![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2a/Delhi_fort.jpg/640px-Delhi_fort.jpg&w=640&q=50)
செங்கோட்டை
தில்லியில் உள்ள வரலாற்றுக் கோட்டை / From Wikipedia, the free encyclopedia
செங்கோட்டை (இந்தி: लाल क़िला, உருது: لال قلعہ) என்பது இந்தியாவின் பழைய டெல்லியில் உள்ள ஒரு வரலாற்று கோட்டையாகும்.இது இந்தியாவின் தலைநகரமான தில்லியில் அமைந்துள்ளது. ஷாஜகானின் ஆட்சியின் கீழ் முகலாய கட்டிடக்கலையின் உச்சத்தை இந்தக் கோட்டை பிரதிபலிக்கிறது, மேலும் பாரசீக அரண்மனைக் கட்டிடக்கலையை இந்திய மரபுகளுடன் இணைக்கிறது. இது 2007-ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது.[1]
செங்கோட்டை | |
---|---|
![]() லகோரி வாயிலிலிருந்து செங்கோட்டை | |
அமைவிடம் | தில்லி, இந்தியா |
உயரம் | 18–33 m (59–108 அடி) |
கட்டப்பட்டது | 12 மே 1639 – 6 April 1648; 376 ஆண்டுகள் முன்னர் (6 April 1648) |
கட்டிடக்கலைஞர் | உஸ்தாத் அகமது லகோரி |
கட்டிட முறை | இந்தோ-இஸ்லாமியக் கட்டிடக்கலை, முகலாயக் கட்டிடக்கலை |
உரிமையாளர் |
|
அலுவல் பெயர் | செங்கோட்டை வளாகம் |
வகை | பண்பாடு |
வரன்முறை | ii, iii, vi |
தெரியப்பட்டது | 2007 (31st session) |
உசாவு எண் | 231rev |
மண்டலம் | இந்தோ பசிபிக் |
1739-இல் நாதிர்ஷா முகலாயப் பேரரசின் மீது படையெடுத்தபோது கோட்டையின் கலைப்படைப்புகள் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 1857-இல் இந்தியக் கிளர்ச்சியைத் தொடர்ந்து கோட்டையின் பெரும்பாலான பளிங்கு கட்டமைப்புகள் ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்டன. கோட்டையின் தற்காப்புச் சுவர்கள் பெரிய அளவில் சேதமடையாமல் இருந்தன. பின்னர் இக்கோட்டை ஆங்கிலேயர்களின் படைத்துருப்புகளுக்கான இடமாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த 15 ஆகஸ்ட் 1947 அன்று, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இக்கோட்டையின் லாகோரி கேட் மீது இந்தியக் கொடியை ஏற்றினார்.அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று, கோட்டையின் முதன்மை வாயிலில் நாட்டின் பிரதமர் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றி, தேசிய அளவில் ஒளிபரப்பு உரையை ஆற்றுவார்.
செங்கோட்டை என்பது இந்துஸ்தானி லால் கிலாவின் மொழிபெயர்ப்பாகும் (இந்தி: लाल क़िला, உருது: لال قلعہ).[2][3] இச்சொல் அதன் சிவந்த மணற்கல் சுவர்களால் பெறப்பட்டது. சிவப்பு எனப்பொருள்படும் 'லால்' என்பது இந்துஸ்தானி மொழியில் இருந்தும் கோட்டை எனப்பொருள்படும் 'கிலா' என்பது என்பது அரபு சொல்லிலிருந்தும் பெறப்பட்டது. ஏகாதிபத்திய குடும்பத்தின் வசிப்பிடமான இக்கோட்டை முதலில் "ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை" என்று பொருள்படும் கிலா-இ-முபாரக் என்று அழைக்கப்பட்டது.[4][5] ஆக்ரா நகரில் உள்ள கோட்டையும் 'லால் கிலா' என்றே அழைக்கப்படுகிறது.