மரம் (மூலப்பொருள்)
From Wikipedia, the free encyclopedia
மூலப்பொருள் என்ற வகையில் மரம் அல்லது மரக்கட்டை என்பது பல்லாண்டுத் தாவரங்களின் அடிமரம், கிளைகள் முதலியவற்றிலிருந்து பெறப்படும் பொருளாகும்.[1] மரக்கட்டை வைர மரங்களின் தண்டுகளில் காணப்படும் துணைநிலைக் கட்டமைப்புத் திசுக்களான கடினமான, நார்த்தன்மை கொண்ட, தடிப்புற்ற காழ்த் திசுக்களால் ஆனது.[2] உயிரோடிருக்கும் மரமொன்றில், இத் திசுக்கள் நீரையும், ஊட்டப் பொருட்களையும் இலைகளுக்குக் கொண்டு செல்கின்றன. அத்துடன் இவை மரங்கள் பெரிதாக வளர்வதற்குத் தேவையாக பலத்தையும் கொடுக்கின்றன.
மனிதர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மரத்தைப் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். முக்கியமாக எரிபொருளாகவும் கட்டிடப் பொருளாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். கருவிகள், ஆயுதங்கள், தளவாடங்கள், கலைப் பொருட்கள் போன்றவற்றைச் செய்வதற்கும் பொதி செய்தல், கடதாசி உற்பத்தி போன்றவற்றுக்கும் மரம் பயன்பட்டு வந்துள்ளது.
இயற்கையாகவே இலிக்கினிய சட்டகத்தில் பதியப்பட்ட வலிமையான இழுதிறன் உள்ள மாவிய நார்களால் ஆன கலப்புரு கரிம வேதிப்பொருளாகும்.
புவியில் கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் டன்கள் அளவிலான மரக்கட்டை கிடைக்கிறது. ஆண்டுக்கு 10 மில்லியன் டன்கள் என்ற அளவில் வளர்ந்து வருகிறது. கரிம நடுநிலையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாக தாராளமாகக் கிடைக்கும் மரக்கட்டைகள் மீது அண்மைக்காலத்தில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 1991இல் 3.5 பில்லியன் கன மீட்டர்கள் அளவில் மரக்கட்டைகள் அறுவடையானது. இவை பெரும்பாலும் கட்டிடத் தொழிலிலும் அறைகலன் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன.[3]