From Wikipedia, the free encyclopedia
ஓபராய் கிராண்டு ஹோட்டல் என்ற உணவு விடுதி கொல்கத்தாவின் முக்கியப் பகுதியான ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்துள்ளது. முன்னர், ‘கிராண்ட் ஹோட்டல்’ என்று அழைக்கப்பட்டது.[1] பிரித்தானிய கால ஆட்சியின் நேர்த்தியான கட்டிடங்களில் இதுவும் ஒன்று. அத்துடன் கொல்கத்தாவின் பிரபலமான ஹோட்டல்களில் ஒன்றாகவும் உள்ளது. இது ஓபராய் ஹோட்டல்கள் குழுமத்தின் ஹோட்டல்களில் ஒன்று.[2]
தற்போது ஓபராய் கிராண்ட் ஹோட்டல் அமைந்திருக்கும் இந்தப் பகுதியானது, முற்காலத்தில் எண் 13, சௌரிங்கீ சாலை என்ற பெயரில் அமைந்திருந்தது. அப்போது பிரித்தானிய கர்னல் எனப்படும் இராணுவ அதிகாரியின் தனிப்பட்ட இடமாக இருந்தது. திருமதி. அன்னி மாங்க் என்பவர் இக்கட்டடத்தை தங்கும் இடமாக மாற்றப்பட்டது. அதன் பின்பு, அவரே வணிக ரீதியாக விரிவுபடுத்தும் நோக்கில் எண் 14, 15 மற்றும் 17 போன்ற இடங்களையும் சேர்த்து வாங்கினார். ஆனால், எண் 16-க்குரிய இடத்தினை அவரால் வாங்க முடியவில்லை. எண் 16-க்கான இடத்தில் ஏற்கனவே ஒரு திரையரங்கு அமைந்திருந்தது இதன் முக்கியக் காரணமாகும். இதன் உரிமையாளர் ஆரதூன் ஸ்டீபன் ஆவார். இவர் இஸ்ஃபஹனைச் சேர்ந்த ஆர்மேனியன் ஆவார்.
1911 ஆம் ஆண்டில் இந்தத் திரையரங்கில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக ஸ்டீபன், இதை திருமதி. அன்னி மாங்கிற்கு விற்றார். பின்னர், அன்னி அதிக நேரமும் பணமும் செலவிட்டு, மறுசீரமைப்புச் செய்து, திரையரங்கு அமைந்திருந்த இடத்தினைத் தனது இடத்துடன் சேர்த்துத் தான் நினைத்தபடி வணிகத்தினை விரிவுபடுத்தினார். அதுதான் தற்போதைய ஓபராய் கிராண்ட் ஹோட்டலாக வளர்ந்துள்ளது.[3]
ஆடம்பரமான நியோகிளாசிக்கல் பாணியில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. கொல்கத்தாவில் இருந்த பெரும்பாலான ஆங்கிலேயர்களை இந்தக் கட்டடமும் அமைப்பும் பெரிதும் கவர்ந்தன. இதன் முக்கியக் காரணம் புத்தாண்டிற்காக இக்கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த கொண்டாட்டங்களே. இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் வழங்கப்பட்ட குளிர்ந்த மதுபானங்கள், விலையுயர்ந்த பரிசுகள், நடன அறையில் விடப்பட்ட 12 பன்றிக்குட்டிகள் மிகவும் பிரபலமாக பேசப்பட்டன. ஏனெனில், இந்த பன்றிக்குட்டிகளில் எதைப் பிடித்தாலும், பிடித்தவர்கள் அதைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.[3] இதனாலே இதன் புகழ் வெகுவிரைவாக கொல்கத்தா முழுவதும் பரவியது.
1930ஆம் ஆண்டு காலகட்டத்தில், ஸ்டீபனின் இறப்பிற்குப் பின், கொல்கத்தாவில் பரவிவந்த டைபாய்டு (குடற்காய்ச்சல்) தொற்றுநோயின் காரணமாக ஹோட்டலில் தங்கியிருந்த ஆறு பேர் இறந்தனர். இதற்கு இங்கிருந்த வடிகால் (சாக்கடை) அமைப்பே காரணம் என்று கருதப்பட்டது. இதனால் 1937 ஆம் ஆண்டில் ஹோட்டல் மூடப்பட்டது. அதன்பின்பு, இதை மோகன் சிங் ஓபராய் குத்தகைக்கு எடுத்தார். பின்பு அவரே 1939 ஆம் ஆண்டு ஹோட்டலை மீண்டும் திறந்தார். அத்துடன் 1943 ஆம் ஆண்டு ஹோட்டலைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டார்.[3]
இரண்டாம் உலகப் போரின்போது சுமார் 4000 வீரர்கள் தங்கியிருந்தனர். இதன் காரணமாகவே ஹோட்டலின் பெயர் வெகுவாக இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது. வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தினமும் விருந்தினர் கூட்டங்கள் நடைபெறத் தொடங்கின. அத்துடன் வாடிக்கையாளர்கள் ஹோட்டலினை மறக்காமல் இருக்கும்படியான பல பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கினர் ஹோட்டல் நிறுவனத்தினர்.
ஹோட்டலின் முழுத்தொகுதியினையும் ஒரு பெரிய வெள்ளைக் கட்டடம் மறைத்துள்ளது, இது ஹோட்டலின் முன்தோற்றத்தில் அழகினைக் கொடுக்க முக்கியக் காரணமாக உள்ளது. பால்கனி, மேல்மாடிப் பகுதிகளில் சிறப்பு வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரு இரும்புத் தூண்களால் தாங்கப்பட்ட போர்டிகோ (தாழ்வாரம்) வித்தியாசமான அழகுத் தோற்றத்தினை ஹோட்டலுக்கு அளிக்கிறது.
வணிக ரீதியாகவும், வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் ஓபராய் ஹோட்டல் பல விருதுகளைப் பெற்றுள்ளது[4] அவற்றுள் சில பின்வருமாறு:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.