சிமுகன்
From Wikipedia, the free encyclopedia
சிமுகன் (Simuka, தம்ம லிபி𑀲𑀺𑀫𑀼𑀓, Si-mu-ka) என்பவர் சாதவாகன மரபின் அரசராவார்.[2] நானேகத்திலுள்ள சாதவாகனக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் மன்னர்களின் பட்டியலில் இவர் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.[3] புராணங்களில் முதலாவது ஆந்திர (சாதவாகன) அரசனின் பெயர் சிவ்முக, சிசுக, சிந்துக, ச்சிசுமக, சிப்ராக, சிறீமுக போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பெயர்கள் ஓலைச் சுவடிகளைப் படியெடுத்தல் மற்றும் மீள்படியெடுத்தல் மூலமாகச் சிதைவுற்ற "சிமுக" எனும் பெயரின் உச்சரிப்புக்களாக நம்பப்படுகிறது.[4]
சிமுகன் | |
---|---|
சாதவாகன மரபின் நிறுவனர் | |
ஆட்சிக்காலம் | கிமு 1-ஆம் நூற்றாண்டு |
பின்னையவர் | கண்கன் |
குழந்தைகளின் பெயர்கள் | சதகர்ணி |
அரசமரபு | சாதவாகனர் |
மதம் | பௌத்தம், சைனம், ஆசீவகம் |
கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், சிமுகனின் காலத்தை உறுதியாகக் கணிப்பிட முடியாதுள்ளது.[5] ஒரு குறிப்பிட்ட கொள்கையின் அடிப்படையில் இவன் கி.மு. 3ம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது. ஆயினும், பொதுவாக இவன் கி.மு, 1ம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. கல்வெட்டியல் ஆதாரங்கள் சிமுகனின் காலம் கி.மு. 1ம் நூற்றாண்டென வலுவாகத் தெரிவிக்கின்றன. கி.மு. 70-60 ஆம் ஆண்டுக்குரிய நானேகத் கல்வெட்டில் அப்போதைய அரசனாக விளங்கிய சதகர்ணியின் தந்தையாக சிமுகன் குறிப்பிடப்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது. எனினும், நானேகத் கல்வெட்டு, தொல்லெழுத்தியல் அடிப்படையில், நாசிக் குகைகளின் குகை 19-இல் உள்ள கி.மு. 100-70 காலப்பகுதியைச் சேர்ந்த கண்கனின் (பெரும்பாலும் சிமுகனின் தம்பியாக இருக்கக்கூடும்) கல்வெட்டுக்கும் பிந்தியதாகக் கருதப் படுகிறது.[6] ஆதாரங்கள் மீதான அண்மைய பகுப்பாய்வின் அடிப்படையில் சிமுகனின் ஆட்சிக்காலம் கி.மு. 120-96 ஆக இருக்கக்கூடும்.[7]
புராணங்களில் உள்ள எதிர்கால மன்னர்களின் பட்டியலின் படி, "சந்திரகுப்த மௌரியன் ஆட்சிபீடமேறி 137 ஆண்டுகளின் பின், சுங்கர்கள் 112 ஆண்டுகளும், கண்வயனர்கள் 45 ஆண்டுகளும் ஆட்சிபுரிவர். கண்வயனரின் இறுதி மன்னனான சுசர்மன் ஆந்திர சிமுகனால் கொல்லப்படுவான்". சந்திரகுப்த மௌரியனின் ஆட்சித் துவக்கம் கி.மு. 324 எனக் கணித்தால், சிமுகன் 294 ஆண்டுகளுக்குப் பின், அதாவது கி.மு. 30ல் ஆட்சிபீடமேறியுள்ளான்.[8]