ஆகுஸ்ட் ரொடான்
From Wikipedia, the free encyclopedia
பிரான்சுவா-அகுஸ்ட்-ரெனே ரொடான் (François-Auguste-René Rodin, 12 நவம்பர் 1840 – 17 நவம்பர் 1917), பொதுவாக அகுஸ்ட் ரொடான் என அறியப்படும் இவர் ஒரு பிரெஞ்சு சிற்பி ஆவார். நவீன சிற்பவியலுக்குத் தந்தை[1] என அறியப்பட்டாலும் இவர் பண்டைய நடைக்கு எதிராக புரட்சி செய்யவில்லை. வழமையான நடையில் பயின்று தொழிலாளி போன்று உழைத்து சிற்பத்துறையில் சிறப்புகள் பெற்றாலும்[2] பாரிசின் முன்னணி கலைப்பள்ளிகள் இவரை என்றும் அனுமதிக்கவில்லை.
அகுஸ்ட் ரொடான் | |
---|---|
பிறப்பு | பாரிசு |
தேசியம் | பிரெஞ்சு |
அறியப்படுவது | சிற்பக்கலை, வரைதல் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | வெண்கலக் காலம் (L'age d'airain), 1877 நடக்கும் மனிதன் (L'homme qui marche), 1877-78 |
சிற்பவியலில், ரொடான் களிமண்ணில் சிக்கலான, கிளர்ந்தெழும், ஆழமான மேற்பரப்புகளை வடிவமைப்பதில் தனித்திறமை கொண்டிருந்தார். ரொடானின் பல குறிப்பிடத்தக்க சிற்பங்கள் அவரது காலத்தில் வெகுவாக விமரிசிக்கப்பட்டன. அக்காலத்திய நடையான அலங்காரங்கள் மிகு, முறையான, பெரிதும் கருப்பொருள் சார்ந்த சிலை வடிவங்களுடன் ரொடானின் படைப்புகள் போட்டியிட்டன. வழமையான தொன்மவியல் மற்றும் உருவக நடைகளுக்கு எதிராக அவரது பெரும்பாலான அசல் படைப்புகள் மனித வடிவத்தை உண்மையாக, தனித்தன்மை வெளிப்படுத்துமாறு அமைந்திருந்தன. தனக்கெதிரான விமரிசனங்களுக்காக தனது நடையை மாற்றிக்கொள்ளவில்லை. தொடர்ச்சியான கலைப்படைப்புகள் அரசிடமும் கலைச் சமூகத்திடமும் வரவேற்பைப் பெறலாயிற்று.
1875ஆம் ஆண்டு தனது இத்தாலியப் பயணத்தால் உந்தப்பட்ட முதல் சிற்பம் முதல் அவரது புகழ் மெதுவே வளரத் தொடங்கியது. 1900களில் உலகம் வியக்கும் சிற்பியாக போற்றப்பட்டார். 1900ஆம் ஆண்டு அவர் நிகழ்த்திய கண்காட்சிக்குப் பிறகு பல செல்வந்தர்கள் அவரது படைப்புக்களை வாங்க விரும்பினர். மேல்மட்ட கல்விமான்களுடனும் கலைஞர்களுடனும் பழக்கம் ஏற்பட்டது. தனது வாழ்நாள் முழுவதும் துணைவராக இருந்த ரோசு பியூரேவை இருவரின் கடைசி ஆண்டில் மணம் புரிந்தார். 1917ஆம் ஆண்டு அவரது மறைவிற்குப் பின்னர் இவரது படைப்புக்களுக்கு புகழ் மறையத் தொடங்கினாலும் சில பத்தாண்டுகளில் மீண்டும் உச்சத்தை எட்டியது.