2 கொரிந்தியர் (நூல்)
திருவிவிலிய நூல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
2 கொரிந்தியர் அல்லது கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (Second Letter [Epistle] to the Corinthians) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் ஏழாவதாக அமைந்ததாகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் B' Epistole pros Korinthious (B' Επιστολή προς Κορινθίους ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula II ad Corinthios எனவும் உள்ளது [1]. இம்மடலைத் தூய பவுல் [2] கி.பி. 55-56ஆம் ஆண்டுகளில் எழுதியிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து [3].

Remove ads
2 கொரிந்தியர்: தன்னிலை விளக்க மடல்
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் திருத்தூதர் பவுலின் தன்னிலை விளக்க மடலாக அமைந்துள்ளது. இது திருத்தூதர் பவுலின் உள்ளத்தையும் உணர்வுகளையும் மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. தம் திருத்தூதுப் பணி முறையானது என நிலைநாட்டுவதையும், தம் பணியை இகழ்ந்து பேசியவர்கள்மேல் சினங்கொண்டு அவர்களைத் தாக்குவதையும், தாம் இகழ்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது உள்ளம் வேதனையடைந்து கண்ணீர் விடுவதையும், கொரிந்தியர் மனம் மாறியபோது ஆறுதலால் நிறைந்து மனம் மகிழ்ச்சியடைவதையும் நாம் கண்டு அவரோடு ஒத்துணர முடிகிறது.
Remove ads
2 கொரிந்தியர் திருமுகம் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு முதலாம் திருமுகத்தை எழுதிய பின் கொரிந்திலிருந்த போலிப் போதகர்கள் அவருக்கு எதிராகக் கலகமூட்டினர். அவர் கொரிந்துக்கு வரும் திட்டத்தை மாற்றியதால் அவர் உறுதியற்ற மனமுடையவர் என்றனர். நன்கொடை திரட்டி வந்ததால் நேர்மையற்றவர் என்றனர். அவர் தற்பெருமை மிக்கவர், நல்ல தோற்றமோ பேச்சுவன்மையோ இல்லாதவர், இயேசு கிறிஸ்துவின் திருத்தூதராய் இருக்கத் தகுதியற்றவர் என்றனர்.
திருத்தூதர் பவுல் தம் உடன்பணியாளரான தீத்துவைக் கொரிந்துக்கு அனுப்பி இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாணப் பணித்தார். தீத்து திரும்பி வந்தபின் கொரிந்தியர் மனம் மாற்றம் பெற்றதை அவரிடமிருந்து அறிந்து மகிழ்ந்தார். குறிப்பாக, 1 கொரி 5இல் சொல்லப்பட்ட ஒழுக்கக்கேடான ஒருவன் மனம் மாறி மீண்டும் திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது குறித்து மகிழ்ந்தார். எனவே, மனம் மாறிய கொரிந்தியருக்கு நன்றி கூறும் நோக்குடனும் தம் திருத்தூதுப் பணியின் அதிகாரத்தை ஏற்காதோரை அதை ஏற்கச் செய்யும் நோக்குடனும் அவர் இம்மடலை எழுதினார்.
இம்மடல் கி.பி. 55-56ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர்.
Remove ads
2 கொரிந்தியர் ஒரே கடிதமா, பல கடிதங்களின் தொகுப்பா?
இத்திருமுகம் ஒரே மடலா அல்லது பல மடல்களின் தொகுப்பா என்பது பற்றி அறிஞரிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனை சிலர் இன்னும் ஒரே மடலாகவே பார்க்கின்றனர்.
மற்றும் சிலர் 1 முதல் 9 வரையிலான அதிகாரங்களை ஒரு மடலாகவும், 10 முதல் 13 வரையிலான மடலை இன்னொரு மடலாகவும் பார்க்கின்றனர்.
இன்னும் சிலர் கருத்துப்படி, இம்மடல் ஐந்து வெவ்வேறு மடல்களின் தொகுப்பு ஆகும். இதைக் கீழ்வருமாறு பகுக்கின்றனர்:
- 2 கொரி 2:14 - 7:4 --திருத்தூதர் பவுல் தம் பணிபற்றி எழுதிய விளக்க மடல்.
- 2 கொரி அதிகாரங்கள் 10 முதல் 13 வரை -- திருத்தூதர் பவுல் எழுதிய கண்ணீர் மடல்.
- 2 கொரி 1:1 - 2:13; 7:5-16 -- திருத்தூதர் பவுல் ஒப்புரவு பற்றி எழுதிய மடல்.
- 2 கொரி 8:1-24—நன்கொடை பற்றிக் கொரிந்தியருக்குத் திருத்தூதர் பவுல் எழுதிய மடல்.
- 2 கொரி 9:1-15—நன்கொடை பற்றி அக்காயாவினருக்குத் திருத்தூதர் பவுல் எழுதிய மடல்.
மேற்கூறியவாறு பகுத்து, அவ்வரிசையில் வாசிக்கும்போது மிகுந்த கருத்துத் தொடர்பும் தெளிவும் கிடைக்கிறது.
2 கொரிந்தியர் நூலின் உள்ளடக்கம்
இத்திருமுகத்தின் முதற்பகுதியில் திருத்தூதர் பவுல் கொரிந்து திருச்சபையுடன் தமக்கிருந்த உறவை விவரிக்கிறார். புதிய உடன்படிக்கையே தம் பணிக்கும் கிறிஸ்துவின் பணிக்கும் அடிப்படை என்கிறார். பணியில் வரும் துன்பங்கள் குறித்தும் அப்பணிக்கான நோக்கம் குறித்தும் பேசுகிறார். அந்நோக்கம் கிறிஸ்துவுடன் ஒப்புரவு ஆதல் என்கிறார். தாம் வரும்போது நன்கொடைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டுமென அறிவுரை கூறுகிறார்.
இறுதியில், தாம் நிச்சயமாகக் கொரிந்துக்கு வரப்போவதாக வலியுறுத்தித் தாம் உண்மையான திருத்தூதர் என்றும், ஒரு திருத்தூதருக்குரிய தன்மையுடன் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகவும் கூறுகிறார்.
Remove ads
2 கொரிந்தியர் மடலிலிருந்து ஒரு பகுதி
2 கொரிந்தியர் 12:1-6
"பெருமை பாராட்டுதல் பயனற்றதே.
ஆயினும் பெருமை பாராட்ட வேண்டி இருப்பதால்
ஆண்டவர் அருளிய காட்சிகளையும் வெளிப்பாடுகளையும் குறித்துப் பேசப் போகிறேன்.
கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும்.
அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை
மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான்.
அவன் உடலோடு அங்குச் சென்றானா, உடலின்றி அங்குச் சென்றானா, யானறியேன்.
கடவுளே அதை அறிவார்.
ஆனால் அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான் என்பது எனக்குத் தெரியும்.
நான் மீண்டும் சொல்கிறேன்;
அவன் உடலோடு அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா யானறியேன்.
கடவுளே அதை அறிவார்.
அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான்.
இந்த ஆளைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன்.
என் வலுவின்மையே எனக்குப் பெருமை.
அப்படி நான் பெருமை பாராட்ட விரும்பினாலும் அது அறிவீனமாய் இராது.
நான் பேசுவது உண்மையாகவே இருக்கும்.
ஆயினும் என்னிடம் காண்பதையும் கேட்பதையும் விட
உயர்வாக யாரும் என்னைக் கருதாதபடி நான் பெருமை பாராட்டாது விடுகிறேன்.
எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு
பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது.
அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது.
நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது.
அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்.
ஆனால் அவர் என்னிடம்,
"என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" என்றார்.
ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன்.
அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்.
ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும்
இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும்
கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன்.
ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்."
Remove ads
2 கொரிந்தியர் நூலின் உட்பிரிவுகள்
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads