ஔரங்கசீப்
6வது முகலாயப் பேரரசர் (ஆட்சி. 1658-1707) / From Wikipedia, the free encyclopedia
முகியல்தீன் முகம்மது (Muhi al-Din Muhammad) (அண். 1618 – 3 மார்ச்சு 1707) என்பவர் ஆறாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் பொதுவாக ஔரங்கசீப் (பாரசீக உச்சரிப்பு: அவ்ரங்செப், பொருள். அரியணையின் ஆபரணம்) என்ற பெயராலும், இவரது பட்டப் பெயரான முதலாம் ஆலம்கீர் (பொருள். உலகத் துரந்தரர்) என்ற பெயராலும் அறியப்படுகிறார். இவர் 1658 முதல் 1707ஆம் ஆண்டில் தான் இறக்கும் வரை ஆட்சி புரிந்தார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் முகலாயப் பேரரசானது அதன் அதிகபட்ச பரப்பளவை அடைந்தது. முகலாயப் பேரரசின் நிலப்பரப்பானது கிட்டத்தட்ட இந்தியத் துணைக் கண்டத்தின் ஒட்டு மொத்த பரப்பளவையும் கொண்டிருந்தது.[2][3][4][5]
ஔரங்கசீப் முதலாம் ஆலம்கீர் | |
---|---|
| |
ஒரு வல்லூறைக் கையில் வைத்திருக்கும் ஔரங்கசீப், அண். 1660 | |
6வது முகலாயப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | 31 சூலை 1658 – 3 மார்ச்சு 1707 |
முன்னையவர் | ஷாஜகான் |
பின்னையவர் | முகமது ஆசம் ஷா |
பிறப்பு | முகியல்தீன் முகம்மது அண். 1618 தாகோத், குசராத்து சுபா, முகலாயப் பேரரசு (நவீன கால குசராத்து, இந்தியா) |
இறப்பு | 3 மார்ச்சு 1707 (அகவை 88) அகமது நகர், அகமது நகர் சுபா, முகலாயப் பேரரசு (நவீன கால மகாராட்டிரம், இந்தியா) |
புதைத்த இடம் | ஔரங்கசீப் கல்லறை, குல்தபாத், மகாராட்டிரம், இந்தியா |
மனைவி |
|
குழந்தைகளின் பெயர்கள் |
|
மரபு | பாபர் குடும்பம் |
அரசமரபு | தைமூரிய அரசமரபு |
தந்தை | ஷாஜகான் |
தாய் | மும்தாசு மகால் |
மதம் | சன்னி இசுலாம்[lower-alpha 3] |
ஏகாதிபத்திய முத்திரை |
ஔரங்கசீப்பும், முகலாயர்களும் தைமூரிய அரசமரபின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாவர். தனது தந்தை ஷாஜகானுக்குக் (ஆட்சி. 1628–1658) கீழ் இவர் நிர்வாக மற்றும் இராணுவப் பதவிகளை வகித்து வந்தார். ஒரு செயலாற்றல் மிக்க இராணுவத் தளபதியாக அங்கீகாரம் பெற்றிருந்தார். தக்காணத்தில் 1636-1637இல் அரசரின் நிர்வாகியாகவும், 1645-1647இல் குசராத்தின் ஆளுநராகவும் இவர் சேவையாற்றினார். 1648-1652இல் முல்தான் மற்றும் சிந்து மாகாணங்களை ஒன்றாக இவர் நிர்வகித்தார். அண்டை நாடான சபாவித்து நிலப்பரப்புக்குள் போர்ப் பயணங்களைத் தொடர்ந்தார். செப்தெம்பர் 1657இல் ஷாஜகான் தன்னுடைய மூத்த மற்றும் தாராள மனப்பான்மையுடைய மகனான தாரா சிக்கோவை தனது வாரிசாக முன் மொழிந்தார். இச்செயலை ஔரங்கசீப் ஏற்றுக் கொள்ள மறுத்தார். பெப்பிரவரி 1658இல் தன்னைத் தானே பேரரசனாக ஔரங்கசீப் அறிவித்துக் கொண்டார். ஏப்பிரல் 1658இல் சிக்கோ மற்றும் மார்வார் இராச்சியத்தின் கூட்டணி இராணுவத்தை இவர் தர்மத் யுத்தத்தில் தோற்கடித்தார். மே 1658இல் சமுகர் யுத்தத்தில் ஔரங்கசீப்பின் தீர்க்கமான வெற்றியானது இவரது இறையாண்மையை உறுதிப்படுத்தியது. இவரது மேலாட்சி நிலையானது பேரரசு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சூலை 1658இல் உடல்நலக் குறைவிலிருந்து ஷாஜகான் மீண்டதற்குப் பிறகு, ஔரங்கசீப் அவரை ஆட்சி செய்ய போதிய திறனற்றவர் என்று அறிவித்து ஆக்ரா கோட்டையில் சிறை வைத்தார்.
ஔரங்கசீப்பின் தலைமைத்துவத்தின் கீழ் முகலாயர்கள் தங்களது அதிகபட்ச விரிவை அடைந்தனர். இவர்களது நிலப்பரப்பானது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது. இவரது அரசாட்சியானது துரிதமான இராணுவ விரிவாக்கத்தினால் அடையாளப்படுத்தப்படுகிறது. முகலாயர்களால் பல அரசமரபுகளும், அரசுகளும் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டன. இவரது படையெடுப்புகள் ஆலம்கீர் ('துரந்தரர்') என்ற பட்டப்பெயரை இவருக்குப் பெற்றுத் தந்தன. உலகின் மிகப்பெரிய பொருளாதாரமும், மிகப்பெரிய உற்பத்தி மையமுமாக இருந்த சிங் சீனாவை முகலாயர்கள் முந்தினர். முகலாய இராணுவமானது படிப்படியாக முன்னேற்றப்பட்டது. உலகின் மிக வலிமையான இராணுவங்களில் ஒன்றாக உருவானது. ஔரங்கசீப் ஏராளமான உள்ளூர் கிளர்ச்சிகளை ஒடுக்கியிருந்தாலும் அயல் நாட்டு அரசாங்கங்களுடன் இவர் சுமூகமான உறவு முறைகளைப் பேணி வந்தார்.
நீண்ட காலம் ஆட்சி செய்த முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தான். இந்திய வரலாற்றில் இருந்த மிகப்பெரிய பேரரசுகளில் இவரது பேரரசும் ஒன்றாகும்.[6]