வேலுப்பிள்ளை பிரபாகரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறுவனர் (1954-2009) / From Wikipedia, the free encyclopedia
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே[8] அல்லது 18 மே[1] 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் | |
---|---|
பிறப்பு | (1954-11-26)26 நவம்பர் 1954 வல்வெட்டித்துறை, இலங்கைத் தீவு[1][2][3] |
இறப்பு | 18 மே 2009(2009-05-18) (அகவை 54) முல்லைத்தீவு, இலங்கை |
இறப்பிற்கான காரணம் | 18 மே 2009 அன்று எஸ்.ஏ.எஸ்.எப் என்னும் ஒரு இயக்கத்தின் மூலம் கொல்லப்பட்டார்[4] |
தேசியம் | ஈழத்தமிழர் |
மற்ற பெயர்கள் | கரிகாலன் |
பணி | தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் |
குற்றச்செயல் | 1996 ஆம் ஆண்டு கொழும்பு மத்திய வங்கி குண்டுவெடிப்பு |
பெற்றோர் | திருவேங்கிடம் வேலுப்பிள்ளை, பார்வதியம்மாள் |
வாழ்க்கைத் துணை | மதிவதனி (1984–2009) † |
பிள்ளைகள் | சார்லசு அன்ரனி (1989–2009) †[5] துவாரகா (1986–2009) †[6] பாலச்சந்திரன் (1997–2009) †[7] |
உலகத் தமிழர்கள் இவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் இவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தி படுகொலையில், இவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் இவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.[9] எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார்.[8] அத்துடன் இவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள்.[8] பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது.[10] மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.