பிராமணம்
From Wikipedia, the free encyclopedia
பிராமணங்கள் வேத மந்திரங்களுக்கான விளக்கவுரையுடன் எழுதப்பட்ட பகுதிகள் ஆகும். வேதங்களில் உள்ள துதிப்பாடல்களுக்குரிய உரைநடை நூல்கள் எனலாம். சமயச் சடங்குகள், வேள்விகள் பற்றிய விளக்கங்களும், பலியிடுவது பற்றியும், அவற்றைச் செய்யும் முறைகளும் உள்ளன. புரோகிதர்களுக்கு சரியான வழியைக் காட்ட இவை பெரிதும் உதவுகின்றன.[1] ஒவ்வொரு வேதத்துடனும் இணைக்கப்பட்டுள்ள இவை இந்து வேத இலக்கியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.[2]
குறிப்பாக, சரியான முறையில் சடங்குகளைச் செய்வதற்கான விளக்கங்களுக்காகவும், வேதச் சடங்குகளின் குறியீட்டுப் பொருள் விளக்கத்துக்காகவும் பிராமணங்கள் சிறப்புப் பெறுகின்றன.[3] வெவ்வேறு வேதங்களில் காணப்படும் பிராமணங்களில் அமைப்புக்களில் ஒத்த தன்மை இல்லை. சில பிராமணங்களின் பகுதிகளாக ஆரண்யகங்கள் அல்லது உபநிடதங்கள் காணப்படுகின்றன.[4]
ஒவ்வொரு வேதச் சிந்தனைப் பிரிவும் தமக்கெனப் பிராமணங்களைக் கொண்டுள்ளன. பண்டைக்கால இந்தியாவில் ஏராளமான பிராமணங்கள் இருந்தன. இவற்றுட் பல இன்று அழிந்துபோய்விட்டன.[5] தற்காலத்தில் 19 பிராமணங்கள் முழுமையாகக் கிடைக்கின்றன.
பிராமணங்களும், அவற்றைச் சார்ந்த பிற வேத நூல்களும், பல நூற்றாண்டுகாலம் வாய்வழியாகவே கடத்தப்பட்டு வந்த பின் இறுதியாக எப்போது தொகுக்கப்பட்டன என்பது சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.[6] இவற்றுள் மிகப் பழையவை பொகாமு 900 எனக் கணித்துள்ளனர். சதபத பிராமணம் போன்ற பிந்திய பிராமணங்கள் பொகாமு 700 காலத்தை அண்டித் தொகுக்கப்பட்டிருக்கலாம்.[3][7][8] ஜான் கொண்டா என்பாரது கருத்துப்படி வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், முந்திய உபநிடதங்கள் என்பவற்றின் இறுதித் தொகுப்பு பௌத்தத்துக்கு முந்திய காலத்திலேயே (பொகாமு 600) நிறைவு பெற்றிருக்கக்கூடும்.[9]