பணப்பயிர்
From Wikipedia, the free encyclopedia
பணப்பயிர் அல்லது காசுப்பயிர் என்பது விற்று இலாபம் ஈட்டுவதற்காக உற்பத்தி செய்யப்படும் பயிர் வகைகளைச் சேரும். இப்பயிர்களை உற்பத்தி செய்யும் பண்ணைகள் அல்லது தோட்டங்களைச் சாராத தரப்பினரே இவற்றை வாங்குவது வழக்கம்.[2] ஏலக்காய், காபி, பருத்தி, புகையிலை போன்ற தாவரம் சார்ந்த வேளாண்மை உற்பத்திகளே பணப்பயிர் என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கும். கால்நடை வேளாண்மை சார்ந்த உற்பத்திகளை இச்சொல் குறிப்பதில்லை. விற்பதற்காக உற்பத்தி செய்யப்படும் பயிர்களை வாழ்வாதாரப் பயிர்களில் இருந்து வேறுபடுத்துவதற்காகவே பணப்பயிர் என்னும் சொல் பயன்படுகிறது. வாழ்வாதாரப் பயிர் என்பது உற்பத்தியாளரின் குடும்ப உணவுத் தேவைகளை நிறைவு செய்யவும், அவர்களின் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தவும் உற்பத்தி செய்யப்படும் பயிர்களைக் குறிக்கும். பயிர்வகைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாகக் காணப்படலாம்.
முற்காலத்தில் ஒரு உற்பத்தியாளனுக்குப் பணப்பயிர் முக்கியமானதாக இருந்தாலும், அவருடைய மொத்த உற்பத்தியின் சிறு பகுதியாகவே அவை இருந்தன. தற்காலத்தில், சிறப்பாக, வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏறத்தாழ எல்லாப் பயிர்களுமே வருமானத்துக்காகவே உற்பத்தியாகின்றன. மிகவும் குறைவான வளர்ச்சி நிலையில் உள்ள நாடுகளில், வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிக தேவை கொண்டனவாகவும், ஏற்றுமதிப் பெறுமானம் கொண்டனவுமான பயிர்கள் பணப்பயிர்களாகச் செய்கை பண்ணப்படுவதைக் காணலாம். இவ்வாறான பயிர்களுட் பல குடியேற்றவாத ஆட்சிக் காலங்களில் குடியேற்றவாத ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை.
முக்கியமான பணப்பயிர்களின் விலைகள் உலகளாவிய பண்டச் சந்தையில் தீர்மானிக்கப்படுகின்றன. இவ்விலைகள், சரக்கனுப்பும் கட்டணங்கள், உள்ளூர் கேள்வி, வழங்கல் சமநிலை என்பவற்றைப் பொறுத்து உள்ளூர்ச் சந்தைகளில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். இந்த முறையில், உலகின் எங்காவது ஓரிடத்தில் இருந்து குறித்த பண்டம் பெருமளவில் உலகச் சந்தைக்கு வரும்போது, உலகச் சந்தை விலைகள் குறைகின்றன. இதன் விளைவாக, இப்பண்டங்களை உற்பத்தி செய்யும் பகுதிகளும், நாடுகளும், தனி மனிதரும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். காப்பி இவ்வாறான விலைத் தளம்பல்களுக்கு உள்ளாகும் பண்டங்களுள் ஒன்று.[3][4]