ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் ஜார்ஜ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நான்காம் ஜார்ஜ் (George IV, 12 ஆகத்து 1762 – 26 சூன் 1830) பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து மன்னரும், அனோவர் இராச்சியத்தின் மன்னரும் ஆவார். இவரது தந்தை மூன்றாம் ஜார்ஜ் மன்னர் 1820 சனவரி 29 இல் இறந்ததை அடுத்து பதவிக்கு வந்து இறக்கும் வரை பதவியில் இருந்தார். 1811 முதல் அவரது தந்தை மனநோய் வாய்ப்பட்ட போது ஆட்சிப் பொறுப்பாளராக இருந்து வந்தார்.
நான்காம் ஜார்ஜ் தனது ஆட்சிக் காலத்தில் ஆடம்பரமான வாழ்க்கை நடத்தினார். பிரைட்டன் நகரில் ராயல் பவிலியனை நிர்மாணிக்கவும் பக்கிங்காம் அரண்மனையைப் புதுப்பிக்கவும் ஜான் நாசு என்ற கட்டிடக் கலைஞரை நியமித்தார். வின்சர் அரண்மனையைப் புதுப்பித்தார். அவரது அழகு மற்றும் கலாச்சாரம் அவருக்கு "இங்கிலாந்தின் முதல் மனிதர்" என்ற பெயரைத் தேடித் தந்தது. ஆனாலும் அவரது தந்தையுடனும் மனைவி கரொலைன் உடனான உறவு சிறந்ததாக இருக்கவில்லை. அவரது கலகலப்பான வாழ்க்கை முடியாட்சியின் கௌரவத்திற்கு இழுக்கைத் தேடித் தந்தது. தனது முடிசூட்டு விழாவிற்கு கரொலைனை அழைக்கவில்லை. அவரை திருமண பந்தத்தில் இருந்து விலத்தி வைக்க எடுத்த அவரது முயற்சியும் கைகூடவில்லை.
ஜார்ஜின் ஆட்சிக் காலத்தில், அரசாங்கத்தை பிரதமராகப் பதவியில் இருந்த லிவர்பூல் பிரபு கவனித்துக் கொண்டார். அமைச்சர்கள் ஜார்ஜின் நடத்தை சுயநலமானதும், பொறுப்பற்ற தன்மையாகவும் இருக்கக் கண்டனர். எல்லா நேரங்களிலும் அவர் தனக்கு மிகவும் பிடித்தவர்களின் செல்வாக்கின் கீழ் இருந்தார்.[1] நெப்போலியப் போர்களின் போது வீணான செலவுகள் செய்யப்பட்டதாக வரி செலுத்துவோரின் கோபத்திற்கு உள்ளானார். நெருக்கடியான காலகட்டங்களில் தேசியத் தலைவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளாததுடன், மக்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கவில்லை. போர் வெற்றியை பிரதமர் லிவர்பூலின் அரசாங்கமே கொண்டாடியது. அரசாங்கமே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. பிரதமர் லிவர்பூல் இளைப்பாறிய பின்னர், கத்தோலிக்கர்களின் சுதந்திரத்தை எதிர்த்து வந்தாலும், ஜார்ஜ் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. இவரது ஒரேயொரு சட்டபூர்வமான பிள்ளை இளவரசி சார்லட் 1817 இல் ஜார்ஜ் இறக்க முன்னரேயே இறந்து விட்டார். இதனால் ஜார்ஜிற்குப் பின்னர் அவரது இளைய சகோதரர் வில்லியம் ஆட்சியில் அமர்ந்தார்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கை

ஜார்ஜ் 1762 ஆகத்து 12 இல் இலண்டன், புனித யேம்சு அரண்மனையில் மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்கும் சார்லட்டிற்கும் மூத்த மகனாகப் பிறந்தார். பிறப்பில் இவர் கோர்ன்வால் இளவரசர் என்றும் ரொதிசி இளவரசர் என்றும் அழைக்கப்பட்டார்; பின்னர் வேல்சு இளவரசர் என்றும், செஸ்டர் இளவரசர் என்றும் அழைக்கப்பட்டார்.[2] சிறு வயதிலேயே ஆங்கிலந்த்துடன் பிரெஞ்சு, இடாய்ச்சு, இத்தாலிய மொழிகளைக் கற்றார்.[3]
தனது 18-வது அகவையில், அவரது சர்ச்சைக்கு உட்படாத தந்திக்கு மாறுபட்ட விதத்தில் ஜார்ஜ் பெரும் குடிப் பழக்கம், பிற பெண்களுடனான தொடர்பு என வாழ்க்கையை அனுபவித்தார். ஜார்ஜ் நகைச்சுவையுடன் உரையாடக்கூடியவர். அவரது அரண்மனையை பெரும் செலவுடன் அலங்கரிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். கார்ல்ட்டன் மாளிகையில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்.[4] 21 வது அகவையில், மரியா என்பவர் மீது காதல் கொண்டார். ரோமன் கத்தோலிக்கரான மரியா ஜார்ஜை விட 6 ஆண்டுகள் மூத்தவர். இரண்டு தடவைகள் மணமுறிவு பெற்றவர்.[5] அரசரின் விருப்பமின்றி கத்தோலிக்கரான மரியாவைத் திருமணம் செய்ய சட்டம் அனுமதிக்கவில்லை.[6] ஜார்ஜ் மரியாவின் வீட்டில் 1785 டிசம்பர் 15 இல் சட்டபூர்வமற்ற முறையில் அவரைத் திருமணம் புரிந்து கொண்டார்.[7] இத்திருமணம் பற்றிய விபரங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.[8]
இளவரசர் ஜார்ஜின் பெரும்தொகையான கடன்களை நாடாளுமன்றம் அடைத்தது. இது அக்காலத்தில் £161,000 ஆகும்.[3][9][10]
Remove ads
1788 ஆட்சிக் குழப்பம்

1788 இல் மன்னர் மரபு வழி எலும்புப் பாதிப்பு காரணமாக மனநிலை பாதிக்கப்பட ஆரம்பித்தது.[11][12] செப்டம்பர் முதல் நவம்பர் வரை நாடாளுமன்ரக் கூட்டங்களை ஒத்தி வைத்தார்.[13][14] நவம்பரில் நாடாளுமன்றம் ஆட்சி குறித்து விவாதித்து, ஜார்ஜிற்கு இடைக்காலத்தில் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நிருவகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.[13][14]
திருமணம்
இளவரசரின் கடன் சுமை பெரும்தொகையாக அதிகரிக்கத் தொடங்கியது. தந்தை அவரை பிரன்சுவிக் இளவரசி கரொலைனைத் திருமணம் செய்தால் ஒழிய, அவரது கடன்களை அடைக்க முடியாது எனக் கண்டிப்பாக இருந்தார்.[15] 1795 ஏப்ரல் 8 இல் இருவரும் புனித யேம்சு அரண்மனையில் திருமணம் புரிந்து கொண்டனர். இத்திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1796 இல் வேல்சு இளவரசி சார்லட் பிறந்ததை அடுத்து இருவரும் பிரிந்தே வாழ்ந்து வந்தனர். ஜார்ஜ் தனது மீதிக் காலத்தில் மரியாவுடனேயே வாழ்ந்து வந்தார்.[16] ஜார்ஜிற்கு பல்வேறு பெண்களூடாக சட்டபூர்வமற்ற பிள்ளைகள் பல இருந்ததாக நம்பப்படுகிறது.[17]
முடி சூடல்

மூன்றாம் ஜார்ஜ் மன்னர் 1820 இறந்ததை அடுத்து, இளவரசர் நான்காம் ஜோர்ஜ் தனது 57 வது அகவையில், மன்னராக முடிசூடினார்.[18] நான்காம் ஜார்ஜின் மனைவி கரொலைனுடனான உறவுகள் மேலும் பாதிக்கப்பட்டன. 1796 முதல் இருவரும் பிரிந்தே வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் வேறு தொடர்புகளும் இருந்தன. ஜார்ஜின் முடி சூடல் நிகழ்வில் கரொலைன் கலந்து கொள்வதை ஜார்ஜ் அனுமதிக்கவில்லை. கரொலைனை அரசியாகவும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.[19] 1821 சூலை 19 இல் வெஸ்ட்மினிஸ்டர் மடத்தில் நடந்த முடிசூட்டு விழாவில் கரொலைன் கலந்து கொள்ளவில்லை. அதே நாளில் கரொலைன் சுகவீனமுற்று ஆகத்து 7 இல் காலமானார். கரொலைன் தனக்கு நஞ்சூட்டப்படதாக பலரிடம் கூறியுள்ளார்.[20]
Remove ads
மறைவு

நான்காம் ஜார்ஜ் தனது ஆட்சிக் காலத்தின் பிற்காலத்தில் வின்சட்மரண்மனையில் தனிமையிலேயே வாழ்ந்தார்.[21] அளவுக்கு அதிகமான மது அருந்தல், முறையற்ற வாழ்க்கை போன்றவற்றால் 1820களின் இறுதியில் ஜார்ஜின் உடல்நிலை பாதிப்படைய ஆரம்பித்தது.[22] கீல்வாதம், தமனித்தடிப்பு போன்ற நோய்களால் பாதிப்படைந்தார். முழு நாளும் படுக்கையிலேயே இருக்க வேண்டியதாயிற்று.[3]
1828 டிசம்பரில், அவரது தந்தையைப் போன்றே, கண் புரை நோய் காரணமாக ஜோர்ஜ் தனது கண் பார்வையையும் இழந்தார்.[23] 1830 சூன் 26 அதிகாலையில் வின்சர் அரண்மனையில் ஜார்ஜ் இறந்தார்.[24]
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads