ஈயோரா பழங்குடி
From Wikipedia, the free encyclopedia
ஈயோரா அல்லது லோரா அல்லது லியோரா என்பது ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களில் ஒரு குடியின் பெயர். தாங்கள் பழங்குடிகள் என்பதை அவர்கள் தங்கள் மொழியில் கூரி என்று அழைப்பர். இம்மக்கள் இன்று சிட்னி மாநகரில் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் இருந்து ஜனவரி 1788 இல் சுமார் 1300 குற்றவாளிகளும் அவர்களுடைய காப்பாளர்களும் கப்பலில் வந்து இறங்கிய பொழுது, இந்த ஈயோரா மக்களில் 1500 பேர் இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் வந்திறங்கியோர்கள் கொண்டு வந்த வைசூரி அல்லது பெரியம்மை போன்ற நோயாலும், பிற காரணங்களினாலும், சுமார் 19ஆம் நூற்றாண்டுக்குள் இவ்வினம் முற்றிலுமாக அற்றுவிட்டதாகக் கருதப்படுகிறது. ஈயோரா இன மக்களின் மொழியில் இருந்து இன்று ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் வழங்கும் சொற்களில் சில: டிங்கோ நாய் (dingo), வூமெரா ஈட்டி (woomera), வாலபி (wallaby), வாம்பட்டு என்னும் பேரெலிவகை (wombat), வரட்டாச் செடி (waratah), பழுப்பு நிற மோபோக்கு ஆந்தை boobook (owl), கங்காருவிற்கும் வாலபிக்கும் இடைப்பட்ட அளவுடைய வால்லரு என்னும் விலங்கு (wallaroo) ஆகியன.
பென்னெலாங்கு என்னும் பெயருடைய ஈயோரா இனத்தில் இருந்த ஒருவரர் ஆங்கிலேயர்களுக்கும் ஈயோரா இன மக்களுக்கும் இடையே தொடர்பாளராக இருந்துள்ளார். இவருடைய படம் இணைக்கப்பட்டுள்ளது. இவர் மே 24, 1793 இல் இங்கிலாந்து அரசர் 3ஆம் ஜோர்ஜை (King George III) சந்தித்து இருக்கிறார்.