புனித பர்த்தலமேயுத் திருநாள் படுகொலைகள்
From Wikipedia, the free encyclopedia
புனித பர்த்தலமேயுத் திருநாள் படுகொலைகள் (St. Bartholomew's Day massacre (French: Massacre de la Saint-Barthélemy) என்பது பிரான்சில் கத்தோலிக்கர்களுக்கும் கால்வினிய சீர்திருத்தசபையினருக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் 1572 ஆம் ஆண்டு புனித பர்த்தலமேயுத் திருநாளில் சில கத்தோலிக்க கலவரக்காரர்களும், சில வன்முறைக் குழுக்களும் இணைந்து இயூகனொட் என்றழைக்கப்பட்ட பிரெஞ்சு கல்வானிய சீர்திருத்தத் திருச்சபையினர் மீது மேற்கொண்ட படுகொலைகளைக் குறிக்கிறது
அக்கால பிரான்சு அரசர் ஒன்பதாம் சார்லஸின் தாய், அரசி காத்தரின் டு மெடிசியின் தூண்டுதலின் பேரில் இப்படுகொலைகள் நிகழ்ந்ததாகப் பரவலாகக் நம்பப்படுகிறது. கத்தோலிக்கரான அரசரின் சகோதரி மார்கரெட்டுக்கும் சீர்திருத்தத்திருச்சபைவாதியான நவார் இளவரசர் மூன்றாம் என்றிக்கும் இடையிலான திருமணம் நடைபெற்று நான்காம் நாள் இப்படுகொலைகள் அரங்கேறியது. இவ்வரச திருமணத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு பல முக்கிய, செல்வந்த இயூகனொட்சு பிரமுகர்கள் அந்நேரத்தில் பாரிசில் ஒன்று கூடியிருந்தனர்.
இயூகனொட்களின் அரசியல் தலைவரும், பிரெஞ்சு கடற்படைத் தளபதியுமான காசுபார் டு கொலினியின் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சியின் பின் இரண்டு நாட்கள் கழித்து இப் படுகொலைகள் புனித பர்த்தலமேயுத் திருநாளுக்கு முன்தினம் இரவு (23-24 ஆகஸ்ட் 1572) நடந்தது. அரசர் ஒன்பதாம் சார்லசு கடற்படைத் தளபதி கொலினி உட்பட இயூகனொட்களின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் கொல்லுமாறு உத்தரவிட்டார். இவ்வுத்தரவு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டு பாரிசு முழுவதும் பலர் கொல்லப்படதோடு சில வாரங்களில் ஏனைய நகரங்கள், ஊர்களிலிருந்த பல இயூகனொட்சுகளும் வன்முறை கும்பல்களால் கொல்லப்பட்டனர். சமீபத்தைய தரவுகளின்படி பிரான்சு முழுதும் பரவிய இப்படுகொலை நிகழ்வினால் பலியானேரின் எண்ணிக்கை 5,000 முதல் 10,000 வரை வேறுபடுகிறது.