பார்த்தலோமியோ டயஸ்
From Wikipedia, the free encyclopedia
பார்த்தலோமியோ டயஸ் (Bartholomew Diaz; c. 1451 – 29 மே 1500[2]), போர்த்துகல் அரசகுடும்ப பெருமானும் கடல்வழி தேடலாய்வாளரும் ஆவார். 1488ஆம் ஆண்டில் ஆபிரிக்காவின் தென்கோடி முனையைச் சுற்றிக்கொண்டு முதன்முதலாக அத்திலாந்திக்கிலிருந்து இந்தியப் பெருங்கடலை அடைந்தார். இவ்வாறு பயணித்த முதல் ஐரோப்பியராக அறியப்படுகின்றார்.
பார்த்தலோமியோ டயஸ் | |
---|---|
இலண்டனில் உள்ள தென்னாப்பிரிக்க உயர் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பார்த்தலோமியோ டயசின் சிலை. | |
பிறப்பு | 1450[1] அல்கார்வே, போர்த்துகல் இராச்சியம் |
இறப்பு | மே 29, 1500 (அகவை 49–50) நன்னம்பிக்கை முனை |
தேசியம் | போத்துக்கீசர் |
பணி | மீகாமன்; தேடலாய்வாளர் |
அறியப்படுவது | ஆப்பிரிக்காவின் தென்கோடியைச் சுற்றி பயணித்த முதல் ஐரோப்பியர். |
1487இல் போர்த்துகல்லின் இரண்டாம் ஜான் அரசர் டயசை கிறித்தவர்களின் பழங்கதை அரசர் பிரெசுடர் ஜான் இருந்த கிழக்கத்திய நிலப்பகுதியைக் கண்டறிந்து வருமாறு பணித்தார். 1488இல் பார்த்தலோமியோவும் அவரது மாலுமிகளும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடலோரமாகச் சென்று கொண்டிருந்தபோது புயலொன்றில் சிக்கிக் கொண்டனர். இதனால் தென்னாப்பிரிக்காவின் கடல்முனையொன்றில் இறங்க வேண்டியதாயிற்று. இந்த முனைக்கு அப்பால் செல்லவியலாது போனது. இதனால் அம்முனையை அவர்கள் "புயல்களின் முனை" எனப் பெயரிட்டனர். போர்த்துகல் திரும்பிய அவர்களை வரவேற்ற அரசர் இது போர்த்துகேய நாடுகாண் பயணர்களுக்கான வெற்றியை நிலைநிறுத்தும் "நன்னம்பிக்கை முனை" என மறுபெயரிட்டார். உண்மையிலேயே பிரெசுடர் ஜான் என்ற அரசர் இல்லாமையால் அவர்களால் அவரது நாட்டைக் கண்டறிய இயலவில்லை; ஆனால் அத்தலாந்திக்கிலிருந்து இந்தியப் பெருங்கடல் சென்றடைய வழி கண்டுபிடித்திருந்தனர்; இது ஆசியாவின் பல்வேறு நிலப்பகுதிகளை கண்டறிய மிக மதிப்புள்ளதாக ஆயிற்று.
பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் தலைமையில் பிரேசிலை நோக்கி சென்ற பிறிதொரு கடற்பயணத்தில் புயலொன்றின்போது கடலிலேயே இவர் மாண்டார். இவருக்கான சிலை தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் உள்ளது.