உத்தம சோழன்
சோழ மன்னர் / From Wikipedia, the free encyclopedia
உத்தம சோழன், பொ.ஊ. அண். 973 முதல் பொ.ஊ. அண். 985 வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழனின் மகனாவார். கண்டராதித்தர் இறந்தபின், இவருக்குப் பதிலாகக் கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சய சோழனின் மகன், இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தர சோழன் பதவிக்கு வந்தார். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவர் அண். 13 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தார். இவர் மதுராந்தகன் என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் இராசராச சோழன் அரியணை ஏறினார்.
பேரரசர் உத்தம சோழர் | |
---|---|
பரகேசரி | |
சோழப் பேரரசு | |
ஆட்சிக்காலம் | கி.பி. அண். 973 – அண். 985 |
முன்னையவர் | பேரரசர் சுந்தர சோழன் |
பின்னையவர் | பேரரசர் முதலாம் இராஜராஜ சோழன் |
சோழ இணை ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | கி.பி. அண். 971 – அண். 973 |
பேரரசர் | சுந்தர சோழன் |
முன்னையவர் | ஆதித்த கரிகாலன் |
பிறப்பு | மதுராந்தகன் மிலாடு, சோழ நாடு (தற்கால அரியலூர், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | கி.பி. அண். 985 தஞ்சாவூர், சோழ நாடு (தற்கால தமிழ்நாடு, இந்தியா) |
துணைவர் |
|
குழந்தைகளின் பெயர்கள் | மதுராந்தக கண்டராதித்தன் |
அரசமரபு | சோழர் (தந்தையின் மரபு) மழவராயர்[1](தாயின் மரபு) |
தந்தை | பேரரசர் கண்டராதித்தர் |
தாய் | பேரரசி செம்பியன் மாதேவி |
மதம் | சைவ சமயம் |
இவர் அரசுக்கட்டில் ஏறுவதற்கு முன்பே காஞ்சி வரையுள்ள தொண்டைமண்டலம் சோழர் ஆட்சிக்குட்பட்டு விட்டது. ஆதித்த கரிகாலனுடைய கல்வெட்டுகள் உத்திரமேரூர், காஞ்சிபுரம், தக்கோலம், ஆரணி, திருவண்ணாமலை முதலிய இடங்களில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இக் கல்வெட்டுகள் நிலவிற்பனை, அறச்செயல், திருப்பணி, அரசியல் தொடர்பானவையாகக் காணக்கிடத்தலின், ஆதித்தன் காலத்திலேயே தொண்டை நாட்டில் அமைதி உண்டாகி விட்டதென்பதை அறியலாம். உத்தம சோழன் காலத்திய கல்வெட்டுகள் பலவும் செப்பேடு ஒரு தொகுதியும் கிடைத்துள்ளன. இவர் பரகேசரி என்னும் பட்டம் பெற்றவர். பெயரின்றிப் ‘பரகேசரி’ என்பது மட்டுமே கொண்டுள்ள கல்வெட்டுகள் எல்லாம் இவர் காலத்தனவே என்று சில சான்றுகள் கொண்டு ஆராய்ச்சியாளர் துணிகின்றனர்.[2] சோழர் நாணயங்களில் இவர் காலத்தவைவே பழைமையானவையாகும். இவர் காலத்து பொற்காசு ஒன்று கிடைத்தது. அதன் இருபுறங்களும் ஒருபடித்தாகவே இருக்கின்றன, நடுவில் ஒரு புலி உட்கார்ந்து கொண்டு வலப்புறமுள்ள மீனை நோக்குகிறது. நாணயத்தைச் சுற்றிலும் உத்தம சோழன் பெயர் கிரந்த எழுத்துகளிற் குறிக்கப்பட்டுள்ளது. அப்பொற்காசு 40 முதல் 60 குன்றிமணி நிறையுள்ளது என்று நாணய ஆராய்ச்சியாளரான எலியட் கூறியுள்ளார்.[3]