From Wikipedia, the free encyclopedia
குதிரையின்மீது சவாரி செய்கையில் தாக்கவல்ல, வில் ஏந்திய குதிரைப்படை வீரரைதான், குதிரையேற்ற வில்லாளி, துரக வில்லாளி அல்லது அசுவ வில்லாளி என்பர். வில்வித்தை எப்போதாவது விலங்குகளில் சவாரி செய்கையில் பிரயோகிக்கப்பட்டது. திறந்தவெளி வேட்டை, கால்நடை பாதுகாப்பு மற்றும் போர்களில் இது ஒரு வெற்றிமிகு யுக்தி ஆகும். இதுவே பண்டைக்கால மற்றும் இடைக்கால ஐரோவாசிய நாடோடிகளான—பண்டைக்கால ஈரானியர்கள் (சாகர்கள், சசானியர்கள்) மற்றும் இந்தியர்களையும், மேலும் இடைக்காலத்தில் மங்கோலியர்கள் மற்றும் துருக்கியர்களையும் பற்றி வரையறுக்கப்பட்ட தனிச் சிறப்பாகும். இவ்வின மக்களின் விரிவாக்கத்தால், இக்கலையும் கிழக்கு ஐரோப்பா (ஹீனர்களின் வழியாக), மெசொப்பொத்தேமியா, மற்றும் கிழக்கு ஆசியாவிற்கும் பரவியது. கிழக்கு ஆசியாவில், ஜப்பானின் சாமுராய் பாரம்பரியத்தில், அசுவ வில்வித்தை பெரும் மரியாதைக்குரியது, ஏற்ற வில்வித்தையை யபுசமே என்று ஜப்பானில் அறியப்படுகிறது.
ஏற்ற வில்வித்தை, தென் அமெரிக்காவின் பாம்பா புல்வெளிகள் மற்றும் வட அமெரிக்காவின் பிரயரி புல்வெளிகளில் தன்னிச்சையாக வளர்ந்தது; அமெரிக்க பழங்குடியான கொமேன்ஷிகள் இக்கலையில் கை தேர்ந்தவர்கள்.[1]
போரில் வேகமாக நகரக்கூடிய, நெருங்கி சண்டையிடுதலை தவிர்க்க இலகுரக துரக வில்லாளி, சிறுபோர் விளைவிப்பவராக பயன்படுத்தப் பட்டனர்.
பார்த்திய எய்வு உத்தியில் , சவாரியாளர் எதிரியிடமிருந்து பின்வாங்குகையில், உடலை திருப்பி பின்புறமாக அம்பு எய்வார். ஏற்ற வில்லாளிகள் ஆதிக்கமிக்க வேகம் கொண்டிருப்பதால், துரக வில்லாளிகளால் தாக்கப்படும் துருப்புகளிடம் எதிர்தாக்குதல் செய்ய எய்யும் ஆயுதங்கள் இல்லாதபோது, அவர்கள் முற்றிலும் செயலிழந்துவிடுவர். ஓயாது தொல்லை கொடுத்தால் சாவுகாயங்களை விளைவிக்கும், மன உறுதி இழக்கச் செய்யும், மேலும் படையின் அணிவகுப்பை தகர்க்கும். வில்லாளிகளை தாக்கும் முயற்சிகள், மொத்த படையையும் சோர்வடைய வைக்கும்.
துரக வில்லாளிகள், சாகர், ஹீனர், பார்த்திய வீரர்களை போல் இலகு ரகமாகவும், அல்லது பைசாந்திய கவல்லாரியோய், துருக்கிய திமாரியோத்துகள், ரஷ்ய துருசினா மற்றும் யப்பானிய சாமுராய் போன்று கன ரகமாகவும் இருந்தனர். கனரக துரக வில்லாளிகள் ஒழுக்கமுள்ள படைகளாக போரிட்டனர். இவர்கள் ஒரே கனத்தில் சரமாரியாக அம்புகளை எய்வதால், எதிரிகள் தாக்கும் முன்பே அவர்களை பலவீனப் படுத்திவிடும். நெருங்கி சண்டையிட ஏதுவாக, இவர்கள் வில்களுடன் ஈட்டிகளையும் வைத்திருப்பர். இடைக்கால மங்கோலியர்கள் மற்றும் அங்கேரியர்கள் போன்று சில தேசங்கள், இலகுரக மற்றும் கனரக ஏற்ற வில்லாளிகளை கொண்டிருந்தது. பார்த்திய, பால்மீரிய, மற்றும் தியூதோனிய வரிசை நைட்டுகள் (knights) போன்ற சில படைகளில், வில் ஏந்தா அதி-கனரக துருப்புகள் (கட்டபிறாக்துகள் (cataphracts), நைட்டுகள் ), மற்றும் இலகுரக ஏற்ற வில்லாளிகள் என இரண்டு வகை ஏற்ற துருப்புகளையும் கொண்டிருந்தன.
முதலில் இரும்புக் காலத்தில் உருவான ஏற்ற வில்வித்தை, வெண்கலக் காலத்தில் படிப்படியாக ரதங்களால் மாற்றியமைக்கப்பட்டது.
சிறுபோரை விளைவிக்க, ஓடுவதற்கு ஏதுவாக பரந்த நிலப்பரப்பு தேவை. ஓட இடமில்லாத போது, இலகுரக துரக வில்லாளிகள் எளிதில் தாக்கப்பட்டு வீழ்த்தபடுவர். காலாட்படையின் வில்லாளிகள் இலகுரக அசுவ வில்லாளிகளை எளிதில் வீழ்த்த வல்லவர்கள், ஏனெனில் அசுவ வில்லாளிகளுக்கு அவர்கள் மிகச் சிறிய இலக்குகள். பெரும் படைகள் எப்போதாவது மட்டுமே சிறுபோர் விளைவிக்க ஏற்ற வில்லாளிகளை சார்ந்திருக்கும், ஆனால் துரக வில்லாளிகள் பெரும்பங்காற்றிய வெற்றிகளுக்கு பல உதாரணங்கள் உள்ளன. காரே போரில் ரோம தளபதி கிரேசசு, குதிரைப்படை மற்றும் கணைதொடுக்கும் துருப்புகள் அற்ற பெரும்படையை வழிநடத்தி, பார்த்திய துரக வில்லாளிகள் மற்றும் கட்டாபிறாக்துகளால் பெரும் சேதத்தை சந்தித்தார்.
மக்கெடோனின் இரண்டாம் பிலிப், தன்யூப் நதியின் வடக்கில் வசிக்கும் சாகர்களின் மன்னன் ஏட்டியசைக் கொன்று இராச்சியத்தை கைப்பற்றினார். கி.மு. 329-ல் சிர் தரியா நதிக்கரையில் நடந்த ஜக்சார்த்திசு போரில் பேரரசர் அலெக்சாந்தர் சாகர்களை வென்றார். பிறகு கிரேக்கத்தின் இந்தியப் படையெடுப்பின் போது, சாகர்கள் மற்றும் தாகர்களின் ஏற்ற ;வில்லாளர்களை, அலெக்சாந்தரே தனது படையில் இணைத்துக் கொண்டார்.[2]
ரதப்போர் கைவிடப்பட்ட பிறகு இலகுரக குதிரைப்படையையும் கனரக கட்டபிறாக்து குதிரைப்படையையும் இணைக்கும் விதமாக, கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கனரக துரகவில்லாளிகள் அசீரிய படையில் முதலில் தோன்றினர். கனரக துரகவில்லாளிகள், வலை அல்லது பின்னல் கவசத்தோடு தலைக்கவசமும் பூண்டிருந்தனர். சிலநேரம் அவர்களின் குதிரைகள்கூட கவசம் பூண்டிருக்கும். கனரக துரகவில்லாளிகள், சிறுபோர் விளைவிப்பது, மற்றும் அடித்துவிட்டு ஓடும் தந்திரம் செய்யாமல், ஒழுக்கமான அமைப்பாகவும் பிரிவாகவும் போரிட்டனர். இவர்கள் தனித்தனியாக செயல்படாமல், கூட்டாக எதிரியின்மீது அம்புமழை (volley) பொழிவர்.
கவசம் பூண்ட கனரக துரகவில்லாளிகளால், தங்களின் இலகுரக சகாக்களின் தாக்குதலை எதிர்க்க இயலும். இலகுரக டாடார் துருப்புகளை சமாளிக்க ரஷ்ய துருசினா குதிரைப்படை உருவானது. அதேபோல், துருக்கிய திமாரியோத்துகள் மற்றும் காப்பிக்குலுக்கள், மேற்கத்திய நைட்டுகளைப் போல் கனமான கவசம் பூண்டிருந்ததால் அங்கேரிய, அல்பேனிய மற்றும் மங்கோலிய துரகவில்லாளிகளை எதிர்த்து நின்றனர்.
திரண்ட தரை-வில்வித்தையிடம் ஏற்ற வில்வித்தை செயலிழந்து போகும். அம்பெய்வதில் துரக வில்லாளர்களைவிட தரை-வில்லாளர்கள்/குறுக்குவில்லாளர்கள் (crossbowmen) தேர்ந்தவர்கள், மற்றும் தனி ஒரு மனிதன் குதிரைவீரரைவிட சிறிய இலக்கு ஆவர்.
நவீன சுடுகலன்களின் வளர்ச்சியால் துரக வில்லாளிகள் வழக்கற்று போயினர். 16-ஆம் மற்றும் அதன்பின்வந்த நூற்றாடுகளில், சுடுகலன்கள் ஏந்திய பல்வேறு குதிரைப்படைகள் படிப்படியாக தோன்றின. வழக்கமான ஆர்க்வெபசு மற்றும் மசுகெத்து, துரகவீரர்களுக்கு பொருத்தமற்று இருந்ததால், கலப்பு வெளிவளைமுனை வில்லை போன்று குதிரையின்மீது எளிதாக உபயோகிக்கக் கூடிய கார்பைன் போன்ற இலகுரக ஆயுதங்கள் உருவாக்க வேண்டியிருந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.