காத்திக் கோடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காத்திக் கோடு (Gothic Line, இடாய்ச்சு: Gotenstellung, இத்தாலியம்: Linea Gotica) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு. இத்தாலியில் ஜெர்மானியர்களின் இறுதிகட்ட பாதுகாவல் நிலைகளில் இது முதன்மையானதாக இருந்தது. இதனை ஊடுருவ நேச நாட்டுப் படைகள் 1944ல் மேற்கொண்ட தாக்குதல் காத்திக் கோடு தாக்குதல் (Gothic Line offensive) என்றழைக்கபப்டுகிறது.
செப்டம்பர் 1943ல் இத்தாலி மீது படையெடுத்த நேச நாட்டுப் படைகள் விரைவில் தெற்கு மற்றும் மத்திய இத்தாலியைக் கைப்பற்றி வடக்கு நோக்கி முன்னேறின. 1944ன் மத்தியப் பகுதியில் இத்தாலியின் வட பகுதி மட்டும் ஜெர்மானியர் கட்டுப்பாட்டில் இருந்தது. வடக்கு இத்தாலியில் ஜெர்மானியர்கள் அமைத்திருந்த இறுதி கட்ட பலமான அரண்நிலை காத்திக் கோடு என்றழைக்கப்பட்டது. இத்தாலியின் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரை வரை அமைந்திருந்த காத்திக் கோடு, அப்பென்னைன் மலைத் தொடரை ஒட்டி அமைந்திருந்ததால், செயற்கை அரண்களோடு இயற்கை அரண்களும் அதற்கு பலம் கூட்டின. சில இடங்களில் 10 கி.மீ. அகலத்துக்கு பாதுகாவல் நிலைகள் அமைக்கப்பட்டிருந்த அரண்கோட்டினை ஆகஸ்ட் 1944ல் நேச நாட்டுப் படைகள் தாக்கின. கிழக்குப் பகுதியில் பிரித்தானிய 8வது ஆர்மியும் மேற்கிலும் மத்தியிலும், அமெரிக்க 5வது ஆர்மியும் இத்தாக்குதலில் ஈடுபட்டன. ஆனால் இப்படைப்பிரிவுகளின் பலம் முந்தைய மாதங்களைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்திருந்தது. பிரான்சு மீதான படையெடுப்பில் பங்கேற்க பல படைப்பிரிவுகள் இத்தாலியிலிருந்து அங்கு அனுப்பப்பட்டிருந்தன.
இருமாத கால கடுமையான சண்டைக்குப் பின்னர் பல இடங்களில் நேச நாட்டுப் படைகள் காத்திக் அரண்நிலைகளை ஊடுருவி விட்டன. ஆனால் பலத்த ஜெர்மானிய எதிர்ப்பு, சாதகமற்ற புவியியல் நிலை போன்ற காரணங்களால், அவ்வெற்றிகளை தக்கவாறு பயன்படுத்தி ஜெர்மானியப் படைகளை முறியடிக்க இயலவில்லை. அக்டோபர் 1944 முதல் போர்க்களத்தில் தேக்க நிலை ஏற்பட்டு விட்டது. விரைவில் குளிர்காலம் ஆரம்பமானதால் நேச நாட்டுப் படைகள் தங்கள் தாக்குதலைக் கைவிட்டனர். இதன்பின் பல மாதங்களுக்கு இத்தாலியப் போர்முனையில் பெரிய மோதல்கள் எதுவும் நிகழவில்லை.
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads