மார்பளவுத் தோற்றச் சிற்றோவியம்
From Wikipedia, the free encyclopedia
மார்பளவுத் தோற்றச் சிற்றோவியம் (Portrait miniature) என்பது, நீர்வர்ணம், குவாச் அல்லது எனாமல் பூச்சுக்களைக் கொண்டு வரையப்படும் சிறிய அளவிலான ஓவியத்தைக் குறிக்கும். இவ்வகை ஓவியம் கையெழுத்துப் பிரதிகளில் வரையப்பட்ட சிற்றோவிய நுட்பங்களில் இருந்து வளர்ச்சியடைந்தது. 16 ஆம் நூற்றாண்டில், குறிப்பாக இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயர்குடியினர் மத்தியில் இது பெயர்பெற்று விளங்கியதுடன், 18 ஆம் நூற்றாண்டில் நடுப் பகுதியில் இருந்து இது ஐரோப்பா முழுவதும் பரவியது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் பாதரச ஆவிப் படங்களும், ஒளிப்படங்களும் புழக்கத்துக்கு வரும்வரை மக்கள் இவற்றை மிகவும் விரும்பிப் பயன்படுத்தினர். இவ்வோவியங்கள் தொலை தூரத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ள மிகவும் பயனுள்ளவை. தனது மகளுக்கு மணம் பேச விரும்பும் ஒரு பிரது தனது மகளின் சிற்றோவியத்தை மணமகன் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கலாம். நீண்டகாலம் வீட்டைவிட்டு வெளியே இருக்க வேண்டிய படை வீரர்களும், மாலுமிகளும் தமது அன்புக்கு உரியவர்களின் சிற்றோவியங்களைத் தம்முடன் வைத்திருப்பர். தூரப் பயணத்தில் இருக்கும் கணவனின் சிற்றோவியத்தை மனைவி ஞாபகத்துக்காக வைத்திருப்பது உண்டு.
தொடக்ககாலச் சிற்றோவியர்கள் நீர்வர்ணத்தைப் பயன்படுத்தி விலங்குத் தோல்களில் வரைந்தனர். 17 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில், செப்புத் தகடுகளின்மீது எனாமலால் வரையப்பட்ட சிற்றோவியங்கள், குறிப்பாகப் பிரான்சு நாட்டில் விருப்பத்துக்கு உரியனவாகின. 18 ஆம் நூற்றாண்டில் சிற்றோவியங்கள் நீர்வர்ணங்களைப் பயன்படுத்தி யானைத் தந்தத் தகடுகளில் வரையப்பட்டன. இது அக்காலத்தில் ஒப்பீட்டளவில் மலிவாக இருந்தது. 40 மிமீ x 30 மிமீ போன்ற அளவுகளில் மிகவும் சிறியனவாக இருந்ததால், மார்பளவுத் தோற்றச் சிற்றோவியங்கள் பொதுவாகத் தனிப்பட்ட நினைவுப் பொருட்களாகவோ; நகைப்பேழை, மூக்குப்பொடிப் பேழை போன்றவற்றின் மூடியாகவும் பயன்பட்டன.