அய்யன்காளி
இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர் / From Wikipedia, the free encyclopedia
அய்யன் காளி திருவிதாங்கூர் மாகாணத்தில் பட்டியல் சமூகத்தினரின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர். இவர் 28 ஆகத்து, 1863ல் திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி விவசாய குடும்பத்தில் அய்யன் என்பவருக்கு மகனாக பிறந்தார் அய்யன்காளி. இளவயதில் கட்டுடலும், அழகும், வலிமையும் நிறைந்தவராகவே வளர்ந்தார். அய்யன்காளி சிறுவனாக இருக்கும் போது தனது குடும்பத்தினரும், உறவினர்களும் உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதை உணர்ந்தார். புலையர் சாதியில் பிறந்த அவர்களுக்கு சாலையில் நடக்க அனுமதியில்லை. உடலை மறைக்க நல்ல உடையணிய அனுமதி மறுக்கப்பட்டது. செருப்பு போட அனுமதியில்லை. தலைப்பாகை கட்டக்கூடாது என பல அடக்குமுறைகளை அனுபவித்தனர். பிராமணீய வர்ணாசிரம அடுக்கில் கீழே இருந்ததால் புலையர்களை ஏரில் பூட்டி வயலை உழக் கட்டாயப்படுத்தினர். நாயர்களும், நம்பூதிரிகளும் இவர்களை அடிமைகளாக நடத்தினர். அக்கால கட்டத்தில் பட்டியல் சாதியினர் மீது கல்வி உரிமை மறுப்பு, பொதுத் தெருவில் நடமாடும் சுதந்திரம் இல்லாமை,பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்படாமை போன்ற கொடுமைகள் நாயர் மற்றும் நம்பூதிரி சாதி மக்களால் நிகழ்த்தப்பட்டது.