தேம்பாவணி

வீரமாமுனிவர் எழுதிய ஒரு இலக்கியப்படைப்பு From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேம்பாவணி (Thembavani) என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.

இத்தமிழ்க் காப்பியம் பிறமொழி நூல் ஒன்றில் வருகின்ற செய்திகளைத் தழுவி, தமி்ழ் நெறிக்கேற்ப எழுதப்பட்டதாகும். அதாவது, ஸ்பானிய நாட்டு ஆகிருத நகரில் வாழ்ந்த ஆகிர்த மரியாள் (Maríyal de Ágreda) என்னும் கன்னி மறைபொருளான இறைநகரம் (Mystical City of God) என்னும் நூலை, கன்னி மரியாவின் ஆணைப்படி எழுதியதாகக் கூறியுள்ளார்[1]. அந்த நூலில் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றிய செய்திகளும் உண்டு. ஆகிர்த மரியின் அந்நூலைத் தழுவி, தமிழ் மரபுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஏற்ப யோசேப்பின் வரலாற்றை இயற்றியிருக்கிறார் வீரமாமுனிவர்.

Remove ads

தேம்பாவணியின் பொருள்

தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்துத் தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்டு.[2])[3][4] இயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது.[5] சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்.

தேம்பாவணியின் அரங்கேற்றம்

'தேம்பாவணி' கி.பி. 1726-ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது. பல புலவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த வீரமாமுனிவரிடம் தமிழ்ப் புலவர்கள், "எல்லாம் தெரியுமெனக் கூறும்; பெஸ்கி அவர்களே! வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமா?" என நையாண்டியாகக் கேட்டார்கள். பதட்டமின்றி "முப்பது மூன்று கோடி, முப்பதிமூன்று லட்சத்து, முப்பதிமூவாயிரத்து, முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திரங்கள் சந்தேகமிருந்தால் எண்ணிப்பாருங்கள்" என்றதும், சபையில் சிரிப்பொலி எழும்பிப் பலர் முனிவரைப் பாராட்டினார்கள். "தேம்பாவணி"யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு ராஜரிஷி என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தது.

Remove ads

நூலின் அமைப்பு

தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் 12 படலமாக 36 படலங்கள் உள்ளன. மொத்தம் 3,615 விருத்தப் பாக்கள் 90 சந்த வகைகளுடன் பாடப் பெற்றது தேம்பாவணி.

தமிழ் மரபு

தேம்பாவணி ஆசிரியர், வெளி நாட்டவரே ஆயினும், காப்பியக் கதைத் தலைவர் சூசை வாழ்ந்ததும் தமிழ் மண்ணில் இல்லை எனினும், காப்பியம் முழுக்கத் தமிழ் மணம் கமழ்வதாக, தமிழ்ப் பண்பாட்டில் தோய்ந்ததாகவே படைக்கப் பெற்றுள்ளமைக்குப் பல சான்றுகள் கூறலாம்.

பிற தமிழ்க் காப்பியங்களைப் போலவே, சீரிய உலகம் மூன்றும் என மங்கலச் சொற்களைப் பெய்தே, தொடங்குகிறார் ஆசிரியர். இறைவனை வணங்க முற்படும் போது, மேனாடுகளில் வழங்கும் கிறித்தவ மரபுகளைச் சாராது, தமிழ் மரபையே சார்ந்து, இறைவனது பாதங்களையே முதலில் வணங்குவதையும், இறைவனது பாதங்களை மலராகக் காண்பதையும் இங்குக் காண்கிறோம். இறைவனுக்கு வாகனங்களை உரிமை செய்து பாடுவன தமிழகச் சமயங்கள். அத்துடன், இறைவனுக்குரிய கொடிகளாகச் சிலவற்றைக் குறிப்பதும் இங்குள்ள சமய மரபு. இதனைப் பின்பற்றி வீரமாமுனிவரும் திருமகன் இயேசுவை மேக வாகனத்தில் வருபவராகவும், அவரது முன்னோரான தாவீது அரசனைச் சிங்கக் கொடியோன் என்றும் பாடுகிறார்.

மேலும் இறைவனது திருமேனிக்கு வண்ணம் (நிறம்) குறித்துப் பாடுவது, இறைவனைத் தரையில் தலைபட வணங்குவது, கை கூப்பி வணங்குவது, மலர்கள் தூவி வழிபாடு செய்வது, பல்வகை விளக்குகளை ஆலயத்தில் ஏற்றுவது, தேர்த்திருவிழா காண்பது முதலிய பல தமிழ்ச் சமய மரபுகளைத் தம் காப்பியத்தில் வீரமாமுனிவர் இணைத்துள்ளதைக் காண்கிறோம். ஓரிரு இடங்களில் தாம் கூறவரும் செய்திகளுக்கு உவமையாகத் தமிழ்நாட்டுப் புராணச் செய்திகளையும் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு தமிழ் மரபுக் கேற்ப, தம் காப்பியத்தைக் கவிஞர் அமைத்துள்ளமை புலனாகிறது.

தமிழ் இலக்கியத் தாக்கம்

வீரமாமுனிவர் வெளிநாட்டவராக இருந்தும் தமிழ் மரபைக் கருத்தாகக் கடைப்பிடிப்பது சிறப்பு. அவர் வருணிக்கின்ற பாலத்தீன நாடும், எருசலேம் நகரும் தமிழ் மண்ணின் மணம் கமழ்வதாகவே உள்ளன. முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றிய வீரமாமுனிவர் திருவள்ளுவர், சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்கதேவர், கம்பர், மாணிக்கவாசகர் போன்றோரின் நடை, சொல், உவமை, கருத்து போன்றவற்றைச் சூழலுக்குப் பொருத்தமாக எடுத்தாள்கிறார்.

எடுத்துக்காட்டாக, கபிரியேல் வானதூதன் கடவுளின் நற்செய்தியை மரியாவிடம் உரைத்தபோது, மரியா கலக்கமுற்றதையும் அக்கலக்கத்தை வானதூதர் உணர்ந்தறிந்தார் என்பதையும் விளக்கவந்த வீர்மாமுனிவர்

பளிங்கு அடுத்தவற்றைக் காட்டும் பான்மையால் இவள் முகத்தில்
உளம் கடுத்தவற்றை ஓர்ந்த கபிரியேல் உறுதி சொல்வான்... (பாடல்: 535)

என்ற வரிகளில் திருவள்ளுவரின்

அடுத்தது காட்டும் பளிங்குபோல நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

என்னும் குறட்பா அமைவதைக் காணலாம்.

எருசலேம் நகரை வருணிக்கும் வீரமாமுனிவர் இவ்வாறு பாடுகிறார்:

நீர் அல்லதும் அலை இல்லது; நிறை வான் பொருள் இடுவார்
போர் அல்லது பகை இல்லது; புரிவான் மழை பொழியும்
கார் அல்லது கறை இல்லது; கடி காவலும் அறனால்
சீர் அல்லது சிறை இல்லது திரு மா நகர் இடையே (பாடல்: 162)

(பொருள்): "எருசலேம் என்னும் திரு மாநகரில் நீரே அலைபடுவதல்லாமல், வேறு அலைச்சல் இல்லை; நிறைந்த சிறந்த பொருளை இரவலர்க்கு இடுவாரிடையே எழும் போட்டிப் போரேயல்லாமல், பகையால் எழும் போர் இல்லை; தாரையாக வானத்தினின்று மழை பொழியும் கருமேகமே கறை கொண்டுள்ளதல்லாமல், மக்களிடையே எவ்விதக் கறையும் இல்லை. குற்றங்களைக் கடிவதற்கான காவலும் அறவுணர்வினால் சீர் பெறுவதேயல்லாமல், சிறைக்காவல் என்பது இல்லை."

இப்பாடல் சேக்கிழார் வருணிக்கும்

ஓங்குவன மாடநிரை ஒழுகுவன வழுவில் அறம்
நீங்குவன தீங்குநெறி நெருங்குவன பெருங்குடிகள்...

என்னும் பாடல் வரிகளை ஒத்திருப்பதைக் காணலாம்.

அவலச் சுவையை வெளிப்படுத்துவதில் தமிழுக்கு இணையான வேறொரு மொழி காணல் அரிது. காணாமற்போன தம் திருமகன் இயேசுவைத் தேடி அலையும் யோசேப்பு புலம்புவதை வீரமாமுனிவர் பாடுகிறார்:

பொன் ஆர் சிறகால் புட்கரம் சேர் புள்குலமே,
என் ஆர் உயிரே, என் நெஞ்சத்து ஆள் அரசே,
ஒன்னார் மனம் நேர் வனம் சேர உற்ற வழி,
அன்னான் நாட, அறையீரோ எனக்கு?" என்றான். (பாடல்: 3143)

(பொருள்): "பொன் போன்ற அழகிய சிறகுகளால் வானம் சேரும் திறம் கொண்ட பறவை இனங்களே, எனக்கு அரிய உயிர்போன்றவனும் என் உள்ளத்தில் அமர்ந்து ஆளும் அரசனுமாகிய திருமகன், பகைவர் மனம்போல் இருண்ட வனத்தை அடையச் சென்ற வழியை, அவனை நான் தேடிக் காணும் பொருட்டு, எனக்குச் சொல்ல மாட்டீரோ?" என்றான்.

அறக் கடல் நீயே; அருள் கடல் நீயே; அருங் கருணாகரன் நீயே;
திறக் கடல் நீயே; திருக் கடல் நீயே; திருந்து உளம் ஒளிபட ஞான
நிறக் கடல் நீயே; நிகர் கடந்து, உலகின் நிலையும் நீ; உயிரும் நீ; நிலை நான்
பெறக் கடல் நீயே; தாயும் நீ எனக்கு; பிதாவும் நீ அனைத்தும் நீ அன்றோ? (பாடல்: 487)

(பொருள்): "அறத்தின் கடலாய் இருப்பவனும் நீயே; அருளின் கடலாய் இருப்பவனும் நீயே; அரிய கருணைக்கு இருப்பிடமானவனும் நீயே; வல்லமையின் கடலாய் இருப்பவனும் நீயே; செல்வக் கடலாய் இருப்பவனும் நீயே; திருந்திய மக்களின் உள்ளம் ஒளி பெறுமாறு ஞான அழகின் கடலாய் இருப்பவனும் நீயே; ஒப்புமையெல்லாம் கடந்து நின்று, இவ்வுலகின் நிலைக்களனாய் இருப்பவனும் நீயே; அதன் உயிராய் இருப்பவனும் நீயே; நான் நிலைபெறக் கடல்போல் நின்று தாங்குபவனும் நீ எனக்குத் தாயாய் இருப்பவனும் நீ; தந்தையாய் இருப்பவனும் நீயே; அனைத்தும் நீயே அல்லவா?"

தேம்பாவணியின் இப்பாடலில் திருவாசக மணம் கமழ்கிறது.

Remove ads

நூலின் சிறப்பு

தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு.

தேம்பாவணியில் சில வரிகள்

தேம்பாவணியில் உள்ள கடவுள் வாழ்த்தில் உள்ள சில வரிகள்:

 
கார்த்திரள் மறையாக் கடலிலுண் மூழ்காக்
   கடையிலா தொளிர்பரஞ் சுடரே
நீர்த்திரள் சுருட்டி மாறலை யின்றி
   நிலைபெறுஞ் செல்வநற் கடலே
போர்த்திரள் பொருதக் கதுவிடா வரணே
   பூவனந் தாங்கிய பொறையே
சூர்த்திரள் பயக்கு நோய்த்திரள் துடைத்துத்
   துகடுடைத் துயிர்தரு மமுதே

தேம்பாவணியில் விவிலியச் செய்திகள்

வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி கிறித்தவ விவிலியத்தில் வருகின்ற பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கியுள்ளது. அவை 150க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன.

அதே நேரத்தில் விவிலியத்தில் காணப்படாத பல செய்திகளையும் தேம்பாவணி கொண்டுள்ளது. அச்செய்திகள் பலவற்றையும் வீரமாமுனிவர் ஆகிர்த மரியாவின் நூலிலிருந்து பெற்றார். எடுத்துக்காட்டாக, யோசேப்பு துறவறம் புகச் சென்றபோது கடவுளருளால் மனம் மாறி, இல்லறத்திலேயே துறவியாக வாழ முடிவுசெய்து எருசலேம் கோவில் செல்வதும், அங்கு ஏற்கனவே கன்னியாக அர்ப்பணிக்கப்பட்டு வாழ்ந்த மரியா திருமணம் செய்ய முன்வந்தபோது அங்கே வரிசையாக நின்றுகொண்டிருந்த ஆடவர்களுள் யோசேப்பு கையில் பிடித்திருந்த கோல் அதிசயமாகத் தளிர்விட்டு, பூக்களால் நிறைந்ததும் அதையே கடவுள் தாம் யாரை மணக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் என்று மரியா விளக்கம் பெற்று யோசேப்பை மணப்பதையும் குறிப்பிடலாம்.

Remove ads

யோசேப்பு பிடித்திருந்த கோல் துளிர்விட்டுப் பூத்துக் குலுங்கல்

திறல் ஆர் திரு நீரிய தீம் கொடியைப்
பெறல் ஆக எனக்கு ஒரு பேறு உளதோ
துறவாய் மணம் நீக்குப சொல்லிய பின்
உறல் ஆம் மணமோ என உள்ளினன் ஆல். (பாடல் எண் 397)

(பொருள்: "வல்லமை பொருந்திய வானுலகச் செல்வமே போன்ற இனிய மலர்க் கொடியாகிய மரியாவை மனைவியாகப் பெறத்தக்க ஒரு பேறு எனக்கு உண்டோ? மேலும், துறவு மேற்கொண்டு, திருமணத்தை விலக்கி வாழ்வதாக வாக்குறுதி சொல்லியபின் மணம் புரிந்து கொள்ளுதல் தகுமோ என்றெல்லாம் யோசேப்பு எண்ணினான்.")

உள்ளும் பொழுதே இவன் ஓங்கிய கோல்
கள்ளும் கடியும் பொழி காமர் இதழ்
விள்ளும் செழு வெண்மலர் பூத்தமையால்
மள்ளும் விரை ஆலயம் மல்கியதே. (பாடல் எண் 398)

(பொருள்: "துறவறம் கடைப்பிடிக்க எண்ணிய யோசேப்பு, கடவுளின் திட்டப்படி மரியாவை மணக்க வேண்டிய நிலை பற்றி எண்ணத்தில் ஆழ்ந்திருந்த பொழுதே அவர் உயர்த்திப்பிடித்திருந்த கோலில் தேனும் மணமும் பொழியும் அழகிய இதழ் விரியும் செழுமையான வெண்ணிற லீலி மலர்கள் பூத்தமையால் பரவுகின்ற வாசனை எருசலேம் கோவில் முழுவதும் நிறைந்தது.")

காம்பா அணிகாட்டிய கன்னி நலத்து
ஓம்பா அணி இவ்அணி ஓர்ந்த பிரான்
நாம்பா அணி நம்பியை நல்கிட ஓர்
தேம்பா அணிஆம் கொடி சேர்த்தன் என்றார். (பாடல் எண் 399)

(பொருள்: "மெலியாத அழகைத் தன்னகத்தே கொண்டு நின்ற கன்னி மரியாவின் நன்மைக்கு இவ்வுலக அழகெல்லாம் வேண்டாத அழகு என்று உணர்ந்த ஆண்டவன், கெடாத அழகுடைய ஆண்களில் சிறந்தவனாகிய யோசேப்பையே ஓர் அழகாகச் சேர்த்துக் கொடுக்கும் அறிகுறியாக, ஒரு வாடாத மாலை போன்ற இம்மலர்க் கொடியை அவனுக்குத் தந்தான் என்று அனைவரும் கூறினர்.)

Remove ads

இயேசு, மரியா, யோசேப்பு ஆகியோரின் இணைந்த வரலாறு

தேம்பாவணியின் காப்பியத் தலைவனாக யோசேப்பு (சூசை, வளன்) இருந்த போதிலும், அங்கே அன்னை மரியா மற்றும் இயேசுவின் வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளது.

மரியாவை மணந்த பின்னரும் திருமண உறவில் ஈடுபடவில்லை யோசேப்பு. மரியா கடவுளின் துணையால் கருத்தாங்கி ஒரு மகவை பெற்றெடுத்து அவருக்கு "இயேசு" என்று பெயரிடுகிறார். கன்னியும் தாயுமாகவும் விளங்குகின்ற மரியாவின் பெருமையை வீரமாமுனிவர் தேம்பாவணியில் இவ்வாறு பாடுகிறார்:

உலகம் மூன்றினும் உவமை நீக்கிய,
இலயை மூன்றினும் இழிவு இல் கன்னியாய்,
அலகு இல் மூன்றினுள் நடுவ மைந்தனை,
நிலவு மூன்றினும் நிறப்ப ஈன்றனள். (பாடல் எண் 946)

(பொருள்): "மூன்று உலகங்களிலும் இதற்கு ஓர் ஒப்புமை இல்லாத தன்மையாய், முக்காலங்களிலும் பழுதில்லாக் கன்னியாய்த் தான் இருந்தே, அளவில்லாத தெய்வ மூன்றாட்களுள் நடுப்பட்டு நிற்கும். மகனாம் ஆண்டவனை, முச்சுடர்களினும் சிறந்து விளங்க மரியாள் பெற்றெடுத்தாள்").

"இலயை மூன்றினும்" என்னும் சொற்றொடர் மரியா மகனைப் பெறு முன்னும் பெற்ற போதும் பெற்ற பின்னுமாக முப்பொழுதும் கன்னியாகவே விளங்கினர் என்று பொருள்படும்.

வாய்ப் படா நுழை பளிங்கின் வாய் கதிர்
போய்ப் படா ஒளி படரும் போன்று, தாய்
நோய்ப் படாது, அருங் கன்னி நூக்கு இலாது,
ஆய்ப் படா வயத்து அமலன் தோன்றினான். (பாடல் எண் 947)

(பொருள்): "கண்ணாடியிடத்து வாயில் இல்லாமல் நுழையும் பகலவனின் கதிர் உள்ளே போய்க் கெடாத ஒளியைப் பரப்புதல் போன்று, எக்குற்றமுமற்ற ஆண்டவன் ஆராய்ச்சிக்கு எட்டாத வல்லமையோடு, தன் தாய் பேறுகால நோவு அடையாமலும், அவளது அரிய கன்னிமைக்கு அழிவில்லாமலும் மகனாய்ப் பிறந்து தோன்றினான்".

Remove ads

தேம்பாவணியில் யோசேப்பின் வரலாறு

இயேசுவின் பிறப்புக்குப் பின்னர் யோசேப்பும் மரியாவும் தம் குழந்தையோடு நாசரேத்து வந்து அங்கு சில ஆண்டுகள் வாழ்கின்றனர். பின்னர், பாட்டுடைத் தலைவராகிய யோசேப்பைப் பிணிசேர்கின்றது. அவர் அதனைப் பொறுமையோடு தாங்கிக் கொள்கிறார். பின்னர் யோசேப்பு உயிர்துறக்கிறார்.

இறந்த யோசேப்பு மண்ணுலகோராலும் விண்ணுலகோராலும் முடிசூட்டப் பெறுகிறார்.

இந்நிகழ்வுகளைத் தேம்பாவணி கலைநயம் இலக்கிய நயம் பொருந்த பாடுகின்றது.

நீதிநூல்

தேம்பாவணிக் காப்பியம் இயற்கை வனப்பில் இறைவனின் தோற்றம், இல்லறம் துறவறம் ஆகியவற்றின் மாட்சி, உழைப்பின் மேன்மை, வறுமையில் செழுமை, கற்பின் பெருமை, கடவுளின் இலக்கணம், வானோர் உயர்வு, நரகோர் தாழ்வு, பாவத்தின் கொடுமை, அறத்தின் மேன்மை, காதலின் பெருமை, காமத்தின் தீமை ஆகியவற்றை விளக்கும் நீதி நூலாகவும் விளங்குகிறது.

மறை உண்மைகள்

தேம்பாவணியில் வீரமாமுனிவர் கிறித்தவ மறை உண்மைகளைத் துல்லியமாக எடுத்துரைக்கிறார். மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய மகன் இவ்வுலகில் இயேசு கிறித்துவாக வந்து அவதரிக்கும் நிகழ்ச்சி, அவருடைய தாய் அன்னை மரியா அவரைக் கன்னியாகக் கருத்தரித்து, தம் கன்னிமை கெடாமலே அவரை ஈன்றளித்த செய்தி, இயேசு மனித குலத்தின் பாவத்திலிருந்து மக்களை மீட்டு விண்ணகப் பேற்றினை ஈந்திட தம் உயிரைச் சிலுவையில் கையளித்து மீண்டும் உயிர்பெற்றெழுந்த செய்தி போன்றவை தேம்பாவணியில் விளக்கம் பெறுகின்றன.

Remove ads

யோசேப்பின் மாட்சி

புனித யோசேப்பைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ள தேம்பாவணியில் அவருடைய மாட்சி பல இடங்களில் பாடப்படுகிறது. யோசேப்பு இவ்வுலகில் மரியாவையும் இயேசுவையும் அன்போடு பாதுகாத்து வளர்த்து, கடவுளின் திட்டத்தை விருப்புடன் நிறைவேற்றினார் என்பதுவே அவருக்கு இறைவன் மாட்சி அளித்ததற்கு அடிப்படை ஆகும்.

உன் உயிர் தன்னினும் ஓம்பி, தாய் மகன்
இன் உயிர் காத்தனை, இனி, பயன் கொளீஇ,
மன் உயிர் பெறும் கதி வானில் வந்து உறீஇ,
நின் உயிர் வாழ்தலே நீதி ஆம் அரோ (பாடல்: 3344)

(பொருள்): "கன்னித் தாயும் திருமகனுமாகிய இருவர் தம் இனிய உயிரை, நீ உன் உயிரைக் காட்டிலும் பேணிப் பாதுகாத்தாய்; இனி, அதன் பயனை நீ பெறக்கொண்டு, நிலையான மனித உயிர்கள் பெறுதற்குரிய கதியாகிய வான் வீட்டில் வந்தடைந்து, உன் உயிர் என்றும் நிலையாக வாழ்தலே நீதியாகும்."

இவ்வாறு, யோசேப்பின் புகழை இறைவனே எடுத்துரைப்பதாக வீரமாமுனிவர் பாடுகிறார்.

யோசேப்பு உயிர்துறத்தல்

பிணிவாய்ப்பட்டு யோசேப்பு இறக்கும் நிலையில் உள்ளார். அப்போது அவரைச் சூழ்ந்து அவர்தம் மனைவி மரியாவும் அன்புக் குழந்தை இயேசுவும் நிற்கின்றனர். அவர்களது அன்பை உணர்கிறார் யோசேப்பு. அவருடைய உள்ளத்திலும் அன்பு ததும்புகிறது. அந்த அன்பின் வலிமை அவருடைய உயிர் உடலை விட்டுப் பிரிய விடாமல் பிடித்துவைக்கிறது என தேம்பாவணியில் பாடுகிறார் வீரமாமுனிவர்.

மூ உலகு அனைத்தும் தாங்கும் முதலவன் ஒருபால், ஓர் பால்
தே உலகு அனைத்தும் ஏத்தும் தேவதாய் தாங்க, சூசை
மே உலகு உள்ளி யாக்கை விடும் உயிர்தனை அன்பு ஒன்றே
பூ உலகு இருத்தினாற் போல் பூங் கரம் கூப்பி நின்றான்.

(பொருள்): "வி்ண் மண் பாதலமென்னும் மூன்று உலகங்கள் முழுவதையும் தாங்கி நடத்தும் ஆண்டவனாகிய திருமகன் ஒரு பக்கமும், தெய்வ உலகம் முழுவதும் போற்றும் தேவ தாயாகிய மரியா மற்றொரு பக்கமும் தன்னைத் தாங்கிக் கொண்டிருக்க, மேலுலகத்தை நினைந்து உடலைவிட்டுப் பிரியவிருந்த தன் உயிரை, அவ்விருவர் மீது கொண்டஅன்பு ஒன்றே இம்மண்ணுலகில் பிடித்து வைத்து இருத்தினாற்போல், சூசை தனது மலர்போன்ற கைகளைக் குவித்த வண்ணம் நின்றான்."

ஆதாரங்கள்

  1.   "Constanzo Giuseppe Beschi". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
  2. Sundar, James (19 July 2009). "James Sundar Chithambaram: Research on Beschi's Tembavani".
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads