From Wikipedia, the free encyclopedia
பதிலித்தாய் முறை (நெறிப்படுத்தும்) சட்ட முன்வடிவு 2016 (The Surrogacy (Regulation) Bill 2016) என்பது இந்தியப் பெண்கள் பதிலித்தாய் முறையில் தவறாக உட்படுத்தப்பட்டு குழந்தைகள் பெறுவதைத் தடை செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். ஆணின் உயிரணுவையும், பெண்ணின் கருமுட்டையையும் சேர்த்து இன்னொரு கருப்பையில் வைத்து வளர்க்கும் முறையானது பதிலித்தாய் முறையாகும். குழந்தையின்மைக்கான சிகிச்சையின் இறுதி முயற்சிகளில் இது ஒன்று. இச்சட்ட முன்வடிவிற்கு நடுவணரசு அமைச்சரவை ஆகத்து 24, 2016 அன்று ஒப்புதலளித்து உள்ளது. இச்சட்ட முன்வடிவு பதிலித்தாய் முறை வணிகமயமாக்கப் படுவதைத் தடை செய்கிறது.[1]
2008 ஆம் ஆண்டு குசராத்து மாநிலம் அகமதாபாது நகரில் சப்பானிய ( Japanese) தம்பதி ஒன்று, பிரதி பென் மேத்தா என்னும் பெண்ணை பதிலித்தாயாக நியமித்து முன்பணம் செலுத்திவிட்டு சப்பான் சென்ற அந்த தம்பதியினர் குழந்தை பிறக்கும் முன்பே விவாக ரத்து செய்து கொண்டனர். பிறந்த குழந்தையை யாரிடம் கொடுப்பது என்ற சட்டச் சிக்கல் எழுந்து நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. தாய் குழந்தையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். குழந்தை எந்த நாட்டையும் சேராமல் குடியுரிமையின்மையாலும் சிக்கல் ஏற்பட்டது. நீதிமன்றம் குழந்தை ‘மாஞ்சி யமதாவை’ அதன் பாட்டியிடம் ஒப்படத்தது. குசராத்து உயர் நீதி மன்றம் இது குறித்து அரசு, சட்டம் இயற்ற வேண்டியதின் அவசரத்தையும் அவசியத்தையும் வலியுறுத்தியது.[1]
2012 ஆம் ஆண்டுஆசுத்திரேலிய தம்பதியர் ஒருவருக்கு ஒரு பதிலித்தாய் இரடைக்குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தார். பெற்றோர் ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டு மற்றொரு குழந்தையை எக்காரணமுமின்றி நிராகரித்து விட்டனர்.[2]
சென்னையைச் சேர்ந்த ஒரு தாய் குழந்தையைப் பெற்றுக் கொடுத்தபின் பேசிய பணத்திலிருந்து பாதி பணம் மட்டுமே பெற்றுக் கொண்டார். மீதி தொகையை இடைத்தரகர் எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக அத்தாய் மிகவும் அவதியுற்றார்.
புது டில்லியில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சனவரி 29, 2014 அன்று யுமா செர்பா என்னும் 26 வயதுப் பெண் முட்டை தானத்திற்காக அறுவை சிகித்சை செய்யப்படும் பொழுது உயிரிழந்தார்.[2]
சட்ட ஆணையம் தமது 228 ஆம் அறிக்கையில் பதிலித் தாய் முறை வணிகமயமாக்கப்படுவதைத் தடை செய்து, தகுதி வாய்ந்த இந்தியப் பெற்றொர் மட்டும் சேவை மனப்பான்மையுடன் முன்வரும் பதிலித் தாய்மார்கள் மூலம் இம்முறையை அனுசரிக்கும் சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசிற்குப் பரிந்துரை செய்தது [1][2]
2002 ஆம் ஆண்டு பதிலித்தாய் முறையை வணிக நோக்கில் அனுமதித்த முதல் நாடாக இந்தியா இருந்தது. 2012 ஆம் ஆண்டு இந்தியா உலகளவில் பதிலித் தாய் முறையின் தலை நகரம் என்று பெயர் பெறும் அளவு வணிக நோக்கில் இம்முறை தவறாகச் செயல் படுத்தப் பட்டுள்ளது. ஆண்டொன்றிற்கு சுமார் 50 கோடி டாலர் இதில் புழங்கியது.என்று அனில் மல்கோத்ரா என்பவர் ‘All aboard for the fertlity express’ என்னும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.