எக்சு-கதிர்
From Wikipedia, the free encyclopedia
எக்ஸ் கதிர்கள் (X-rays, X-கதிர்கள், எக்ஸ் கதிர்கள்) மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் 0.01 நானோமீட்டர் வரையாகும் .
இதனைக் கண்டுபிடித்த வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவரின் பெயரால் ராண்ட்ஜன் கதிரிவீச்சு என்றும் சில மொழிகளில் அழைக்கப்படுகிறது.[1] காந்த,மின் புலங்களால் இக்கதிர்கள் பாதிப்பு அடையாது. எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்தன. ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்புமுறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கண்டுபிடிப்புக்காக ராண்ட்ஜன் அவர்களுக்கு 1901ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப் பட்டது.
மனித உடலை ஊடுருவிப் பார்க்க உதவுவது மட்டுமல்லாமல், வானூர்தி தளங்களில் பெட்டிகளைத் திறக்காமலேயே சோதனையிட உதவுகிறது. இக்கதிர்கள் நேர்கோட்டில் செல்கின்றன. இப்பண்பே அவைகள் நோயறி கதிரியலில் (Diagnostic Radiology) கதிர்ப்படம் எடுக்கப் பயன்படுகிறது.
இக்கதிர்கள் உயிரியல் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இப்பண்பு அவைகள் புற்றுநோய் மருத்துவத்தில் பயன்பட காரணமாகும். இம்முறை கதிர் மருத்துவம் (Radiation therapy) எனப்படும்.
இக்கதிர்கள் கேட்மியம் சல்பைடு (CdS), சிங்கேட்மியம் சல்பைடு (ZnCdS), போன்ற சில பொருட்களில் விழும்போது உடனொளிர்தலைத் (Fluorescence) தோற்றுவிக்கின்றன. இப்பண்பே எக்சு கதிர்களைக் கண்டுகொள்ள உதவியது. மேலும் உடனொளிர் திரையிலும்( fluorescent Sreen) வலுவூட்டும் திரையிலும் ( Intensifying Sreen) பயன்படக் காரணமாகும். படிக இயல் ஆய்விலும் தொழில் துறையிலும் பெரிதும் பயன்பாட்டிலுள்ளன. எக்சு கதிர்கள், சாதாரண ஒளி அலைகளைப்போல் அதே திசைவேகத்துடன் பயணிக்கின்றன. ஓளிஅலைகளின் பண்புகள் யாவும் இதற்கும் பொருந்தும்.
எக்சு-கதிர்கள் என அழைக்கப்படும் இராண்ஜன் கதிர்கள் (Roentgen rays) 1895 நவம்பர் 8 ஆம் நாள் ஊர்சுபெர்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்த வில்லெம் இராண்ஜன், குறூக்சு குழாயுடன் வளியில் மின்னிறக்கம் நிகழ்வதை ஆய்ந்து கொண்டு இருக்கும் போது தற்செயலாக, அருகில் இருந்த பேரியம் பிளாட்டினோ சையனைட் பூச்சுடைய ஒரு அட்டை ஒளிர்வதைக் கண்ணுற்றார். மின்னிறக்கம் நிகழும்போது ஒளிர்வதும் இல்லாத போது ஒளிராமலும் இருக்கக் கண்டார். இதற்கு குழாயின் சுவர்களிலிருந்து வெளிப்படும் புதிரான ஒருவகை கதிர்களே காரணம் எனக் கருதினார். இக்கதிர்களை அவர் எக்சு-கதிர்கள் என அழைத்தார்.[2]
எக்சு-கதிர்கள் மற்றும் காம்மா கதிர்களுக்கு இடையே ஒரு வரையறை வேறுபடுத்தி உலகளவில் ஒருமித்த கருத்து இல்லை. அவற்றின் மூலத்தை வைத்துக்கொண்டே இக் கதிர்வீச்சுக்களை இருவகையாக வேறுபடுத்துகின்றனர். எக்சு கதிர்கள் இலத்திரன்களில் இருந்து உமிழப்பட்டு வெளிவருகின்றன, ஆனால் காம்மா கதிர்கள் அணுக்கருவிலிருந்து உமிழப்பட்டு வெளிவருகின்றன. மற்றச் செயல்முறைகளின் மூலம் இந்த உயர் ஆற்றலை உருவாக்க முடிவதாலும் சில வேளைகளில் அது உருவாக்கப்படும் முறை தெரியாமல் போவதாலும் இந்த வரையறையில் சிக்கல்கள் உள்ளன. ஒரு பொதுவான மாற்றீடாக அலைநீளத்தின் அடிப்படையில் எக்சு-கதிர் மற்றும் காம்மாக் கதிர்வீச்சுக்கள் வேறுபடுத்தப்படுகின்றன. 10−11 m அலைநீளத்தைக் கொண்ட கதிர்வீச்சு காம்மாக் கதிர்கள் எனப்படுகின்றது.