நோயறிதல்
From Wikipedia, the free encyclopedia
நோயறிதல் என்பது பொதுவாக ஒரு நோயை அதன் அறிகுறிகள் (signs), உற்றவரின் உணர்குறிகள் (symptoms), மற்றும் மருத்துவ ஆய்வகப் பரிசோதனைகள் முதலியவற்றின் துணைகொண்டு அடையாளம் காண்பதாகும். மருத்துவத் துறை அல்லாமல் பொதுப் பயன்பாட்டில் அறுதியிடல் எனுஞ்சொல் எந்த ஒரு சிக்கலையும் முறைப்படி ஆய்ந்து அடிப்படைக் காரணத்தைக் காணும் முறையைக் குறிக்கும்.
பொதுவாக, நோயுற்றவர் அல்லது நோயுற்ற விலங்கின் காப்பாளர் சில உணர்குறிகள் அல்லது அறிகுறிகளின் பேரில் மருத்துவரை அணுகுவர். மருத்துவர் நோயின் வரலாறு, தன்மை, அறிகுறிகள் ஆகியவற்றைக் கண்டு சில கருதுகோள்களை மனதில் கொள்வார். பின், தேவைக்கேற்ப ஆய்வகப் பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார். அவை, மலம், சிறுநீர், குருதி, உமிழ்நீர் ஆகியவற்றின் உயிர்வேதியியல் ஆய்வாகவோ, அல்லது சில நேரங்களில் உள்ளுறுப்புக்களை ஆய்ந்தறியும் கணிக்கப்பட்ட குறுக்குவெட்டு வரைவி வரிக் கண்ணோட்டம், மீயொலி வரிக் கண்ணோட்டம் போன்றவையாகவோ இருக்கலாம். இதன் முடிவில் அவரது கருதுகோளிற்கு ஆதரவாகவோ எதிராகவோ உள்ள கூறுகளை மனதில் கொண்டு உற்றிருப்பது இன்ன நோய் என அறுதியிடுவார்.