சிட்லப்பாக்கம் ஏரி
ஒரு சென்னை ஏரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிட்லப்பாக்கம் ஏரி (ஆங்கிலம்: Chitlapakkam lake) என்பது சென்னை, சிட்லப்பாக்கம் நகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஏரியாகும். இதுதான் இப்பகுதியில் உள்ள முதன்மை நீர்நிலையாகும்.[1]
இந்த ஏரியின் தற்போதைய பரப்பளவு 46.88 ஏக்கர் ஆகும்.[2]
Remove ads
வரலாறு
சிட்லப்பாக்கம் நகரமாவதற்கு முன் விவசாயம் சார்ந்த இடமாக இருந்தது. அப்போது இந்த ஏரியின் நீர் நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அருகில் உள்ள பச்சைமலை ஏரியின் முதன்மை நீராதாரமாக இருந்தது.
1980 வரை, இந்த ஏரிக்கரை ஒரு பொழுதுபோக்கு இடமாக இருந்தது. ஏரி அருகே உள்ள பகுதிகளான செம்பாக்கம், அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகளின் தண்ணீர் தேவைக்கு இந்த ஏரி பயன்பட்டது. 1980 களின் துவக்கம் வரை, இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் வெறும் 5 அடி ஆழத்தில் காணப்பட்டது. கோடைக்கால உச்சத்தில்கூட நிலத்தடி நீர் 10 அடிக்கு கீழே சென்றதில்லை. இவ்வாறான தண்ணீர் வசதி காரணமாக இப்பகுதியில் குடியிருப்புகள் உருவாயின. ஏரியின் சூழல் இடம் பெயரும் பறவைகள் ஈர்த்தது மற்றும் பறவை நோக்கர்களுக்கு ஒரு பிடித்தமான இடமாக இருந்தது.[3]
1990 ஆம் ஆண்டு இந்த ஏரியைச் சேர்ந்த இடத்தில் அரசாங்கத்தால் பொதுப்பயன்பாட்டுக்கு மாவட்ட நீதிமன்றம், பேருந்து நிலையம், தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஏரிக்கு வந்த ஆபத்தை உணர்ந்த உள்ளூர்வாசிகள் அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து பரப்புரை செய்து ஏரியைக் காத்தனர்.[3] சமூக அழுத்தத்தினால் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஏரியைக் காத்து, இந்த ஏரியின் சேமிப்பு திறன் அதிகரித்துள்ளது. ஏரிக்கரையை வலுப்படுத்தும் நடவடிக்கையாக 2003 இல் இதன் கரைகள் 10 அடி உயரம்வரை உயர்த்தப்பட்டது. எனினும், இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சரியான வடிகால் வசதி இல்லாததால் ஏரியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் பல கேலன்கள் கலந்து மாசு ஏற்படுகிறது. பொதுப்பணித் துறையின் மதிப்பீடுகளின்படி, ஏரிக்குச் சொந்தமான இடத்தில் 175 ஆக்கிரமிப்புகள் பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ளது.[3]
Remove ads
ஏரி

ஏரியின் மொத்த நீர் தேங்கும் பரப்பளவு 86.86 ஏக்கர் ஆகும்.[2] என்றாலும் ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரியின் பரப்பு 47 ஏக்கராக சுருங்கிவிட்டது.[3]
ஏரிப் பாசனத்தில் விவசாயம் செய்யப்ப்பட்ட நிலப்பகுதிகள் குடியிருப்புகளாக மாறிவிட்டதால் இங்கு விவசாயம் இல்லாமல் போனது. இந்த ஏரிக்கு மலைப்பகுதியில் இருந்து நீர் வரக்கூடிய வகையில் மூன்று வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளன.[4]
இதனால் சென்னையின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது ஏரியின் நீர்மட்டம் இங்கு மேலேயே உள்ளது. இப்பகுதியில் நீர் மட்டம் 2.50 முதல் 8 மீட்டர்வரை உள்ளது. நீரில் உள்ள உப்பின் அளவு 400 முதல் 900 பிபிஎம் ஆகும்.[5] ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் கூழைக்கடாக்களை பார்க்க இயலும். மேலும் ஆண்டு முழுவதும் சாம்பல் நாரை போன்ற பறவைகளைக் காணலாம்.
Remove ads
சூழல்
ஏரிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீரால் ஏரி மாசடைகிறது.[3] மேலும் ஏரிப்பகுதியில் உள்ள 15,000 வீடுகளின் குப்பைகளும், ஜிஎஸ்டி சாலையில் உள்ள வணிக மையங்களின் கழிவுநீரும் சேர்ந்து ஏரிநீரை மாசுக்கு உள்ளாக்குகின்றன.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads