From Wikipedia, the free encyclopedia
பாறைகளில் எழுதி வந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் வரை பனையோலையில் எழுதுகின்ற முறை ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்திருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தும் எழுத்தோலைகள் எனப்படுகின்றன. நூலாக எழுதப்பட்ட ஓலைகள் கட்டித் தொகுக்கப்பட்டன. இவற்றைப் பொத்தகம் என்றும், [1] பொத்தகக் கவளி என்றும் [2] [3] வழங்குவர். எழுத்தும் ஓலையும் இணைந்த எழுத்தோலையையும், ஓலைக் கணக்கரையும் அவர் காலை முதலாக மாலை ஈறாகக் கணக்கெழுதும் காட்சியை நாலடியார் [4] தெரிவிக்கிறது.
பனைமட்டையிலிருந்து எழுதத் ஓலை உருவாக்குவது தொழில் நுட்பம் மிக்க ஒரு கலை.
இளம்பதமுள்ள பனையோலையைப் பொறுக்கி எடுப்பர். அளவுக்குத் தக்கவாறு நறுக்குவர். குழந்தைக்கு நகம் வெட்டுவது போல் நளினமாக அதன் நரம்பைக் களைவர். நிழலில் உலர்த்துவர். பனியில் பதப்படுத்துவர். இளக்கமுறுமாறு இளஞ்சூட்டு வெந்நீரில் வெதுப்புவர். பளபளப்பான சங்கு அல்லது கல்லைக் கையில் வைத்துக்கொண்டு ஓலையை அழுத்தி அழுத்தித் தேய்த்து அழகுபடுத்துவர். பக்குவமாகப் பாடம் செய்வர். (பாடம் செய்வது என்பது ஓலைகளை அடுக்கிக் கட்டி முறுக்காமல் இருக்கச் செய்தல்.) மஞ்சள் நீரிலோ, அரிசிக் கஞ்சியிலோ ஊறவைப்பர். சுவடிக் கட்டில் இரண்டு இடத்தில் சுள்ளாணியால் துளை போடுவர். ஒரு முனையில் ஒரு துளையில் கயிறு கோத்து ஒலையைப் பிரித்துப் புரட்டுமாறு தளர்வாகக் கட்டிக்கொள்வர். ஒவ்வொரு ஓலைமீதும் மஞ்சளையும் வேப்பெண்ணெயையும் கலந்து பூசுவர். கோவை இலை, ஊமத்தை இலை அகியவற்றின் சாறுகளைப் பூசுவர். மாவிலை, அறுகம்புல் ஆகியவற்றை எரித்த கரியை மையாகத் தடவுவர். இதன் மேல்தான் எழுத்தாணி கொண்டு எழுதுவர். ஓலையின் மறுமுனைத் துளையிலும் கயிறு கோத்துப் பொத்தகமாகக் கட்டுவர். [5]
ஒவ்வொருவருக்கும் பாட்டெழுதும் போது குறிப்பிட்ட அளவு (விரற்கடை அளவு) எழுத்தோலையைப் பயன்படுத்த வேண்டுமென்பதைக் கூட பாட்டியல் நூல்கள் வரையறை செய்துள்ளன. இதன்படி நான்மறையாளர்க்கு 24 விரற்றானமும், அரசருக்கு 20 விரற்றானமும்,வணிகருக்கு 18 விரற்றானமும், வேளாளர்க்கு 12 விரற்றானமும் இருக்க வேண்டும் என்று கீழ்காணும் கல்லாடனார் வெண்பாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தோலைகளில் அமைப்பு, செய்தி போன்றவைகளுக்கேற்ப அவை வகைப்படுத்தப்பட்டன.
திருமணம் மற்றும் இறப்புச் செய்திகளுக்கான ஓலை “நீட்டோலை” என அழைக்கப்பட்டன.
ஓலைச் செய்தியைப் படியெடுத்து வைத்துக் கொள்ளும் முறை அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இந்த ஓலைகளை “மூல ஓலை” என அழைத்தனர்.
ஓலை ஆவணங்கள் நாட்டுப்புற மகளிர் அணிந்து வந்த சுருள் வடிவமான காதோலை போல் சுருட்டி வைத்துப் பாதுகாக்கப்பட்டன இவை “சுருள் ஓலைகள்” எனப்பட்டன. இதை “சுருள்பெறு மடியை நீக்கி” என பெரியபுராணத்திலுள்ள பாடல் மூலம் அறிய முடிகிறது. [8]
மூளியும் பிளப்பும் இல்லாத ஓலை “குற்றமற்ற ஓலை” எனப்பட்டது.[9]
எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக் கொண்டும் அவை தனிப் பெயர்களில் அழைக்கப்பட்டன.
தமிழகத்திலுள்ள கோவில் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓலை “நாளோலை” எனப்பட்டது.
அரசனது ஆணைகள் எழுதப்பட்ட ஓலை “திருமந்திர ஓலை” எனப்பட்டது. இதை எழுதுவதற்காக அரசவைகளில் ஓலை நாயகம் என்பவர் இருந்தார். அரசனது ஆணைதாங்கிய எனப் பொருள்படும் “கோனோலை”, “சோழகோன் ஓலை” போன்ற சொற்கள் செப்பேடுகளில் காணப்படுகின்றன.[10]
திருமணச் செய்தியைத் தெரிவிக்கும் ஓலை “மணவினை ஓலை” எனப்பட்டது. இதன் மூலம் திருமணச் செய்தி உற்றார் உறவினர்க்குத் தெரியப்படுத்தியது.[11]
இறப்புச் செய்திகளைக் கொண்டு சென்ற ஓலை “சாவோலை” எனப்பட்டன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.