மானசா தேவி கோயில், அரித்துவார்
உத்தராகண்டம் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும் / From Wikipedia, the free encyclopedia
மானசா தேவி கோயில் (Mansa Devi Temple) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள புனித நகரமான அரித்துவாரில் உள்ள மானசா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும் . இமயமலையின் தென்கோடி மலைத் தொடரான சிவாலிக் மலையின் [1] [2] உச்சியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. பில்வ தீர்த்தம் என்றும் அழைக்கப்படும் இந்த கோவில் அரித்துவாரிலுள்ள பஞ்ச தீர்த்தங்களில் (ஐந்து புனித யாத்திரைகள்) ஒன்றாகும்.
மானசா தேவி கோயில், அரித்துவார் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தராகண்டம் |
மாவட்டம்: | அரித்துவார் |
அமைவு: | ஹரனின் படித்துறை |
ஆள்கூறுகள்: | 29°57′29″N 78°09′53″E |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | அறியப்படவில்லை |
சக்தியின் வடிவமான மானசா தேவியின் புனித இருப்பிடமாக அறியப்படும் இக்கோயில் சிவபெருமானின் மனதில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. மானசா வாசுகியின் (பாம்பு) சகோதரியாகக் கருதப்படுகிறார். அவள் மனித அவதாரத்தில் சிவபெருமானின் மகள் என்றும் நம்பப்படுகிறது. மேலும், ஒரு உண்மையான பக்தரின் அனைத்து விருப்பங்களையும் தெய்வம் நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.
மானசா தேவி கோயில் ஒரு சித்தர் பீடம் (இவை வழிபடுபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்று அறியப்படுகிறது) ஆகும். அரித்துவாரில் அமைந்துள்ள மூன்று பீடங்களில் இதுவும் ஒன்று. சண்டி தேவி கோவிலும், மாயா தேவி கோவிலும் மற்ற இரண்டு இடங்களாகும்.[3] சன்னதியின் உள்ளே இரண்டு தெய்வங்கள் உள்ளன. ஒன்று எட்டு கரங்களுடன் காணப்படுகிறது. மற்றொன்று மூன்று தலைகளையும் ஐந்து கரங்களையும் கொண்டுள்ளது.