிதைவுகள் நிகழ்ந்தன. கோயா 1786 ஆம் ஆண்டில் எசுபானிய அரசவையில் ஓர் அரச ஓவியராக ஆனார். அவரது தொழில் வாழ்க்கையின் இந்த ஆரம்ப பகுதியில் எசுபானிய பிரபுத்துவம் மற்றும் அரசகுடும்ப ஓவியங்கள் வரையப்பட்டன. மற்றும் ராக்கோகோ பாணியிலான படங்கள் அரண்மனைக்காக உருவாக்கப்பட்டன.
கோயா பாதுகாக்கப்பட்ட ஒரு நபராக இருந்தார், இவருடைய கடிதங்களும் எழுத்துக்களும் காப்பாற்றப்பட்டாலும் இவருடைய எண்ணங்களைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அவர் 1793 ஆம் ஆண்டில் கடுமையான மற்றும் நோய் அறிகுறியற்ற ஒரு நோயால் பாதிக்கப்பட்டார், அதனால் அவருடைய காதுகள் பாதிக்கப்பட்டு முற்றிலும் கேட்கும் சக்தியை இழந்தார். 1793 க்குப் பிறகு அவரது ஓவியங்களில் இருண்மையும் அவநம்பிக்கைக்கும் ஆளானது. கோயாவின் பிற்கால வரைபட ஒவியங்கள், சுவர் ஓவியங்கள், அச்சோவியங்கள் யாவும் தனிப்பட்ட, சமூக மற்றும் அரசியல் மட்டங்களில் ஒரு இருண்ட பார்வையை பிரதிபலித்தன. மாறாக அவரது சமூகநிலையின் ஏற்றம் வேறுபட்டது. பிரான்சுடன் மானுவல் கோடாய் ஒரு சாதகமற்ற ஒப்பந்தத்தை செய்த ஆண்டான 1795 ஆம் ஆண்டில் ராயல் அகாடமியின் இயக்குநராக கோயா நியமிக்கப்பட்டார், 1799 இல் கோயா எசுபானியாவின் மிகவுயர்ந்த அரசவை ஓவியர் விருதைப் பெற்றார். 1790 களின் பிற்பகுதியில், கோடாய் ஆணையிட்டதைத் தொடர்ந்து மிகச்சிறந்த ஓவியமான தனது லா மயா டென்நூடாவை வரைந்து முடித்தார். 1801 இல் எசுபானியாவின் நான்காம் சார்லசு மற்றும் அவரது குடும்பத்தை ஓவியமாகத் தீட்டினார்.
1807 ஆம் ஆண்டில் நெப்போலியன் பிரெஞ்சு இராணுவத்தை எசுபானியாவுக்குள் கொண்டு வந்தார். தீபகற்ப போரின் போது கோயா மாட்ரிட்டில் இருந்தார், இது அவரை ஆழமாக பாதித்திருப்பதாக தோன்றுகிறது. பொதுமக்களிடம் தனது எண்ணங்களை கோயா பேசவில்லை என்றாலும், அவரது இறப்புக்குப் பின் 35 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட போர் பேரழிவுகள் வரிசையில் அவரது 1814 ஓவியங்கள் தி செகண்டு ஆப் மே 1808 மற்றும் தி தேர்டு ஆம் மே 1808 போன்ற ஓவியங்களிலிருந்து உய்த்துணரலாம். காப்ரிச்சோசு மற்றும் லாஸ் டிசுபெரேட்சு செதுக்கல் தொடர்கள் மற்றும் பித்துநிலை, மனநலக் காப்பகங்கள், மந்திரவாதிகள், அற்புதமான உயிரினங்கள் மற்றும் சமய மற்றும் அரசியல் ஊழல்கள் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட பலவிதமான ஓவியங்கள் போன்ற கோயாவின் இடைக்காலப் படைப்புகள் நாட்டின் விதி மற்றும் அவரது சொந்த மன மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவை குறித்து கவலை கொண்டன.
1819-1823 ஆம் ஆண்டுகளில் கருப்பு ஓவியங்கள் என்ற பெயரில் கோயா வரைந்த 14 ஓவியங்கள் இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றன. செவிட்டு மனிதனின் வீடு என்ற பொருள் கொண்ட "குய்ன்டா டெல் சர்டோவின் சுவர்களில் எண்ணெய் ஓவியங்களாக இவை வரையப்பட்டன. எசுபானியாவின் அரசியல் மற்றும் சமூக முன்னேற்ற மாயைகளிலிருந்து விடுபட்டு இங்கு அவர் தனிமையில் வாழ்ந்தார். இறுதியில் கோயா 1824 ஆம் ஆண்டில் எசுபானியாவின் போர்ட்டோக்சு நகரத்திற்கு தனது இளைய வேலைக்காரியும் தோழியுமான லியோக்கியா வெயிசுடன் ஓய்வு பெற்றார். இவர் கோயாவின் காதலியாகவும் இருக்கலாம். அங்கு அவர் தனது "லா டாரோமோகியா" தொடர் ஓவியங்களையும் மற்றும் பல முக்கிய ஓவியங்களையும் வரைந்தார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட கோயாவுக்கு உடலின் வலது பக்கம் முடங்கிப் போனது. பார்வையும் மங்கிப் போனது. ஓவியம் தீட்டும் பொருட்களை பார்க்கவும் அவற்றைப் பயன்படுத்தவும் இயலாமல் போயிற்று. 82 வயதில் கோயா 1628 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று இறந்தார்.