சாட்ஸ்வொர்த் ஹவுஸ்
From Wikipedia, the free encyclopedia
சாட்ஸ்வொர்த் ஹவுஸ் (Chatsworth House) என்பது இங்கிலாந்தின் கிழக்கு மத்திய பகுதியிலுள்ள டார்பிஷயர் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு அரச மாளிகையாகும். இந்த மாளிகை ஒரு மலையடிவாரத்தில் டெர்வண்ட் (Derwent) நதிக் கரையோரத்தில் கட்டப்பட்டுள்ளது.
சாட்ஸ்வொர்த் மாளிகை Chatsworth House | |
---|---|
டர்வென்ட் ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள சாட்சுவர்த் மாளிகை | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | ஆங்கிலேயக் கலைப்பாணி, Italianate |
இடம் | டார்பிசயர், பேக்குவெல் இற்கு அருகில் |
நாடு | இங்கிலாந்து |
உயரம் | 125 மீட்டர் |
உரிமையாளர் | டெவன்சயர் கோமகன் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | வில்லியம் டால்மன், தாமசு ஆர்ச்சர் ஜெப்ரி வயட்வில் யோசேப்பு பாக்சுடன் ஜேம்சு பெயின் |
இது 1549 ஆம் ஆண்டு தொடக்கம் டெவன்ஷயர் கோமகனின் (Duke of Devonshire) இருப்பிடமாகவும் கெவண்டிஷ் குடும்பம் (Cavendish Family) என அழைக்கப்படும் அவரது குடும்பத்தின் வசிப்பிடமாகவும் இருந்து வருகிறது.
முதலில் கட்டப்பட்டபோது இருந்ததை விட இப்போது பெரு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. பிரதான கட்டடம் 1687 க்கும் 1707 க்குமிடையில் முதலாவது கோமகனால் புதுப்பித்துக் கட்டப்பட்டது. இதற்கு வடக்குப் புறமுள்ள நீண்ட கட்டடம் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆறாவது கோமகனால் கட்டப்பட்டது. 1970 ஆம் ஆண்டு பதினோராவது கோமகனும் சீமாட்டியும் (Duchess) சேர்ந்து காட்சிப்படுத்தும் பசுமைக்கூடத்தை அமைத்தார்கள். இவ்வாறு காலத்துக்குக் காலம் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வந்துள்ளன.[1]
ஐந்து நூற்றாண்டுகளாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 சந்ததியினரால் சேர்க்கப்பட்டு வந்த அரிய பொருட்கள் மாளிகையில் உள்ளன. மாளிகையின் உள்புறம் விலை மதிப்பில்லாத பல அரிய ஓவியங்கள், தளபாடங்கள், சிலைகள், புத்தகங்கள், பல வகையான கலைப்பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் என பிரமிக்க வைக்கும் காட்சிகள் உள்ளன. தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் கோவில்களில் காணப்படுவது போன்ற மேற்கூரை ஓவியங்கள் சுமார் 60 அடி உயரமுள்ள உள் விதானத்தில் வரையப்பட்டுள்ளன. ஐரோப்பாவிலேயே மிகச் சிறந்த கலைப்படைப்புகள் இங்கே உள்ளன.[சான்று தேவை]
மாளிகையின் ஒரு புறத்தில் படிப்படியாக விழும் நீர்வீழ்ச்சி உள்ளது.[2] மாளிகையின் முன்புறத்தில் எம்பரர் பவுண்டன் (Emperor Fountain) எனப்படும் சுமார் 150 அடி உயரத்துக்கு எழும்பும் நீரூற்று உள்ளது.[3] மாளிகைக்கு வடகிழக்கில் ஒரு பெரிய குதிரை லாயம் உள்ளது.
இரண்டாவது உலகப் போரின் போது இங்கிலாந்திலுள்ள பல அரச மாளிகைகள் இராணுவ பயன்பாட்டிற்கு விடப்பட்டன. ஆனால் இந்த மாளிகை ஒரு பெண்கள் பாடசாலையின் விடுதியாக மாற்றப்பட்டு சுமார் 300 மாணவிகள் தங்க வைக்கப் பட்டனர். அதனால் மாளிகை சேதமுறாமல் காப்பாற்றப்பட்டது.
தற்போதைய உரிமையாளர்கள் இம்மாளிகையை பெரும்பாலும் மக்கள் பயன்பாட்டிற்கேற்ற விதமாக பல ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். உல்லாச பயணிகளைக் கவரும் விதமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 105 ஏக்கர் பரப்பளவில் உள்ள பூங்காவில் அழகிய பூக்கள், சிலைகள், மாபெரும் நீர் விளையாட்டுக்கள் போன்ற மக்களை மகிழ வைக்கும் பல அம்சங்கள் உள்ளன.
1973 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இங்கேயுள்ள பண்ணையில் எல்லா வயதுக் குழந்தைகளுக்கும் ஏற்ற விதமாக விளையாட்டு இடங்கள், மிருகங்கள் என்பவை உள்ளன. அத்துடன் இந்த மண்ணை (பூமியை) நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம், நாம் உண்ணும் உணவு எங்கிருந்து எப்படிக் கிடைக்கிறது, பசுக்களையும் ஆடுகளையும் எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பன போன்ற விடயங்களை குழந்தைகள் இங்கே அறிந்து கொள்ள முடிகிறது. பசுவிலிருந்து எவ்வாறு பால் எடுக்கப்படுகிறது. முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு எப்படி வருகிறது, மீன் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு போன்றவற்றை நேரடியாகக் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காட்டின் நடுவில் மலையேறிச் செல்லும் அனுபவத்தையும் இங்கு பெறலாம். பண்ணைப் பொருட்களை வாங்குவதற்கு ஒரு கடையும் உள்ளது.
இங்கு திரைப்படக் காட்சிகளும் படமாக்கப்படுகின்றன. பிரைட் அண்ட் பிரயடஸ், த டச்சஸ் (The Duchess) (2008), த உல்ஃப்மன் (The Wolfman) (2010) ஆகியவை குறிப்பிடத்தக்கன.[4]