அசுரர் (இந்து சமயம்)
From Wikipedia, the free encyclopedia
அசுரர்கள், (ஒலிப்புⓘ) இந்துத் தொன்மவியல் வரலாற்றின்படி, அசுரர்கள் தேவர்கள் எனப்படும் சுரர்களின் ஒன்று விட்ட உடன்பிறந்தவர்கள் ஆவர். காசிபர் - திதி தேவி இணையருக்குப் பிறந்தவர்களே அசுரர்கள் ஆவர்.[1] அசுரர்கள் தீய குணங்கள் கொண்ட உயராற்றல் கொண்டவர்கள். அசுரர்களில் சில நற்குணம் கொண்டவர்கள் வருணனால் வழிநடத்தப்படும் ஆதித்தியர்கள் எனப்படுவர். இரணியாட்சன், இரணியன், இராவணன், சூரபத்மன், மகிசாசூரன் வாதபி போன்றோரை அசுரர்களுக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
தானவர்கள் மற்றும் தைத்தியர்களும் அசுரர்கள் என அழைக்கபடுவர். அசுரர்களின் முதல் தலைவராக இருந்தவர் விருத்திராசூரன் ஆவார். [2] அசுரர்களின் குலகுரு சுக்கிராச்சாரியார் ஆவர்.
வேதங்களில் இரக்கமும் நற்செய்கைகள் போன்ற சத்துவ குணம் கூடியவர்களை தேவர்கள் என்றும், அசுரர்கள் முன்கோபம், வீண் புகழ்ச்சி போன்ற இராட்சத குணம் படைத்தவர்கள் என்றும், முனிவர்கள் இயற்றும் வேள்விகளை அழிப்பவர்கள் என்றும் இறைவர்களை கொடுமைப் படுத்துபவர்கள் என்றும் அறியப்படுகிறார்கள்.[3]
இந்து சமயப் புராணங்கள், இதிகாசங்களில் அசுரர்களின் ஒரு பிரிவினர் இயற்கை ஆற்றல் மிக்க இயக்கர்கள் எனும் (யட்சர்கள் - யட்சினிகள்) என்றும், மனிதர்களை கொன்று உண்பவர்களை இராட்சதர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். [4][5] ரிக் வேதத்தில் அசுரர்கள் குறித்து எண்பத்து எட்டு முறை குறிப்பிட்டுள்ளது. .[6]