முதலாம் சோமேசுவரன்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் சோமேசுவரன்(Somesvara I வேறு பெயர்கள் ஆகவமல்லன், திரிலோகமல்லன் ஆட்சிக்காலம் 1042-1068 )என்பவன் ஒரு மேலைச் சாளுக்கிய மன்னனாவான். இவனுடைய தந்தை ஜெயசிம்மனுக்குப்பின் அரியணை ஏறினான். இவன் பிற்கால சாளுக்கியரில் குறிப்பிடத்தக்க மன்னனாவான் (கல்யாணி சாளுக்கியர் என்றும் அழைக்கப்படுவர்). சோழர்களுடனான போர்களில் பல தோல்விகள் அடைந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் வேங்கியின் அரியணையில் யார் அமர்வது என்பதைத் தீர்மானித்தான். மத்திய இந்தியாவில் இவனது வெற்றிகள் இவனது பேரரசின் வல்லமையைப் பறைசாற்றின. இவனது ஆட்சியின் போது, சாளுக்கிய பேரரசின் வடக்கு எல்லை குஜராத்வரை பரவியிருந்தது. மலைநாடு (கர்நாடகம்) பகுதியை ஆண்டுவந்த ஹொய்சளர்கள் சாளுக்கியர்களுக்கு அடங்கி ஆண்டுவந்தனர். ஹொய்சள வினையாதித்தனின் மகள் அல்லது தங்கையான ஹோய்சலா தேவி என்பவள் சோமேசுவரனின் அரசிகளில் ஒருத்தியாவாள். மேற்கே முதலாம் சோமேசுவரன் கொங்கண் மண்டலத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தான். கிழக்கில் அனந்தபூர், கர்னூல்வரை இவனது கட்டுப்பாட்டில் இருந்தது.[1]
வரலாற்றாசிரியர் கங்கூலியின் கூற்றின் படி, சோழர்களால் "இவனுடைய அரசுக்கு எந்த பகுதியிலும் குந்தகம் ஏற்படுத்த முடியவில்லை" என்கிறார். இவன் தனது தலைநகரை மான்யக்டாவில் இருந்து கல்யாணிக்கு மாற்றினான் (தற்போதய பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாணா ).[2][3]