பங்கிம் சந்திர சட்டர்ஜி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.
இக்கட்டுரை விக்கிப்பீடியாவின் பதிப்புரிமைக் கொள்கைக்கு ஏற்புடையதாய் இல்லாமல் இருக்கலாம். இது குறித்த முறைப்பாடை இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் காணலாம். |
Remove ads
வாழ்க்கை
பங்கிம் சந்திரர் 1838 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம்நாள் கொல்கத்தா அருகில் உள்ள கந்தலபாறை என்ற இடத்தில் பிராமணக் குடும்பத்தில் துர்கா சுந்தரி தேவி மற்றும் ஜாதவ் சந்திர சட்டோபாத்தியாயா என்ற தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். ஜாதவ் சந்திரர் ஒரு துணை நீதிபதி. நற்பண்பு நிறைந்தவர். பங்கிமின் மூத்த சகோதரரான சஞ்சீவ் சந்திரா ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். அவருடைய பாலமோ என்ற வங்க மொழியில் எழுதப்பட்ட பயண நூல் முக்கியமான பயண நூல்களில் ஒன்று. பங்கிம் சந்திரர் வங்காளத்திலும் இந்தியாவில் நன்கறியப்பட்ட, ஓர் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராக, மிகப்பரவலாக அறியப்பட்டவராவார்.[3] இவருடைய நாவல்கள், கருத்துக்கட்டுரைகள் ஆகியவை இந்திய மரபுமுறையான கட்டுப்பாடான எழுத்துப்போக்கினை உடைத்தெறிந்தது. இந்தியாவிற்கு வெளியேயும் இவரது எழுத்துக்கள் பிற எழுத்தாளர்களுக்கு ஒரு உத்வேகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தின.[3] அக்கால வழக்கப்படி அவருக்கு பதினொன்றாம் வயதில் ஐந்து வயது சிறுமி ஒருத்தியுடன் திருமணம் நடை பெற்றது. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தார், 1859 இல் மனைவி இறந்தபிறகு பின்னர் அவர் ராஜலக்ஷ்மி தேவி என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகள்கள் இருந்தனர்.
பிபின் சந்திர பால் 1906 ஆகஸ்டு மாதம் ஒரு தேசிய இதழைத் தொடங்கிய போது அவ்விதழுக்கு வந்தே மாதரம் எனப்பெயரிட்டார். இது சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலின் தாக்கத்தால் வைத்த பெயராகும். லாலா லஜபதி ராய் தனது இதழுக்கும் இப்பெயரினையே சூட்டினார்.
Remove ads
கல்வி
மேதினிப்பூரில் 1856ஆம் ஆண்டு வரை ஒரு கான்வென்ட் பள்ளியில் கடுமையான பள்ளிப் படிப்பை முடித்த பங்கிம் கொல்கத்தா பிரெசிடென்சி கல்லூரியில் சட்டம் படிக்க சேர்ந்தார். 1857ஆம் வருடம் கொல்கத்தா பல்கலைகழகத்தின் சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றார். 1858ம் ஆண்டு பல்கலை கழகத்தில் இளங்கலைத் தேர்வை எழுதினர். ஆறு தாள்கள் கொண்ட மொழிப் பாடமான வங்காள மொழிப் பாடத்திற்கான தேர்வில் அவரால் ஒரே ஒரு தாளில் மட்டும் தேர்வு பெற முடியவில்லை. கருணை மதிப்பெண்கள் போடப்பட்டதால் பங்கிமும் அவர் நண்பர் ஜாது நாத் பாசு அவர்களும் தேர்ச்சி பெற்றனர். கொல்கத்தா பல்கலைகழகத்தின் முதல் பட்டதாரிகள் என்ற சிறப்பை பெற்றனர்.[4]
படிப்பை முடித்துக் கொண்டு 1858 முதல் 1891 இல் அவர் ஓய்வு பெறும் வரை பிரித்தானிய அரசில் துணை நீதிபதியாகவும் பின்னர் துணை ஆட்சியராகவும் பணி புரிந்தார். ஆங்கில அரசாங்கத்துடன் அவ்வப்பொழுது மோதல்கள் நிகழ்ந்தாலும் தன் பணியை அவர் சிறப்புறச் செய்து வந்தார்.[5]
Remove ads
எழுத்துப்பணி
தொடக்கக்காலத்தில் பங்கிமின் எழுத்துப் பணி ஈஸ்வர சந்திரா குப்தா என்பவர் வெளியிட்ட வாரந்தரியான சங்க்பத் பிரபாகர் என்ற இதழில்தான் தொடங்கியது.[6] இது அவர் சிறந்த எழுத்தாளர் ஆவதற்கு நல்ல முன்முயற்சியாக இருந்தது. பங்கிமின் முதல் நாவலான 'ராஜ்மோகனின் மனைவி' (1864) என்ற நாவல் முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளியிடப்படாமலே இருந்தது பின்னர் அந்நூலை பங்கிம் வங்காளத்தில் எழுதி வெளியிட்டார். அவர் வங்காள மொழியில் எழுதிய முதல் நாவல் துர்கேஷ் நந்தனி 1865 ஆம் வருடம் வெளியானது. கபால குந்தளம்(1866), மிர்ணாளினி, தேவி சௌதாரிணி மற்றும் 'ஆனந்த மடம்' போன்றவை அவருடைய மிகச் சிறந்த நாவல்கள். அவர் எழுத்தாளராக வாழ்ந்த காலங்களில் ஏராளமான சிறந்த படைப்புகளை நாளிதழ்களுக்கும் தினசரித் தாள்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார். அரசியல், பொருளாதாரம், சமுகம், மதம், தத்துவம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவை குறித்த பல நூல்களை எழுதியுள்ளார்.
மறைவு
உடல் நலக் கோளாறு காரணமாக அவர் தனது பணியிலிருந்து 1891 ஆம் வருடம் விருப்ப ஒய்வு பெற்றார்.அதன் பின்னர் ஆன்மிகத்தில் ஈடுபட்டார். 1894ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் நாள் தனது 56 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads