எலும்பு
From Wikipedia, the free encyclopedia
எலும்பு அல்லது என்பு என்பது முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் உட்கூட்டில் காணப்படும் விறைப்பான உறுப்புக்கள் ஆகும். எலும்புகள், உடலுறுப்புக்களுக்குப் பாதுகாப்பாக அமைவதுடன், உடலைத் தாங்குவதற்கும் அது இடத்துக்கிடம் நகர்வதற்கும் பயன்படுகின்றன. அத்துடன், செங்குருதியணுக்கள், வெண்குருதியணுக்கள் என்பவற்றை உருவாக்குவதும், கனிமங்களைச் சேமித்து வைப்பதும் எலும்புகளே ஆகும். எலும்புகள் பல்வேறு வடிவங்களிலும் காணப்படுவதுடன், சிக்கலான உள் மற்றும் வெளிக் கட்டமைப்புக்களையும் கொண்டவையாக உள்ளன. இது, எலும்புகள், நிறை குறைந்தவையாகவும், உறுதியானவையாகவும், கடினத்தன்மை கொண்டவையாகவும் இருப்பதற்கு உதவுவதுடன், அவற்றின் பல்வேறு செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது.
எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒரு வகை, கனிமமாகிய எலும்புத் திசுக்கள் ஆகும். இவை தேன்கூட்டு அமைப்பை ஒத்த, முப்பரிமாண உள்ளமைப்பைக் கொண்டு எலும்புகளுக்கு விறைப்புத் தன்மையைக் கொடுக்கின்றன. எலும்புகளில் காணப்படும் பிற வகைத் திசுக்களில் எலும்பு மச்சை, என்புறை, நரம்பு, குருதியணுக்கள், குருத்தெலும்பு என்பவையும் அடங்கும்.
நமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவிட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடு மட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச் சட்டம் என்று பெயர்.
உடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக்கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச் சட்டம்தான். எலும்பில் 50% நீரும், 33% உப்புக்களும், 17% மற்ற பொருட்களும் உள்ளன. எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்துபோகும் கரிமப்பொருளும் உள்ளன. நமது உடல் நலத்திற்கு வேண்டிய கால்சியம் எனும் இரசாயனப் பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது.
எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி இருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர். மூட்டுகள் இரண்டு தன்மைகள் உடையனவாக இருக்கின்றன. முதலாவது அசையும் மூட்டு. இரண்டாவது அசையா மூட்டு. இடுப்பிலும் மண்டையிலும் காணப்படும் எலும்புகள் அசையாத மூட்டுகள். அசையும் மூட்டுகளில் நான்கு வகைகள் உள்ளன. பந்துக்கிண்ண மூட்டு, கீல் மூட்டு, வழுக்கு மூட்டு, செக்கு மூட்டு என்று அவைகளுக்குப்பெயர்.
அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ தேய்வோ ஏற்படாமல் இருப்பதற்காக, எலும்புகளின் முனைகள் குருத்தெலும்புகளால் மூடப்பட்டு, அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் இருக்குமாறும் அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவக்கூடும். அவ்வாறு நழுவாமல் இருக்க மூட்டுகள் உறுதியான தசைநார்களால் கட்டப்பட்டுள்ளன. பிறக்கும் போது மனிதனில் 270க்கும் மேற்பட்ட எலும்புகள் இருக்கும்[1]. எனினும் முழு வளர்ச்சியடைந்த நிறையுடலி மனிதனில் இவ்வெலும்புகளில் சில வளரும் போது ஒன்றிணைக்கப்படுவதால் 206 எலும்புகளே காணப்படும்.