கிட்டூர் சென்னம்மா
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை / From Wikipedia, the free encyclopedia
கிட்டூர் இராணி சென்னம்மா என்பவர் கிட்டூரின் இந்திய ராணி. இந்திய நாட்டில் 1778 ஆம் வருடம் பிறந்தார். தனது சிறு வயதிலேயே சென்னம்மா குதிரையேற்றம், வாள் வீச்சு, வில்வித்தை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றார்.
கர்நாடக மாநிலத்தில், பெல்காம் என்ற ராஜ்ஜியத்தில், கித்தூர் என்ற ஊரின் அரசரான முல்லசர்ஜா என்பவருடன் சென்னம்மாவுக்குத் திருமணம் நடந்தது. அவரது கணவர் 1816இல் இறந்து விட்டார். அவர்களது ஒரே மகனும் 1824இல் இறந்து விடவே, சென்னம்மா சிவலிங்கப்பா என்பவரைத் தன் மகனாக தத்து எடுத்துக் கொண்டு, அவருக்கே முடிசூட்டினார். ஆங்கிலேயர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஆகவே, அவர்கள் சிவலிங்கப்பாவை நாடு கடத்த ஆணையிட்டார்கள். ராணி சென்னம்மா இந்த ஆணையை மதிக்கவில்லை. ஒரு மிகப்பெரிய போர் மூண்டது. ஆங்கிலேயர்களை மிகவும் துணிச்சலுடனும், தைரியத்துடனும், பெரும் ஆற்றலுடனும் எதிர்த்துப் போரிட்டாள், சென்னம்மா. ஆனால், அவர்களை எதிர்த்து அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல், அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு பைல்ஹோங்கல் கோட்டையில் கைதியாக வைக்கப்பட்டாள். அங்கு 1829 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி சென்னம்மாவின் மரணம் நேர்ந்தது.[1]
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த சென்னம்மா கர்நாடக மாநிலத்தில் ஒரு பெரும் வீராங்கனையாக இன்றும் போற்றப் படுகிறார்.