கொடுமணம்
From Wikipedia, the free encyclopedia
கொடுமணம், பந்தர் ஆகிய இரண்டு ஊர்களும் சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் இணையாகவே குறிப்பிடப்படுகின்றன. இவை இரண்டுமே அரபிக் கடலோரத் துறைமுகங்கள்.
கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் பந்தர் துறைமுகத்தை Balita எனக் குறிப்பிடுகிறார்.[1]
சங்ககாலத்து அரபிக்கடலோரத் துறைமுகங்களை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரிசைப்படுத்தினால் முசிறி, தொண்டி, (கொடுமணம்), பந்தர், குமரி என அமையும் எனப் பெரிப்ளஸ் குறிப்பு காட்டுகிறது.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் [2] சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்[3] காலத்திலும், அவன் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை[4] காலத்திலும் கொடுமணம் துறைமுகத்தைப் பகுதியாகக் கொண்ட பந்தர் துறைமுகம் செல்வாக்கினைப் பெற்றிருந்தது. இவர்களது முன்னோனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் [5] அட்சிக் காலத்தில் தொண்டித் துறைமுகம் செல்வாக்குடன் திகழ்ந்தது. [6] பாண்டிய நாட்டுக் கிழக்குக் கடற்கரை கொற்கை முத்தும், சேரநாட்டு மேற்குக் கடற்கரைப் பந்தர் முத்தும் பெரிதும் போற்றப்பட்டன.
பந்தர் என்னும் ஊரில் விலை உயர்ந்த அணிகலன்கள் அணியப்படாமல் துஞ்சிக் கிடந்தனவாம். [7]
கொடுமணம் துறைமுகத்தில் இறக்கப்பட்ட வேலைப்பாடு மிக்க அரிய கலைப்பொருள்கள் பாண்டில் என்னும் வண்டிகளில் ஏற்றி மேற்குத் தொடர்ச்சிமலை வழியாக உள்நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. [8]
பாணர்கள் பலர் கொடுமணம் என்னும் ஊரில் வாழ்ந்தனராம். அவர்கள் அவ்வூரிலிருந்த செல்வப் பெருமக்களிடம் கடன் பெற்றுத் திருப்பித் தர முடியாமல் நெடுமொழி (சாக்குப்போக்கு) கூறிவந்தனராம். அவர்கள் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த பந்தர் என்னும் ஊருக்குச் சென்றால் அங்கு இருக்கும் செல்வக்கடுங்கோ வாழியாதனிடம் தென்கடல் முத்தும் சிறந்த அணிகலன்களும் பரிசாகப் பெற்றுவந்து தம் கடும்பு என்னும் கூட்டுக் குடும்ப உறவினர்களின் கடன்களையும் தீர்த்துவிட்டு மகிழ்வாக வாழலாமாம். இவ்வாறு பாணரை ஆற்றுப்படுத்தும் பாடல் ஒன்றைக் கபிலர் பாடியுள்ளார்.[9]