குண்டுபொதி
From Wikipedia, the free encyclopedia
ஒரு சிதறுதுமுக்கியின் குண்டுபொதி என்பது, வழக்கமாக பல சிறிய, உலோக, கோள வடிவ எறியங்களான "குண்டுகளைக்" கொண்டிருக்கும் ஒரு தன்னிறைவான வெடிபொதி ஆகும். பாரம்பரியமாக, ஈயம் தான் பயன்படுத்தப்பட்டது; சுற்றுச்சூழலை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டதால், இப்போது எஃகு, தங்குதன், அல்லது பிசுமத் பயன்படுத்தப்படுகிறது. பல சிறு-குண்டுகளுக்கு பதில், சிதறுதுமுக்கிப் பரல் எனப்படும், ஒரேயொரு பெரிய எறியத்தையும் கூட பயன்படுத்தலாம்.
பெரும்பாலான குண்டுபொதிகள் மரையில்லாத குழலில் இருந்து சுடுவதற்கே வடிவமைக்கப்பட்டன, ஆனால் மரையிட்ட குழலுடைய சில பிரத்தியேகமான சிதறுதுமுக்கிகளில், நிலையமர்த்தப்பட்ட பரல்களை மட்டுமே பயன்படுத்த இயலும். நிலையமர்த்தப்பட்ட பரல்களின் துல்லியத்தை, மரையிட்ட குழல் அதிகரிக்கும்; ஆனால் குண்டுகளை சுடுவதற்கு இது ஏற்றதல்ல, ஏனெனில் குண்டுபொதிக்கு ஊட்டப்படும் சுழற்சியால் ஏற்படும் மையவிலக்கு விசை, அதனுள் கொத்தாக உள்ள குண்டுகளை கலைத்து பரவலாக ஆக்கிவிடும். ஒரு மரையிட்ட பரல்லை மரையிட்ட குழலில் மட்டுமல்லாது, மரையில்லாத குழலிலும் பிரயோகிக்கலாம்.[1] மீள்மம் போன்ற குறைந்த-அடர்த்தி கொண்ட பொருட்களால் ஆன பரல்களை பிரயோகிக்கும் சாகடிக்காத வெடிபொதிகளும், சிறப்பு சிதறுதுமுக்கி தளவாடங்களுள் ஒன்றாகும்.