பாலமேடு ஜல்லிக்கட்டு

From Wikipedia, the free encyclopedia

பாலமேடு ஜல்லிக்கட்டு
Remove ads

மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு என்னும் ஊரில் ஆண்டுதோறும் பொங்கல் நிகழ்ச்சியைக் கொண்டாடும் பொருட்டு நடத்தப்படும் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று ஆகும். இவ்வூரில் நடக்கும் இவ் விளையாட்டைக் காண பல ஊர்களிலிருந்து ஏராளமான பொதுமக்களும், வெளி நாட்டுப் பயணிகளும் வந்து கூடுவது ஆண்டுதோறும் வழக்கம். இதனை ஏறுதழுவல் என்றும் அழைப்பர். 500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வீர விளையாட்டு இருந்ததற்கானச் சான்றுகள் கிடைத்துள்ளன[1].

Thumb
பாலமேடு ஜல்லிக்கட்டு
Remove ads

வீரர்கள்

மாடுபிடிக்கும் வீரர்களுக்குச் சமீபகாலமாக சீருடைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு இங்கு நடந்த ஜல்லிக்கட்டில் மஞ்சள் நிறத்தில் மேலாடையும், நீல நிறத்தில் கால் சட்டையும் சீருடையாக இருந்தது. சீருடை அணிந்து வீரர்கள் மக்களின் ஆரவாரத்திற்கிடையே தடுப்பினுள் தயாராக இருப்பார்கள். "வாடிவாசல்" என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து காளைகள் விரட்டிவிடப்படும். அதன் கொம்புகள் நேர்த்தியாக சீவப்பட்டு அதன் மேல் நாணயங்கள் கட்டப்பட்ட பொதி ஒன்றையும் கொம்பில் சுமந்து ஆக்ரோசமாக விரைந்து வரும். அக்காளைகளின் திமிலை வீரர்கள் லாவகமாக பிடித்து அடக்குவார்கள்.

Remove ads

பரிசுப் பொருட்கள்

மாட்டை அடக்கும் வீரர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைத்ததாக வரலாறு கூறினாலும், தற்போது தங்க நாணயங்களோடு மிதிவண்டிகள், மிக்சிகள், கைபேசிகள், பாத்திரங்கள், வயர் பின்னப்பட்ட கட்டில்கள், அலமாரிகள் போன்றவையும் பரிசாக கொடுக்கப்படுகிறது.[2]

காளைகள்

இங்கு வரும் காளைகள் இந்த ஊரிலிருந்து மட்டுமின்றி மதுரை மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், தேனி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் போன்ற மாவட்டங்களில் உள்ள ஊர்களிலிருந்தும் வந்து போட்டியில் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது.

2023

2023 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் நாள் மஞ்சள்மலை ஆற்று மைதானத்தில் அமைச்சர் பி. மூர்த்தி போட்டியைத் துவக்கி வைத்தார். இதில் 335 மாடுபிடி வீரர்களும், வாடிவாசலில் 750 முதல் 1,000 காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.[3] முதல் இடத்தைப் பிடித்த மணி என்பவர் 16 காளைகளையும், இரண்டாமிடம் பிடித்த ராஜா என்பவர் 11 காளைகளையும், மூன்றாமிடம் பிடித்த அரவிந்த் என்பவர் 9 காளைகளையும் பிடித்தனர்.[4] இதில் மொத்தம் நான்கு சுற்று முடிவில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 18 நபர்கள் காயமடைந்தனர்.[5][6]

Remove ads

2024

சுமார் 847க்கும் மேற்பட்ட காளைகளும் 485 வீரர்களும் கலந்து கொண்ட, பத்து சுற்றுகள் நடைபெற்ற போட்டியில், பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதல் பரிசையும் (கார்),[7] சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசையும், 8 காளைகளை பிடித்த கொந்தகை பாண்டீஸ்வரன் மூன்றாம் பரிசையும் பெற்றனர். புதுக்கோட்டை சின்னகருப்பு காளை சிறந்ததாகத் தேர்வாகி காரினைப் பரிசாக வென்றது.[8]

2025

இந்த ஆண்டு சுமார் 930 காளைகள் பங்கேற்றன.[9] திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபன் 14 காளைகளை அடக்கி முதல் (மகிழுந்து) பரிசையும், மஞ்சம்பட்டி துளசிராம் 12 காளைகளை அடக்கி இரண்டாவது பரிசையும் (பைக்), பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் 11 காளைகளை அடக்கி மூன்றாவது பரிசையும் (மின்சார பைக்) பெற்றனர். சிறந்த காளைக்கான முதல்பரிசு (டிராக்டர்) சத்திரப்பட்டி தீபக், இரண்டாவது பரிசு (நாட்டின பசுவும், கன்றும்) சின்னப்பட்டி கார்த்திக், மூன்றாவது பரிசு (வேளாண் கருவி) குருவித்துறை பவித்ரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.[10]

Remove ads

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads