ஏர்
விளைநிலங்களை உழுவதற்குப் பயன்படும் ஒரு கருவி / From Wikipedia, the free encyclopedia
ஏர் அல்லது கலப்பை (ஒலிப்புⓘ) (plough) அல்லது plow இரண்டுமே /ˈplaʊ/) என ஒலிக்கும். ஏர் என்பது ஒரு கருவி அல்லது உழவுக்கருவியாகும். இது உழவுத்தொழிலில் தொடக்கநிலையில் வயலின் மண்ணை உழுது அல்லது பதப்படுத்தி (பண்படுத்தி) விதைப்பின் முன்பும் நடவின் முன்பும் மண்ணைத் தளர்வாக்கி கீழ்மேலாகக் கிளறப் பயன்படுகிறது. மரபாக ஏர் மாடுகளை அல்லது குதிரைகளைப் பூட்டி உழப்பட்டன. ஆனால் அண்மையில் இழுபொறிகளால் இயக்கப்படுகின்றன. ஏர் மரத்தாலோ இரும்பாலோ அல்லது எஃகுச் சட்டத்தாலோ செய்து, அதில் கூரிய அலகைப் பூட்டி மண்ணை கிண்ட பயன்படுத்தப்படுகிறது. இது பல எழுத்தறிந்த வரலாறுகளில் அடைப்படைக் கருவியாக இருந்தும், ஆங்கிலத்தில் இது கி.பி1100 க்குப் பின்னரே வழங்கிவருகிறது. அதற்குப் பிறகு இது அடிக்கடி வழக்கில் புழங்கியுள்ளது. ஏர் மாந்தரின் வரலாற்றைப் புரட்சிகரமாக மாற்றிய வேளாண்கருவி ஆகும்.
|
ஏர்கள் வேளாண்மைக்கு மட்டுமன்றி கடலடி கம்பிவடங்கள் பதிப்பதற்கும் எண்ணெய்வளங்கள் கண்டுபிடிப்பதற்கும் உதவுகின்றன.
ஏர்கொண்டு உழுதலின் நோக்கமே மேல்மண்ணை புரட்டி வளமான சத்துமிக்க அடிமண்ணை மேற்பரப்புக்குக் கொண்டுவருவதேயாகும். அதேநேரத்தில் உழுதல் களையையும் முன்பயிரிட்ட எச்சங்களை அடியில் புதைத்து அவற்றைச் சிதையச் செய்கிறது. ஏரால் உழும்போது ஏற்படும் உழவு சால்களில் வளமண் பொதிந்தமையும். உழுத வயல் உலரவிடப்படும். பின்னர் நடவுக்கு முன் பரம்படிக்கப்படும். உழுது பண்படுத்தல் மண்ணை ஒருசீராக்கி மேலே அமைந்த 12 முதல் 25 செ.மீ ஆழ உழுத அடுக்கு மண்ணை நடவுக்கு முன் உருவாக்கும். பலவகை மண்களில் பயிரின் வேர்கள் உழுத அடுக்கு மேல்மண்னிலேயே அமையும்.
முதலில் மாந்தரே ஏரை இழுத்து உழுதாலும் பின்னர் விலகுகளைப் பூட்டி உழவு செய்யப்பட்டதும் ஏருழவு திறம்பட நடந்த்து. முதலில் எருதுகளைப் பூட்டி எரால் உழவு செய்துள்ளனர். பின்னர் குதிரைகள், கோவேறு கழுதைகளைப் பூட்டியும் உழவு நடந்துள்ளது. பிறகு இதற்கு பலவகை விலங்குகளை இடத்திற்கு ஏற்ப பூட்டி உழவு செய்யப்பட்டுள்ளது. தொழில்மயமாகிய நாடுகளில், முதல் எந்திரவகை ஏர் நீராவிப் பொறிகளைப் பூட்டிய இழுபொறிகளால் உழப்பட்டுள்ளது. ஆனால் இவை மெல்ல மெல்ல உள்ளெரி பொறிகள் பூட்டிய இழுபொறிகளால் பதிலீடு செய்யப்பட்டன.
அயர்லாந்தில் உழவுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் தரப்படுகின்றன. மண்சரிவும் அரிப்பும் ஏற்படும் பகுதிகளிலும் மேல்மண் உழவு நுட்பங்கள் பயன்படும் பகுதிகளிலும் வர வர ஏர் உழவு குறைந்துகொண்டே வருகிறது.
மரத்தினால் செய்யப்பட்ட இக்கருவி நுகம், கருவுத்தடி, மேழி, முட்டி, கலப்பைக்கயிறு, கன்னிக்கயிறு (கழுத்துக்கயிறு) எனும் பகுதிகளால் ஆனது. இரண்டு எருதுகளால் (மாடுகளால்) இழுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது கலப்பை. பல நூற்றாண்டுகளாக உழவர்களால் கலப்பை பயன்படுத்தப்படுகிறது. கலப்பையால் ஓர் அடி ஆழம் வரை உழ முடியும்.
கலப்பைகள் மூன்று வகைப்படும்: மரத்தினாலான கலப்பை (நாட்டுக் கலப்பை), இரும்பு அல்லது மண் புரட்டும் கலப்பை (வளைப்பலகைக் கலப்பை, சட்டிக் கலப்பை, ஒரு வழிக் கலப்பை) மற்றும் சிறப்பு கலப்பைகள் (ஆழக்கலப்பை, உளிக்கலப்பை, சால் கலப்பை, சுழல் கலப்பை, குழிப்படுக்கை அமைக்கும் கருவி)[1]. தொழிற்புரட்சி ஏற்பட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு உழுவுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.