தாவோ தே ஜிங்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாவோ தே ஜிங் (Tao Te Ching)[1] (சீனம்: 老子; பின்யின்: Lǎozǐ),[2][3] என்பது ஒரு சீன செவ்வியல், மெய்யியல் நூல் ஆகும். இது லாவோ சீ என்ற ஒரு அறிஞரால் கிமு 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது (சீனம்: 老子; பின்யின்: Lǎozǐ, லாவோ சீ என்றால் பழைய ஆசிரியர் "Old Master" என்பது பொருள்) சவு அரசமரபு காலத்தில் அதன் தலைநகரில் ஆவனக் காப்பாளராக பணிபுரிந்தவர் இவர் என்று கருதப்படுகிறது.
இந்த நூல்தான் சீனாவில் உள்ள தாவோயியம் என்னும் சமயத்துக்கு அடிப்படை நூலாக உள்ளது. இதன் செல்வாக்கு கிழக்கு ஆசியாவுக்கு வெளியேயும் பரவலாக பரவியுள்ளது, மேலும் உலக இலக்கிங்களில் மிகுதியான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் ஒன்றாக உள்ளது.[2] தமிழில் இது சி. மணியால் மொழிபெயர்க்கப்பட்டு க்ரியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.[4]
Remove ads
நூல் எழுதப்பட்டக் கதை
லாவோ சீ, தான் வாழ்ந்த பகுதியில் போர் சூழல் ஏற்பட்டதால், அங்கே வாழ விருப்பத்தை இழந்தார். வாழ்வின் சாராம்சத்தை அறிந்துகொள்ளும் பொருட்டு தியானத்தில் அவர், அங்கே பல ஆண்டுகளைக் கழித்திருந்தார். அங்கிருந்து ஹன் கியோவுக்குப் பயணமானார். ஊரின் எல்லையில் வாயிற்காப்போன் அவரைத் தடுத்து, உங்களைப் போன்ற புகழ்பெற்ற ஒரு ஞானி இங்கிருந்து செல்லலாமா? என்று கேட்டான். அதற்கு லாவோ சீ தான் போர் நடக்கும் இடத்திலிருந்து தொலைவில் செல்ல விரும்புவதாக கூறினார். அதற்கு வாயில் காவலன் இத்தனை ஆண்டுகள் தியானத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரிய வேண்டும். நீங்கள் என்னிடம் அதைப் பகிர்ந்துகொண்ட பின்னர்தான் இங்கிருந்து கிளம்ப முடியும் என்றான். இதனால் அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒரு சிறிய நூலொன்றை வேகமாக எழுதிக் கொடுத்துவிட்டு தப்பித்தார் லாவே சீ. அந்த நூல் நகல்களாக எடுக்கப்பட்டு, ஆயிரமாண்டுகளைக் கடந்து வாழ்ந்துவருகிறது.[5]
Remove ads
பெயரியல்
தாவோ என்பதற்குப் பல பொருள்கள் உண்டு, அவற்றுள் இந்த நூலின் தலைப்புக்குப் பொருத்தமானது வழி என்னும் பொருள் ஆகும். தே என்பது நேர்மைக்கு உந்துதல் அல்லது ஊக்கம் தேவை என்று இப்புத்தகத்தில் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ஜிங் என்றால் நூல். ஆக, தாவோ தேஜிங் என்றால் ‘தாவோ’வையும் ‘தே’யையும் பற்றிய நூல் என்று பொருள்
நூல் சாரம்
இந்த நூலில் இன்றைய வாழ்க்கை முறையின் அதீதங்களாகிய போர், ஆயுதங்கள், அதிகாரக்குவிப்பு போன்றவற்றுக்கு எதிரான கருத்துகளை நூல் நெடுகக் காண முடிகிறது. ஆக்கிரமிப்புக்கான போரையும் மரண தண்டனையையும் தவிர்ப்பது, முற்றிலும் எளிமையாக வாழ்வது, தீவிர அதிகாரத்தை வற்புறுத்த மறுப்பது ஆகிய மூன்று வழிகளைப் பரிந்துரைப்பதன் மூலம் நடைமுறை வாழ்க்கைக்கும் நடைமுறைக்கும் அரசியலுக்கும் வழிகாட்டுகிறது.
‘தாவோ’வின் கருத்துகளிலேயே சிறந்ததாகவும் மிகப்பயனுள்ளதாகவும் இருப்பது செயல்படாமை என்ற கருத்தாக்கம்தான். செயல்படாமை என்பது எதையும் செய்யாமல் சும்மா இருப்பது என்ற பொருளில் கூறப்படவில்லை. மிகக் குறைந்த முயற்சியுடன் சரியான நேரத்தில் ஒன்றின் அல்லது ஒருவரின் இயல்பைச் செயல்படவிடுவது என்பது இதன் பொருள் ஆகும். மனிதர்கள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் (தாவோவின் பொருளில்). ஆனால் தமது இயல்பைச் செயல்பட விடுவதில்லை. பெருமளவு முயன்று சிறிதளவு பலனைப் பெறுகின்றனர். ஆனால், செயல்படாமை அப்படியல்ல; தினையளவு முயற்சியைக் கொண்டு மலையளவு பலனை அறுவடை செய்வது ஆகும்.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads