இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்
From Wikipedia, the free encyclopedia
இலங்கையின் உள்ளூராட்சி சபை (Local government in Sri Lanka) என்பது இலங்கையின் அமைச்சரவை, மாகாண சபைகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உள்ள ஆட்சி அமைப்பாகும். முன்னைய காலங்களில் இலங்கையில் மாநகரசபை, பட்டின சபை, கிராமசபை என்றவாறான உள்ளூராட்சி மன்றங்களே காணப்பட்டன. பின்னர் 1987 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி இலங்கையில் 4 வகையான உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட்டன. அவை:
- மாநகரசபைகள்
- நகரசபைகள்
- பிரதேச சபைகள், மற்றும்
- கிராம அபிவிருத்தி சபைகள் என்பனவாகும்.[1][2][3]
சனவரி 2011 இன் படி இலங்கையில் 335 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றுள்,
- மாநகர சபைகளின் எண்ணிக்கை - 23
- நகர சபைகளின் எண்ணிக்கை - 41
- பிரதேச சபைகளின் எண்ணிக்கை - 271
இலங்கையில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை - 38259 ஆகும்.
இலங்கையில் உள்ளூராட்சி நீண்ட வரலாற்றையுடையது. இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம், உள்ளூர் நிர்வாகம் நாகர குட்டிக (Nagara Guttika) என அழைக்கப்படும் நகரத் தலைவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறுகிறது. இது தவிர கம்சபா என அழைக்கப்பட்டு வந்த கிராமச் சபைகளும் இருந்துள்ளன. கிராம நிர்வாகம் தொடர்பில் ஓரளவு அதிகாரம் கொண்ட கிராமத் தலைவர்களின் கீழ் அமைந்த இச் சபைகளுக்கு சிறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாளவும், தகராறுகளைத் தீர்த்துவைக்கவும் உரிமைகள் இருந்தன. அக்காலத்துக் கிராம சபைகள், முக்கியமாக வேளாண்மை தொடர்பான பொறுப்புக்களையே கவனித்து வந்ததுடன் அவை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை.