மகப்பேறு மரணம்
From Wikipedia, the free encyclopedia
மகப்பேறு மரணம் (Maternal death or maternal mortality) என்பது ஒரு பெண் மகப்பேறு காலத்தில் இறப்பது அல்லது மகப்பேறு காலம் முடிந்து 42 நாட்களுக்குள் இறந்துவிடும் நிலையை குறிப்பதாகும் என உலக சுகாதார அமைப்பு வரையறை செய்கிறது. கர்ப்பகால மரணம், கர்ப்பகால இறப்பு, தாய்வழி மரணம், தாய்வழி இறப்பு, மகப்பேறுகால இறப்பு என பலபெயர்கள் இந்நிலையை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. கர்ப்பத்தின் கால அளவு, தளம் ஆகியனவற்றைப் பொருட்படுத்தாமல் இம்மரணம் நிகழ்கிறது. கர்ப்பம் அல்லது அதன் நிர்வாகத்துடன் தொடர்புடைய எந்தவொரு காரணத்தினாலும் இம்மரணம் நிகழலாம். ஆனால் நிர்வாகச் செயல்பாடு அல்லது தற்செயலான காரணங்களினால் இது நிகழ்வதில்லை[1][2]:1066. உலக சுகாதார அமைப்பின் வரையறையுடன் சேர்த்து கர்ப்பத்தின் முடிவைப்பற்றி பொருட்படுத்தாமல் மேலும் ஒரு வருட காலம் வரை நிகழும் மரணங்களையும் இவ்வகையான மரணமே என்று கருதலாம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகின்றன[3].
மகப்பேறு மரணம் Maternal death | |
---|---|
பிரசவத்தின் போது மரணமடையும் தாயிடமிருந்து குழந்தை எடுக்கப்படுகிறது. | |
சிறப்பு | மகப்பேறியல் |
மகப்பேறு மரணத்தின் அளவை எடுத்துக்கூற இரண்டு செயல்திறன் குறிகாட்டிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. மகப்பேறு இறப்பு வீதம், மகப்பேறு இறப்பு விகிதம் என்ற இரண்டு சொற்றொடர்களும் சில நேரங்களில் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. மகப்பேறு மரணத்தின் இவ்விரண்டு குறிகாட்டிகளுமே எம்.எம்.ஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றன [4]. 1990 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டுவரையிலான காலத்தில் உலகத்தின் தாய்வழி இறப்பு வீதம் 44% என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் 830 பெண்கள் கர்ப்பம் அல்லது குழந்தை பிரசவம் தொடர்பான காரணங்களால் இறக்கின்றனர்.[5]. ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் 2017 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி,
ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் இறந்து போகிறாள் என்ற அளவுக்கு இது சமமானது என்று ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் 2017 ஆம் ஆண்டின் அறிக்கை விளக்கம் தருகிறது. இரண்டு நிமிடத்திற்கு ஒரு பெண்ணாக இறந்து போகும் அப்பெண்களில் 20 முதல் 30 பெண்கள் கடுமையான மற்றும் நீண்டகால சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இந்த இறப்புகளும் நோயும் முற்றிலும் தடுக்கப்படக் கூடியவை ஆகும் [6]. ஐக்கிய நாடுகளின் நிதியம் 2015 ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டு உலகெங்கும் 303,000 பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான காரணங்களால் இறந்ததாக கூறியது.[6]. கடுமையான இரத்தப்போக்கும் வலிமிகு மகப்பேறுத் தடை போன்ற காரணங்களால் இந்த இறப்பு உண்டாகியுள்ளது[7] />. குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு மற்றும் திறமையான குழந்தை பிறப்பு அணுகுமுறைகள் தற்போது முன்னேற்றம் பெற்றுள்ளதால் மகப்பேறுகால மரண விகிதம் உலகளவில் தற்போது வெகுவாக்க் குறைந்துள்ளது. 1990 ஆம் ஆண்டு உலகில் 100,000 பெண்களில் 385 இறப்புகள் என்று இருந்த நிலை 2015 ஆம் ஆண்டு 100,000 பெண்களில் 216 இறப்புகள் என்ற நிலைக்குக் குறைந்துள்ளது. மேலும் பல நாடுகளும் கடந்த 10 ஆண்டுகளில் அவற்றின் மகப்பேறுகால இறப்பு விகிதத்தை பாதியாகக் குறைத்துள்ளன.[6].
கர்ப்பகால இறப்பைக் குறைப்பதில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், குறிப்பாக வளம் குன்றிய பகுதிகளில் முன்னேற்றத்திற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. 85% சதவீதத்திற்கும் அதிகமான கர்ப்பகால இறப்பு ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள ஏழை சமூகங்களில் காணப்படுகிறது.[6]. தாயின் மரணத்தின் விளைவால் இத்தகைய குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தன் தாயின் பிரசவத்தின் போது தப்பிப் பிழைக்கும் குழந்தைகளும் அவர்களின் இரண்டாவது பிறந்த நாளை அடைவதற்கு முன்பே இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்[6].