யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு
From Wikipedia, the free encyclopedia
யூ ஈ எஃப் ஏ வாகையர் கூட்டிணைவு (UEFA Champions League - /juːˈeɪfə ˈtʃæmpiənz ˈliːɡ/), அல்லது சுருக்கமாக வாகையர் கூட்டிணைவு (Champions League), ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (Union of European Football Associations-UEFA) 1955 முதல் ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தும் கால்பந்து போட்டியாகும்.[1] இது முன்னதாக ஐரோப்பிய வாகைக் கழகங்களின் கோப்பை (European Champion Clubs' Cup) அல்லது சுருக்கமாக ஐரோப்பியக் கோப்பை (European Cup) என்று அறியப்பட்டது. இது உலகத்தில் மிகவும் மதிப்புமிக்க போட்டிகளில் ஒன்றாகும், மேலும் ஐரோப்பிய கால்பந்தில் மிகவும் மதிப்புமிக்க போட்டியாகும். இதன் இறுதிப்போட்டி உலக அளவில் அதிகம் பேர் கண்டுரசிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும், தோராயமாக 300 மில்லியன் தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் இதனை உலக அளவில் பார்க்கின்றனர்..[2]
தற்போதைய யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவின் அதிகாரபூர்வ இலச்சினை, 1992-ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது | |
தோற்றம் | 1955 (1992-இலிருந்து தற்போதைய வடிவில்) |
---|---|
மண்டலம் | ஐரோப்பா (யூஈஎஃப்ஏ) |
அணிகளின் எண்ணிக்கை | 32 (குழு நிலை) 76 (அ) 77 (மொத்தம்) |
தற்போதைய வாகையாளர் | ரியல் மாட்ரிட் (11வது வாகையர் பட்டம்) |
இணையதளம் | Official website |
2016-17 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு |
1992-க்கு முன்னர் இது ஐரோப்பிய வாகைக் கழகங்களின் கோப்பை என்று அழைக்கப்பட்டது, ஆனால் பலரால் பொதுவாக ஐரோப்பியக் கோப்பை என்றே குறிக்கப்பட்டது.[1] ஆரம்பகாலகட்டத்தில் ஒவ்வொரு நாடுகளின் கூட்டிணைவு வாகைக் கழகங்கள் மட்டுமே பங்குபெறுமாறும், 'தோற்றால் வெளியே' (Knockout) எனும்படியானதாகவும் இப்போட்டி இருந்தது.[1] 1990-களில் விரிவாக்கம் செய்ய ஆரம்பிக்கப்பட்டது, அதிக அணிகள் பங்குபெற அனுமதிக்கப்பட்டன மற்றும் தொடர்சுழல் முறை கட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] ஐரோப்பாவின் வலிமையான கூட்டிணைவுகளிலிருந்து நான்கு அணிகள் வரை பங்குபெற அனுமதிக்கப்படுகின்றன.[3] யூ ஈ எஃப் ஏ வாகையர் கூட்டிணைவினை யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவுடன் (UEFA Europa League), முன்னதாக யூ ஈ எஃப் ஏ கோப்பை (UEFA Cup), குழப்பிக்கொள்ளப்படக்கூடாது.[4]
இந்தப் போட்டிகள் பல்வேறு படிநிலைகளைக் கொண்டுள்ளது.[5] ஜூலையின் மத்தியில் தொடங்கப்படும் இப்போட்டிக்கு, மூன்று தோற்றால் வெளியே (நாக்-அவுட்) தகுதிச்சுற்றுகள் மற்றும் ஒரு தொடர்போட்டி (ப்ளே-ஆப்) சுற்றைக் கொண்டவாறு தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.[5] 22 தொடக்க அணிகளுடன், அத்தகைய தொடர்போட்டியில் எஞ்சியுள்ள 10 அணிகளும் இதன் குழுப்படிநிலையில் இணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு குழுவும் நான்கு அணிகளைக் கொண்டுள்ளவாறு எட்டு குழுக்களாக பிரிக்கப்படுகின்றன.[5] ஒவ்வொரு குழுவிலும் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு, அதாவது தோற்றால் வெளியே (Knockout stage) நிலைக்கு, முன்னேறும். இப்போட்டிகள் மே மாதத்தில் நடக்கும் இறுதிப் போட்டியுடன் நிறைவுறும்.[5] இக்கூட்டிணைவில் வாகை சூடும் அணி யூஈஎஃப்ஏ மேலான கோப்பை மற்றும் ஃபிஃபா கழக உலகக் கோப்பை ஆட்டங்களுக்கு தகுதிபெறும்.[6][7]
வாகையாளர் கூட்டிணைவுக் கோப்பையை 22 வேறுபட்ட கழகங்கள் வென்றுள்ளன. அதில் 12 கழகங்கள் இந்த கோப்பையை ஒருமுறைக்கு மேல் வென்றுள்ளன.[8] அதிகபட்சமாக ரியல் மாட்ரிட் ஒன்பது முறைகள் வென்றுள்ளது. இப்போட்டி தொடங்கப்பட்ட முதல் ஐந்து பருவங்களிலும் இவர்களே வெற்றிபெற்றனர்.[8] 1992-ல் போட்டியின் பெயரும் அமைப்புமுறையும் மாற்றியமைத்ததன் பின்னர் எந்த கழகத்தினாலும் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெறமுடியவில்லை. தற்போது செல்சீ வாகையர்களாக உள்ளனர்.[9]