மார்க்சியம்
From Wikipedia, the free encyclopedia
மார்க்சியம் (Marxism, மார்க்சிசம்) என்பது ஓர் வரலாற்றியலான சமூகப் பொருளியல் பகுப்பாய்வு முறையாகும். இது வர்க்க (பொருளியல் வகுப்பு) உறவுகளையும் சமூகப் போராட்டத்தையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில், அதாவது வரலாற்றை பொருளாயதவாதியின் விளக்க முறையிலும் சமூக உருமாற்றத்தை இணைமுரணியல் (இயங்கியல்) உலகப் பார்வை வழியிலும் பகுப்பாய்வு செய்து விளக்குகிறது. இது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட புதிய உலகப்பார்வை ஆகும்.
மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியம் இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும்.
மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தியல் ஆயுதமாக மார்க்சியர்களால் விளக்கப்படுகிறது.
மார்க்சிய முறையியல் தொடக்கத்தில் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்ற பொருளியலையும் சமூக அரசியல் ஆய்வையும் உள்ளடக்கிய முறையைப் பயன்படுத்தி, முதலாளித்துவத்தின் வளர்ச்சியை உய்யநிலையில் பகுப்பாய்வு செய்து, சமூகப் பொருளியல் மாற்றத்தில் வர்க்கப் போராட்டத்தின் பங்கினை விளக்கப் பயன்படுத்தியது. மார்க்சிய நோக்கில் முதலாளியச் சமூகத்தில் வருக்கப் போராட்டம், உபரிப் பொருள் விளைவிக்கும் சமூகமயப் பொருளாக்கத்தில் ஈடுபடும் பாட்டாளி வருக்கத்திற்கும் தனியார் உடமைவழியாக அந்தப் பொது உபரிப் பொருளை (தம் ஈட்டம்-இலாபம் என்ற பெயரில்) எடுத்துக் கொள்ளும் சிறுபான்மையான தனியார் உரிமையாளர்களே முதலாளி (பூர்சுவா) வருக்கத்திற்கும் இடையே எழும் முரண்களால் எழுகிறது. தம் உழைப்பால் உருவாகிய உபரிப் பொருள் தம்மிடம் சேராமல் அயன்மைப்பட்டுத் தனியாரிடம் (முதலாளிகளிடம்) சேரும் முரண்பாடு பாட்டாளி வருக்கத்திற்குத் தெளிவாகும்போது இந்த இரு பொருளியலாக முரண்பட்ட வகுப்புக்களிடையே சமூகப் போராட்டம் கிளைத்தெழுகின்றது. இதுவே முனைப்படைந்து சமூகப் புரட்சியாக உருமாறுகின்றது. இந்தப் புரட்சியின் நீண்டகால வெளிப்பாடாக சமூகவுடைமை அல்லது நிகரறச் சமூகம் உருவாகின்றது; இச்சமூகம், பொருளாக்கத்துக்கான வளங்கள் அனைத்தையும் சமூக உடைமையாக்கி ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்களிப்பிற்கேற்ற ஈட்டத்தைப் பகிர்ந்தளித்து நேரடிப் பயன்பாட்டிற்குத் தேவையான பொருள்வளத்தை மட்டுமே உருவாக்கும். உற்பத்தி விசைகளும் தொழினுட்பமும் முன்னேறி வருவதால் சமூகவுடமைச் சமூகம் இறுதியில் பொதுவுடைமைக்கு வழிவகுக்கும் எனக் கருதினார்; அனைத்தும் மக்களின் உடமையானதும் பொதுவுடைமைச் சமூகம், "ஒவ்வொருவரின் திறனுக்கேற்ற வகையில் உழைப்பு பெறப்பட்டு ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப பொது ஈட்டம் பகிர்ந்து வழங்கப்படும்" என்ற கொள்கைப்படி செயல்படும். இது வருக்கங்களற்ற, தனிநாட்டுப் பாங்கற்ற, ஒப்புயர்விலாத உலக மாந்தரினச் சமூகமாக முன்னேறும் என மார்க்சு மொழிந்தார்.
மார்க்சியப் பகுப்பாய்வுகளும் முறையியல்களும் பல்வேறு அரசியல் கருத்தியல்கள்பாலும் சமூக இயக்கங்கள்பாலும் தாக்கம் செலுத்திவருகின்றன. மார்க்சிய வரலாற்றியலையும் சமூகவியலையும் சில கல்வியியலாளர்கள் தொல்லியலுக்கும் மாந்தரினவியலுக்கும் தகவமைத்துப் பயன்படுத்துகின்றனர்;[1] அதேபோல, ஊடக ஆய்வுகளுக்கும்,[2] அரசியலுக்கும் அரங்கியலுக்கும் வரலாற்றியலுக்கும் சமூகவியலுக்கும் கலைக்கோட்பாட்டுக்கும் பண்பாட்டு ஆய்வுகளுக்கும் கல்வியியலுக்கும் பொருளியலுக்கும் புவியியலுக்கும் இலக்கியத் திறனாய்வுக்கும் அழகியலுக்கும் உய்யநிலை உளவியலுக்கும் (critical psychology) மெய்யியலுக்கும் கூடப் பயன்படுத்துகின்றனர்.[3] இப்புலங்கள் மார்க்சிய எனும் முன்னொட்டுடன் அறிமுகப்படுத்தப்படுகின்றன.